

’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” ...


’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்
ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.
இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake என்ற (57 வயது) குடிகார பாடகன்(Country Singer) கதாபாத்திரம். ஒரு காலத்தில் புகழுடன் இருந்து, பின்பு நொடித்துப் போய், தெருவோர பார்களில் பாடிக்கொண்டிருப்பவர். இவருடன் இணைந்து முன்பு பாடிக்கொண்டிருந்த டாமி, இப்போது பெரிய நட்சத்திரம். திருமண வாழ்வில் தொடர் தோல்விகள், இசை உலகில் வீழ்ச்சி, தீராத குடிப்பழக்கம் என அழுகிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. இந்நிலையில், பத்திரிக்கைக்காக தன்னை பேட்டி காண வரும் ஜீன் என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஜீனும் அவளது ஐந்து வயது மகனும் அவரது வாழ்வில் நம்பிக்கைகான ஒளியைத் தருகிறார்கள். இவர்களை பற்றுக்கொடியாகக் கொண்டு எப்படியாவது மீண்டுவரத் துடிக்கிறார். பெரும்பாலும் ஊகித்துவிடக் கூடிய தட்டையான கதையமைப்பு. எனினும்,இந்தப் படத்தை முக்கியமான படங்களின் வரிசையில் சேர்ப்பது ஜெஃப் ப்ரிட்ஜஸின் நடிப்பும், மென்மையான இசையும் தான்.
ப்ரிட்ஜஸின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்(திரை ஆளுமை!) அலாதியானது. நடை, உடை, கையசைவு, சிறு செருமல், சோர்வு என நுணுக்கமான விவரங்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தோல்வியுற்ற பாடகனை கண்முன் கொண்டுவருகிறார். விஸ்கியில் தோய்ந்த குரலில்அவர் பாடல்களைப் பாடும் போது ஜெஃப் ப்ரிட்ஜஸ் என்ற நடிகன் முழுமையாக மறைந்து Bad Blake என்ற பாடகன் உருக்கொள்கிறான். இதை விட ஒரு நடிகனுக்கு மகத்தான வெற்றி வேறென்ன இருக்க முடியும்?
இதற்கும் 'சென்ட் ஆஃப் அ வுமன்' படத்தில் அல்பசீனோவுக்கு
கிடைத்தது போல ஆளுமையை விவரிக்கும் பிரத்தியேக காட்சிகள் எதுவும் கிடையாது.கதையின் ஓட்டத்தில் முழுமையாகக் கரைந்து பல இடங்களில் அன்டர் ப்ளே(under play) செய்திருக்கிறார். ஜீனாக வரும் மேகி கில்லெனால், ராபர்ட் டூவெல், காலின் ஃபேரல் ஆகியோர் கன கச்சிதமாக அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். படத்தில் ஆங்காஙே வரும் கவிதுவமான வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.
(Jean: “Where’d all those songs come from?”
Bad Blake:“Life, unfortunately.” )
படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் இசை.பொதுவாக ஆங்கில பாடல்களைக் கேட்க்கும் வழக்கமில்லாத எனக்கே பாடல்களை திரையில் கேட்க இனிமையாக இருந்தன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி-போன் பர்னெட் மற்றும் (late) ஸ்டீஃபன் ப்ரூட்டன் அருமையான பாடல்களைத்
தந்திருக்கிறார்கள். குறிப்பாக "Weary kind" பாடல் இந்த முறை சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் வென்றிருக்கிறது.கேட்டுப் பாருங்கள்.
இயக்குனர் ஸ்காட் கூப்பர் பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்திருந்தாலும் இதுவே அவருக்கு முதல் படம்.திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், போரடிக்காமல் செல்கிறது. ஜெஃப் ப்ரிட்ஜஸிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஜெஃப் ப்ரிட்ஜஸின் ஆகச்சிறந்க்ட நடிப்பாக 'பிக் லெபோஸ்கி'(Big lebowski) என்ற படத்தில் நடித்ததைக் குறிப்பிடுவார்கள். இந்த படத்திற்குபபின் அது மாறலாம்.
Congratz Dude!!


எந்திரனில் ரஜினிக்கு சம்பளம் 25 கோடியாக இருக்கலாம். இயக்குனர் ஷங்கர் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெறலாம். ஆனால் ...


இன்றைய நிலையில் ரஜினி ஒரு படத்திற்காக 2 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நடிக்க வேண்டிய அவசியமோ, ஷங்கர் போல இயக்குனர்களிடம் அவர்கள் சொல்வதை மதித்து அது போல் நடிக்க வேண்டிய தேவையோ இல்லை!
ஷங்கரையும், ரஜினியையும் எந்திரனுக்காக இவர்கள் உழைக்கும் இந்த கடின உழைப்புக்கு பாராட்டுவதிலென்ன தப்புங்க?

![]() |
| 2 டியில் இருந்து 3 டிக்கு |
![]() |
| 'வடை போச்சே' - 3 டியில் வந்து இருக்க வேண்டிய படம் |
![]() |
| "Shrek" நான்காம் பாகமும் 3 டியில் வருகிறது |
![]() |
| "Tron Legacy" கொக்கா மக்கா 3 டி மிரட்டல் |
![]() |
| "Tron Legacy " - ஒபெநிங் எல்லாம் நல்லா தான் இருக்கு |
![]() |
| "Up" 3 டியில் மிகப்பெரும் ஹிட்டானதைத் தொடர்ந்து "Toy Story" யும் 3 டியில் |


வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் சினிமா வயதுக்கு வருவதின் அடையாளங்களையும் தடயங்களையும் இதில் ...

இந்தப் படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. திரைக்கதையும் கூட சுமார்தான். ஆனால் திறமையாக உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வைகள்தான் இப்படத்தின் பலம் என நினைக்கிறேன். உதாரணமாக அந்த நண்பர்கள் குழு கஞ்சா புகைத்து விட்டு சுவாதீனமேயில்லாமல் உரையாடு்ம் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சியில் பிரேம்ஜியின் நடிப்பு தரமானதாக இருந்தது. அப்படியொரு மினி-சைக்கோ பாத்திரத்தை ஏற்றதற்காக சிநேகாவை பாராட்ட வேண்டும். கிராமத்து பஞ்சாயத்து காட்சிகளிலும் தரமான ஒளிந்திருக்கும் கிண்டல். சீரியஸாக சென்று கொண்டிருக்கும் காட்சிகளிலுள்ள நகைச்சுவையை நாம் தான் கண்டுணர வேண்டியிருக்கும். அந்த மாதிரியான 'மேக்கிங்கில்'தான் இந்தப்படத்தின் தனித்தன்மையை உணர முடிகிறது.
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் மீதான ஆவலை 'கோவா' உருவாக்கியிருக்கிறது.
பரவலாக பாராட்டப் பட்ட 'தமிழ்ப்படம்' எனக்கு அவ்வளவு திருப்தியை அளிக்கவில்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்தியது. மற்ற படங்களின் கிளிஷேக்களை தொடர்ந்து கிண்டல் செய்த போது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் அதுவே மொண்ணைத்தனமாக தொடரும் போது இந்தப்படமே ஒரு கிளிஷேவாக மாறிப் போன அபத்தம் நிகழ்ந்து விட்டது. இதையெல்லாம் பாலாஜி, சந்தானம், ஜீவா குழுவினர் இதை விட அற்புதமாக செய்துவிட்டதால் இந்தப்படமே 'லொள்ளு சபா' போன்ற நிகழ்ச்சியின் ஹை-பட்ஜெட் வடிவம் போலாகி விட்டது. இன்னும் கொஞ்சம் சீரியஸாக உழைத்திருக்கலாம். 'இந்தப்பாடலை சிவா பாடிக் கொண்டிருக்கிறார் (என்று போட சொன்னார்), பாப் மயூசிக் குடும்பப் பாடல், தமிழ் சினிமாவின் அபத்தமான பாட்டு வரிகளை கிண்டலடிக்கும் .. ஓ.மகசீயா....போன்ற சிறந்த நக்கல்களால் இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிந்தது.என்றாலும் தமிழ் சினிமாவின் உளுத்துப் போன கிளிஷேக்களையும், அதன் தரத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்தாதாமல் கல்லாப்பெட்டியிலேயே குறியாக இருந்த இயக்குநர்களையும் சூப்பர் ஸ்டார்களையும், ஒழுங்காக மூத்திரம் போகத் தெரியாத பையன்கள் கூட அரசியல் கனவுகளுடன் பஞ்ச் டயலாக் பேசும் அபத்தங்களையும் செருப்பால் அடித்த ஒரே காரணத்திற்காகவே இந்தப் படத்தை பாராட்ட வேண்டும்.
suresh kannan


சமீபத்தில் “அன்புள்ள மான்விழியே”(குழந்தையும் தெய்வமும்-1965-எம்-ஸ்.விஸ்வநாதன்) என்ற ஒரு அற்புதமான மெலடியை (ரீமிக்ஸ்)”ஜக்குபாய்” என்ற படத்தில் போட்டிருக்கிறார்கள். ஒரிஜனல் பாட்டின் பின்னணியில் வரும் வரும் bango drum ...

ஒரிஜனல் பாட்டின் பின்னணியில் வரும் வரும் bango drum ரிதம் அருமையாக இருக்கும்.பாட்டின் வரிகளும்,பாடகர்கள் பாடிய விதமும், காட்சி அமைப்பும் படத்தின் ஜீவனை வெளிப்படுத்தும்.
ஆனால் "ஜக்குபாயில்" அதை "ஆஃப் பாயி"லாக்கி, ரீமிக்ஸ் என்று ரிவிட் அடித்து ரேப் செய்துவிட்டார்கள்.
ரீமிக்ஸின் தத்துவம் என்ன?ஒண்ணுமே பிரியல?தல சுத்துது.
காட்சி:(ஒரிஜினலின் வீடியோ கிடைக்கவில்லை)
ஜெய்சங்கரின் அன்புள்ள மான்விழி(யே)

அன்புள்ள மான்விழியே -ரீமிக்ஸ்-வீடியோ
அன்புள்ள மான்விழியே-ஒரிஜினல்-ஆடியோ


இது “Feel Good Movie”-க்களின் யுகம். தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ...

இது “Feel Good Movie”-க்களின் யுகம். தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, அதனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மை நேம் இஸ் கான் இதே பட்டியலில் தான் வருகிறது.
…
சிறு வயது முதல் “Asperger syndrome” எனும் நோயினால் பாதிக்கப்பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக் கான்), தனது தாயின் மரணத்தையொட்டி, அமெரிக்காவில் வாழும் தம்பியுடன் வாழச் செல்கிறான். அங்கே, மந்திரா(காஜோல்) எனும் விவாகரத்தான பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறான். அவளது மகன் ஸமீரும்(யுவன்), ரிஸ்வானை நேசிக்கிறான். செப்-11-க்கு பிறகு அமெரிக்கா முழுதும் வெளிப்படும் இஸ்லாமியர் வெறுப்பின் விளைவாக, பள்ளிச் சிறுவர்களிடையேயான் தகராறில் ஸமீர் கொல்லப்படுகிறான்.
அதிர்ச்சியுற்று மனம் உடையும் மந்திரா, “கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!” எனக் கத்துகிறாள். “இங்கிருந்து போய் விடு” என விரட்டுகிறாள். “நான் எப்பொழுது திரும்பி வரட்டும்” எனக் கேட்கிறான் ரிஸ்வான். “அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்! அதன் பிறகு வா” என அவள் கூறும் வார்த்தைகளைக் கொண்டு, அமெரிக்க அதிபரை சந்திக்கப் புறப்படுகிறான் ரிஸ்வான். கையில் காசின்றி, கார்களை ரிப்பேர் செய்து பயணத்தை தொடர்கிறான். தீவிரவாதி என சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாகி… என நீண்ட அலைக்கழிப்புகளைத் தாண்டி, புதிய அமெரிக்க அதிபரை சந்திப்பதில் வெற்றி பெற்றுகிறான்.
இந்தக் கதையைப் படிக்கும் பொழுதே, போஸ்டரில் உள்ள அமெரிக்க கொடி தற்செயலாக இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவாக படத்தின் உள்ளடக்கத்தை உணர்த்தும் குறியீடாக அமெரிக்க கொடி ஷாருக்கின் மீது படிந்திருக்கிறது. இதனை லக்கிலுக் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தார். “ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.” படத்தின் உன்னதத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இந்த அடிப்படையான கேள்வியை பரிசீலிப்போம். முதலில், இது அமெரிக்கர்களுக்கான படமா, இந்தியர்களுக்கான படமா, அல்லது சொல்லப்படுவது போல உலகப் படமா?
திரைக்கதை முழுவதும் அமெரிக்காவைச் சுற்றி வருகிறது. செப்-11க்குப் பிறகு, அமெரிக்காவில் நிலவும் இஸ்லாமியர் மீதான வெறுப்பைப் பேசிச் செல்கிறது. இதற்கு சற்று முன்பாக, “நியூயார்க்”, “குர்பான்” முதலான பாலிவுட் திரைப்படங்களும் இஸ்லாம்+அமெரிக்கா+பயங்கரவாதம்+வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற ஃபார்முலாவில் வெளி வந்தன. இப்படி இந்தித் திரையுலகம், அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லீம்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து வரிசையாகத் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
“செப்டம்பர் 11 பற்றி இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த படம் இதுதான்” என சாரு போற்றிக் கொண்டாடும் இந்தத் திரைப்படத்தின் அதியற்புதக் கருவிற்கான தூண்டுதல் எதிலிருந்து பிறக்கிறது? குஜராத்தின் வடுக்கள் இன்னமும் ஆறாத இந்தியாவை விட்டு விட்டு, திரைக்கதை அமெரிக்காவை கதைக்களனாக தேர்ந்தெடுப்பதன் நோக்கம் தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையை, எகானமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் ஷாருக் கான் சொல்கிறார். “இந்தியாவில் அற்புதமாகவும், வெளிநாடுகளில் மிக நன்றாகவும் ஓடக் கூடிய திரைப்படங்களை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், மை நேம் இஸ் கானைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் அற்புதமாகவும், இந்தியாவில் மிக நன்றாகவும் ஓடியிருக்கிறது. எனவே, நாம் செய்ய வேண்டியது எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்வது தான்.” ஷாருக்கின் விளம்பர முத்திரையுடன் கூடிய வரிகளைத் தாண்டி, மை நேம் இஸ் கான் திரைப்படத்திற்கான அடிப்படையான படைப்பு உந்துதல், இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.
பாலிவுட் திரைப்படங்களுக்கு உருவாகியிருக்கும் சர்வதேச சந்தைதான் “மை நேம் இஸ் கான்” போன்ற திரைப்படங்களுக்கான அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்திலிருந்து தான் ‘அமெரிக்காவில் இஸ்லாமியர் இனஒதுக்கல் குறித்த திரைக் காவியம்’ தோன்றுகிறதேயன்றி, இதற்கு நேர்மாறான முறையில்உருவாகவில்லை. அதே எகானமிக் டைம்ஸ் பேட்டியில், இந்தித் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் வணிகச் சிக்கல்களை ஷாரூக் மேலும் விளக்குகிறார். “அரங்கு நிறைந்த காட்சிகளுக்கும், வெள்ளிவிழாக்களுக்குமான காலம் முடிந்து விட்டது. எவ்வளவு சீக்கிரமாக இதனை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு மொத்த திரைப்படத் தொழிலுக்கும் நல்லது.” அவர் மேலும் விளக்கிச் செல்கிறார். திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க, ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பேட்டிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, இணையத்தில் பிரபலப்படுத்துவது என பல வழிகளில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது. அதனை விட முக்கியம், திரைப்படத்திற்கு உள்ள பரபரப்பை பயன்படுத்தி, முதல் சில வாரங்களில் எவ்வளவு அதிகமான தியேட்டர்களில், எவ்வளவு அதிகமான நாடுகளில் திரையிட முடியுமோ, அவ்வளவு அதிகமாகத் திரையிட்டு வசூல் செய்து விட வேண்டும். இதன் மூலம் தான், “எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.” ஆக, மை நேம் இஸ் கான் எனும் மாபெரும் காவியத்தின் ரிஷி மூலம் இதுதான்!
அதாவது, இந்தித் திரைப்படங்களுக்கான சந்தை, வட இந்திய மாநிலங்களாக இருந்த வரை, பணக்கார வில்லன்களின் பணக்கார மகள்களை ஏழை ஷாரூக் திக்கித் திக்கி காதலித்துக் கொண்டிருந்தார். ஆன்டி ஹீரோவாக ஆர்ப்பரித்தார். சந்தை இந்தியாவைத் தாண்டி சற்று விரிவடைந்த நேரத்தில், அமெரிக்காவிலும், லண்டனிலும் டூயட் பாடி, இந்தியாவின் பெருமையை, இந்தியப் பெண்களின் கற்புத் தூய்மையை பறைசாற்றும் படங்களை தந்து கொண்டிருந்தார். சந்தை மொத்த உலகமான பொழுதோ, அமெரிக்காவே கதைக் களனாகி விட்டது. திரைப்படத்தில் இந்தியா ஊறுகாயாகி விட்டது. உலகமய குடிமக்கள் புரிந்து கொள்ளத் தக்க கதையாக, அடையாளப்படுத்திக் கொள்ளத் தக்க கதையாக மாறி விடுகிறது. அதனால் தான், இந்த ‘முற்போக்குப் படத்தை’ அமெரிக்க ஃபாக்ஸ் நிறுவனம் நூறு கோடிகளுக்கு விரும்பி வாங்குகிறது. ஸ்டார்-ஃபாக்ஸ் நிறுவனத்தின் முதலாளி விஜய் சிங், தமது லாஸ் ஏஞ்செல்ஸ் தலைமையகம் ஷாருக் கானின் திரைப்படத்தை ஏன் விரும்புகிறது எனத் தெளிவாகக் கூறுகிறார். “முதல் நாளிலிருந்தே, கான் திரைப்படத்தை ஒரு காதல் கதையாகத்தான் பார்க்கிறோமேயல்லாமல், சமூகப் பிரச்சினைகள் குறித்த படமாக அல்ல.” எனவே, இந்த மாபெரும் கலை படைப்பின் உள்ளடக்கமும், வடிவமும் விரிவடையும் ஹாலிவுட்-பாலிவுட் சந்தைத் தேவைகளிலிருந்து பிறக்கிறது.
இந்தப் பொருளியல் அடிப்படையில் பிறக்கும் கலைப் படைப்பு, அதன் ஆதாரமாக விளங்கும் கட்டமைப்பை, அந்தக் கட்டமைப்பிலிருந்து பிறக்கும் வன்முறையை கேள்விக்குள்ளாக்குமா என்ன? அதனால் தான், கதைப்படி ரிஸ்வான் கான் சூறாவளியால் பாதிக்கப்பட்டகறுப்பின மக்களை காப்பாற்றியும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் எனத் தான் சந்தேகப்படும் டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானைப் போட்டுக் கொடுத்தும், அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும் ‘நல்ல பெயர்’ வாங்குகிறான். ஆனால், இது சாருவுக்கு நெருடலாகப் படுகிறது. “ரிஸ்வான் தான் ஒரு சிறந்த குடிமகன் என்று நிரூபிப்பதற்காக கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜார்ஜியா மாநிலத்துக்குச் சென்று பலவிதமான சாகச வேலைகளைச் செய்து அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும், அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை விரட்டி விட்ட மந்திராவிடமும் ’நல்ல’ பெயர் வாங்குகிறான். மிகவும் குரூரமான கற்பனை. நான் ஒரு முஸ்லிமாக இருந்தால் பயங்கரவாதி என்றுதான் முத்திரை குத்தப்படுவேன். போலீஸால் தாக்கப்படுவேன். மனைவியால் விரட்டி அடிக்கப்படுவேன். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து நான் ஒரு நல்ல குடி மகன் என்று நிரூபிப்பதற்காக ஒரு சூப்பர்மேனாக மாறி சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப் பாற்றியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய கொடுமை! “ பிறகு அவரே தன்னை சமாதானம் செய்து கொண்டு, “ஆனால் இந்த ஒரு விஷயத்தைத் தவிர, மற்றபடி மை நேம் இஸ் கான் ஒரு அருமையான படம்.” என விளம்புகிறார். யா அல்லா, என்ன கொடுமை சாரு இது?
இந்த ‘நெருடலான’ காட்சிகளால் தானே, “எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை; இறைவன் கருணையானவன்; அன்பு ஒன்றே எல்லா மதங்களின் ஆதாரமாக உள்ளது” என்று சாருவே கூறும் இப்படத்தின் அடிப்படை செய்தியே உணர்த்தப்படுகிறது? அதனால் தானே, இறுதிக் காட்சியில் அதிபரிடம் ரிஸ்வான் கை குலுக்கும் பொழுது, தன்னுடைய வெறுப்பால் சாதிக்க முடியாததை ரிஸ்வான் அன்பினால் சாதித்திருக்கிறான் எனப் படத்தின் ‘மெசெஜை’ மந்திரா சொல்கிறாள்? அதற்கு வித்திடும் காட்சிகளே இவைதானே? எனவே, திரைப்படத்தின் அடிப்படை தர்க்கத்தை உருவகப்படுத்தும் காட்சிகளை, ஏறத்தாழ திரைப்படத்தின் இரண்டாம் பாதியை, மொத்தமாக “அந்த ஒரு விஷயம்” எனச் சாதாரணமாக எப்படி ஒதுக்கித் தள்ளுகிறீர்கள் சாரு? பிறகு அது அருமையான படமாவது எப்படி? ஒன்று, நீங்கள் அந்தப் படத்தின் அடிப்படை மெசேஜை மறுக்கிறீர்கள் அல்லது அடிப்படை மெசேஜ் எது என்று புரியாமலேயே பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உன்மத்த நிலையில் எழுதுவதன் பக்க விளைவுகள்தான் எத்தனை எத்தனை?
‘அமெரிக்க அதிபரை ஏன் சந்திக்க விரும்புகிறான், இவன் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம்’ என அமெரிக்கப் போலிசால் ரிஸ்வான் கான் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது, அவன் தான் மசூதியில் விவாதித்த டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை அமெரிக்கப் போலிசிடம் தீவிரவாதி என போட்டுக் கொடுப்பது தான். ஜார்ஜ் புஷ் ‘கண்டறிந்ததைப் போல’ சதாம் உசேன் வைத்திருந்த ‘பேரழிவு ஆயுதங்களோடு’, டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை ரிஸ்வான் கண்டு பிடிக்கவில்லை. மாறாக அவருடன் நடத்தும் ஒரு விவாதத்திலேயே அவர் தீவிரவாதி என முடிவு கட்டி போலிசுக்கு தகவல் சொல்லுகிறான். ஃபைஸுர் ரஹ்மான் கவுண்டனமோ சிறைக்கு அனுப்பப்பட்டாரா, அங்கே அவரை எத்தகைய மனிதாபிமானமிக்க, கண்ணியமான முறைகளில், அமெரிக்க கண்யவான்கள் விசாரித்தார்கள், அல்லது அவர் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மலைப் பகுதியில் வைத்து ஒசாமாவின் வலது கை அல்லது இடது கண் என சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதெல்லாம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஒரு Feel Good Movie-ல், இது போன்ற ரசாபாசமான காட்சிகள் இடம் பெற்றால் என்னாவது?
இறுதிக் காட்சியில், திரையில் தோன்றும் நிழல் ஒபாமா, ரிஸ்வான் கானிடம் கை குலுக்குகிறார். “நான் பயங்கரவாதியில்லை” என ரிஸ்வான் சொல்ல, புன்னகையோடு ஆமோதிக்கிறார். ரிஸ்வான் கானின் புரட்சியும் முழுவடைகிறது. படமும் முடிவடைகிறது. ஆனால், நிஜ ஒபாமா என்ன செய்கிறார்? ஆப்கானிஸ்தானுக்கு ஜார்ஜ் புஷ்ஷை விடவும் அதிகமான துருப்புகளை அனுப்புகிறார். “நாங்களும் பயங்கரவாதிகள் இல்லை” எனக் கதறும் நூற்றுக்கணக்கான ரிஸ்வான் கான்களை, மனித குலம் கற்பனை செய்யவியலாத வகையில் சித்திரவதை செய்த கவுண்டனமோ பே சிறைக் கொடுமைகள், “அமெரிக்க வரலாற்றின் துயரமான அத்தியாயம்” என உருகுகிறார். உருகிய மறு நொடியே, கவுண்டனமோ பே சிறையை மூடி விட்டு, கைதிகளை இல்லியனோஸ் சிறைக்கு மாற்ற உத்தரவிடுகிறார். இடம் மாற்றுவதே சாதனையாகி விடுகிறது.
இடம் மாற்றுவது போலவே, அமெரிக்க அரசின் அதிபர் முகமூடி மட்டும் மாறியிருக்க, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” மட்டும் உக்கிரம் மாறாமல் தொடர்கிறது. சாருவே சொல்வது போல, “பாலஸ்தீனம், லெபனான், ஆஃப்கனிஸ்தான், ஈராக் என்று இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகள் தேசம் தேசமாக அழிக்கப்பட்டு வரும் காலம் இது. இந்த தேசங்களில் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்; வெடிகுண்டுகளால் உடல் உறுப்புகளை இழந்த எண்ணற்ற குழந்தைகள் இந்த தேசங்களில் தாய், தந்தையின்றி அனாதைகளாய்த் திரிகின்றன.” ஆனால், இந்த நிஜ ஒபாமாவைத் தான், “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என அழைக்கப்படும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரின் குரூர யதார்த்தத்தைத்தான், “மை நேம் இஸ் கான்” அறிமுகப்படுத்துகிறதா?அப்படி இல்லையென்றால், இது ஒடுக்குமுறையாளர்களுக்கு இசைவான மொழியில் பேசும் படமல்லாமல் வேறென்ன? இந்த இலட்சணத்தில், “இது ஒரு வழக்கமான கரன் ஜோஹர் படம் இல்லை. ஷ்யாம் பெனகல், கேத் தான் மேத்தா போன்றவர்களின் அரசியல் சினிமாவோடு ஒப்பிடத்தக்க ஒரு படம்” என கூறுகிறீர்களே சாரு, நல்ல வேளை ஷ்யாம் பெனகலுக்கும், கேத்தன் மேத்தாவுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. தெரிந்திருந்தால், நொந்து போயிருப்பார்கள். இது வழக்கமான கரன் ஜோஹர் படமில்லை என்பது உண்மைதான். “குச் குச் ஹோத்தா ஹை” போன்ற அபத்தக் களஞ்சியங்களிலிருந்து, உலகமயத்தின் சுவையை உணர்ந்த உலகமய மசாலாவுக்கு அவர் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்.
சாருவின் கட்டுரை வெளிவந்திருக்கும் அதே உயிர்மை இதழில், குஜராத் படுகொலையின் புகைப்படமாக, அடையாளமாக மாறிப் போன குத்புதீன் அன்சாரி குறித்த கட்டுரையொன்றும் வந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான கட்டுரை. அன்சாரியைக் குறித்து, இது வரை எந்தக் கரன் ஜோஹரும் திரைப்படம் எடுக்கவோ, அமெரிக்காவில் என்ன, இந்தியாவில் கூட வெளியிடவோ முன் வரவில்லை. ஏனெனில், அன்சாரியின் ‘கதையும்’, வாழ்வும், Feel Good Feeling-ஐ உண்டாக்குவதுமில்லை, அதிலிருந்து கல்லா கட்டுவது சாத்தியமுமில்லை.
பி.கு: “படத்தில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா? இப்படி ஏன் எல்லாவற்றையும் குறை சொல்கிறீர்கள்? உங்க கண்ணுக்கெல்லாம் நல்லதே படாதா” என்று தானே கேட்க வருகிறீர்கள்? திரைப்படத்திலிருந்து சொல்வதானால், சாரு உருகும் அந்த ‘சஜ்தா’ பாடல், ஒரு அருமையான கவ்வாலிப் பாடல். இதயத்தை ஊடுருவும் இசை… ஆழமானதும், கவித்துவமானதுமான வரிகள்… என்ன, அதனைக் கேட்கும் பொழுது, ரிஸ்வான் கானை மட்டுமல்ல, குத்புதீன் அன்சாரியையும் சற்று மறந்து விட வேண்டியிருக்கிறது. திரைப்படத்திலிருந்து வெளியே வந்து சொல்வதானால், நந்திதா தாஸ் இயக்கிய ‘ஃபிராக்’ திரைப்படம் பாருங்கள். அத் திரைப்படத்தில் இசைக் கலைஞராக நடிக்கும் நசிருதீன் ஷா ஓரிடத்தில் சொல்வார்: “வெறும் ஏழு சுரங்களைக் கொண்டு இத்துணை வெறுப்பை நான் எப்படி எதிர் கொள்வேன்?” அத் திரைப்படம் எங்கோ அமெரிக்காவில் ரிஸ்வான் கான் சந்திக்கும் வெறுப்பைப் பற்றியல்ல, இங்கே, நமது தவத்திரு நாட்டில் அன்சாரிகள் சந்திக்கும் வெறுப்பை பற்றிப் பேசுகிறது.

இந்த வரிசையில் ஆறாவது திரைப்படம் A SERIOUS MAN.
கோயன் பிரதர்ஸ்.
டாரண்டினோ போல பார்த்து மாத்திரமே அனுபவிக்க வேண்டிய திரைப்பட இயக்குநர்களில் இவர்களையும் சேர்க்க வேண்டும். அகாதமி விருதைப் பெற்ற 'No Country for Old men' படத்தை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தின் கதைப் போக்கு இப்படித்தான் என்று எவ்வளவு திறமையாக எழுதினாலும் எப்படி அது படைப்பிற்கு நியாயம் சேர்க்காமல் போகுமோ, அதையே இத்திரைப்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
..அல்லது இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். கோணங்கியின் சமீபத்திய படைப்பான 'இருள்வ மெளத்திக'த்தின் உள்ளடக்கத்தை 'பாட்டி-வடை-காக்கா, கதை போல, 'இரண்டு பத்திகளில் சொல்லு' என்று யாராவது கேட்டால் அது எவ்வளவு நுண்ணுவர்வற்றதாக இருக்குமோ, அப்படித்தான் இத்திரைப்படத்தைப் பற்றி எழுதுவதும். [அப்பாடி! சிவராமன் (பைத்தியக்காரன்) மகிழும்படி எப்படியோ ஒரு தமிழ் எழுத்தாளரை உள்ளே கொண்டு வந்தாயிற்று.] :-) சிக்கலான கணித சூத்திரங்களுக்கு ஈடாக புதிர்ப் பாதைகளின் வழியே பூடகமாக பயணிக்கும் கோணங்கியை வாசகனே நேரடியாக வாசித்துக் கொள்வதுதான் ஒரே வழி. அப்படித்தான் இத்திரைப்படமும்.
இருந்தாலும் இத்திரைப்படத்தைப் பற்றினதோர் அறிமுக அடிப்படை கோட்டுருவத்தையாவது ஏற்படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.
பொதுவாக யூதர்கள் என்றாலே அவர்கள் நாஜிப் படையினரின் கீழே நசுங்கிப் போகும் பரிதாப கரப்பான் பூச்சி சினிமாதான் பார்த்திருக்கிறேன். மாறாக ஒர் அமெரிக்க யூதக் குடும்பத்தை இத்தனை நெருக்கமாக பார்த்தது இத்திரைப்படத்தில்தான். 'வாழும் மனிதனுக்கு சோதனை வரலாம். ஆனால் சோதனைகளுக்கு நடுவிலேதான் வாழ வேண்டும்' என்றால் எப்படி?' என்கிற அரதப்பழசான வாக்கியத்துடன் இந்த கறுப்பு நகைச்சுவைப் படத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
வருடம் 1967. அமெரிக்க மாவட்டமான மினியாபோலிசின் புறநகர். இயற்பியல் ஆசிரியரான Larry Gopnik நேர்மையானவர். ஓர் ஒழுங்கான நேர்க்கோட்டுடனான வாழ்க்கையை வாழ விரும்புபவர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் அவரைச் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். அப்பாவின் பையிலிருந்து காசு திருடும் மகள், அவளிடமிருந்து திருடி மரிஜூவானா புகைக்கும் பள்ளிச்சிறுவனான மகன், 'வரும்போது ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வாங்க' என்பதற்கு பதிலாக 'விவாகரத்துப் பத்திரத்தோடு வாங்க' என்று வீட்டை விட்டு துரத்தும் அதிரடி மனைவி, அவள் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு கிழவர், அமீபா போல வீட்டோடேயே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஹோமோ மூத்த சகோதரர், வரப்புத்தகராறு செய்யும் பக்கத்து வீட்டுக்காரர், பணக்கவரை தந்துவிட்டு "பெயிலாக்கினே, மவனே" என்று அமைதியாக மிரட்டும் கொரிய மாணவன், அதன் மூலமாக ஏற்படும் புகழ்கறைகள், இதிலிருந்து விடுபட ஆலோசனை வேண்டிச் செல்லும் போது குழப்பியனுப்பும் யூத குருமார்கள்....
ஒரு மனிதன் என்னதான் செய்வான்?... 'சோதனை மேல் சோதனை' என்ற சிவாஜி பாடலை இப்ரூ மொழியில் டிஎம்எஸ் பாடி அதை லேரிக்கு அனுப்பியிருந்தால்
அரை மணி நேரமாவது ஆகும் என்று வெறுப்பு டிராபிக்கில் காத்திருக்கும் போது அது ஐந்தே நிமிடத்தில் சரியாகி ஆச்சரியமேற்படுத்துவது போல Larry-ன் சில பிரச்சினைகள் இயற்கையாகவே சரியாகிறது. என்றாலும் டிராபிக்கிலிருந்து வேகமாக விடுபட்ட வண்டி மந்திரியின் கான்வாயிற்குள் எதிர்பாராமல் புகுந்து விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆகுமோ, அப்படியே படம் முடிந்த பின்னரும் பிரச்சினைகள் தொடர்கின்றன.
Larry Gopnik-ஆக Michael Stuhlbarg நடித்திருக்கிறார். நாடக, தொலைக்காட்சி நடிகரான இவர் ஏற்கெனவே சில சினிமாக்களில் சிறுவேடங்களில் நடித்திருந்தாலும் பிரதான வேடத்தில் நடிப்பது இதுவே முதன்முறை. லெளதீக வாழ்வில் அல்லலுறும் ஒர் நடுத்தர வர்க்க அப்பாவியை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். ஏற்கெனவே விவரித்தது போல் இயக்குநர்களான Joel மற்றும் Ethan Coen சகோதரர்களின் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை அவர்களே விவரித்தால்தான் உண்டு. அவர்கள் இறைத்துப் போடும் பல்வேறு புள்ளிகளை பொறுக்கிக் கொண்டு அவரவர்களின் ரசனை மற்றும் புரிதலின் அடிப்படையில்தான் பார்வையாளன்தான் அந்த வடிவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
படம் ஒரு புராதனமானதொரு யூத நாட்டார் வழக்காற்றியல் கதையுடன் துவங்குகிறது. கணவன் அழைத்துவரும் விருந்தாளியை ஆவி என நம்பி கத்தியால் குத்துகிறாள் மனைவி. குருதி கத்தியுடன் வெளியேறும் அந்த கிழவனை இந்த பிரதானக் கதையுடன் எப்படி பொருத்திப் பார்ப்பது எனப் புரியவில்லை.
Larry காணும் கனவுகளில் ஒன்று வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இருந்ததை கவனித்தேன். சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சகோதரனை நிறையப் பணம் தந்து தப்பித்துச் செல்லுமாறு படகொன்றில் ஏற்றி அனுப்புகிறான் சிறிது தூரம் கடப்பதற்குள் துப்பாக்கியொன்று வெடித்து சகோதரனைக் கொல்கிறது. Larry அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்க்கும் போது 'அதோ பார், இன்னொரு யூதன்' என்று துப்பாக்கியுடன் குறிபார்க்கிறான் ஒருவன். Larry அலறியடித்து எழும் போதுதான் கனவென்று புரிகிறது. கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட யூதர்களின் பெரும்பான்மையோர்களின் ஆழ்மனதில் அவர்கள் அனுபவித்த வன்முறை பரம்பரையாகத் தொடரும் என்பதாக இதைப் புரிந்து கொள்கிறேன்.
கோயன் சகோதரர்களின் உருவாக்கங்களை விரும்பி ரசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இது ஒருவேளை ஏமாற்றத்தைத் தரலாம். அகாதமியின் 'சிறந்த படம்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் விருதைப் பெறவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. Roger Deakins அற்புத ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது.
தேவையான / யற்ற பின்குறிப்பு: மேற்குலகில் 'நகைச்சுவை' என்பதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது நீண்ட வருட சந்தேகமாக உள்ளது. நம்மூரில் என்றால் கிரேசி மோகன் எழுதி நிமிடத்திற்கு இரண்டு முறையாவது அடுத்தவர் தொடையில் தட்டி கண்ணீர் வர சிரித்தால்தான் அதை 'நகைச்சுவைப்படம்' என ஒப்புக் கொள்கிறோம். அங்கெல்லாம் யாராவது கண்களை விழித்து விநோதமாக பார்த்தாலே காமெடிப்படம் என்கிறார்களா என தெரியவில்லை.
சீரியஸான படமொன்றை பார்த்தோம் என்ற உணர்வுடன் இருந்தால் அதை 'comedy' என்கிற வகையில் IMDB-ல அடைத்து வைத்திருப்பதை பின்னர் பார்க்கும் போது விநோதமாக இருக்கிறது. புளியோதரையின் மீது முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றுவது போல.
suresh kannan


அஜீத் ரசிகர்கள்கள் என்னை அடிக்க வரலாம். ஆனால் உண்மையை எப்படி மாற்ற முடியும்? அது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்! அஜீத்தின் ...


அஜீத் ரசிகர்கள்கள் என்னை அடிக்க வரலாம். ஆனால் உண்மையை எப்படி மாற்ற முடியும்? அது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
அஜீத்தின் அசல் ஏகனுக்கு அப்புறம் பெரிய இடைவெளியில் வெளிவந்தது. சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பரத்வாஜ் இசையமைக்க புதுமாதிரியான கெட் அப்பில் அப்பா- மகன் என்று இருவேடங்களில் அஜீத் நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புடந்தான் வெளியே வந்தது.
படம், வளவளனு இல்லாமல் ரொம்ப சின்னப் படமா க்யூட்டா போரடிக்காமல் இர்நுததென்னவோ உண்மைதான். விமர்சகர்களுக்கு ஓரளவு பிடித்திருந்தது. ஓப்பெனிங் வ்வீக் எண்ட் பாக்ஸ் ஆபிஸ்ல நல்லாத்தான் கலக்சன் இருந்தது. ஆனால் படம் தியேட்டர்ல ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கவில்லை.
விஜயின் வேட்டைக்காரன், சூர்யாவின் ஆதவன், மற்றும் சிம்புவின் வி தா வ வின் அளவுக்குக்கூட அசலுக்கு எந்த செண்டரிலும் (எ, பி & சி) பெருசா கலக்சன் வரலை!
தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்டிரிப்யூட்டர்ஸ் போட்ட காசை எடுத்து இருக்கலாம். ஆனால் எப்படி கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் நம்ம தல அஜீத்துக்கு இந்தப்படம் ஒரு தோல்விப்படம்தான்!.
எவ்வளவோ பிரச்சினைகளுக்கப்புறம் வெளிவந்த "காட்ஃபாதர்" (வரலாறு) வெற்றியடைந்ததை யாருமே மறுக்கமுடியாது. அதேபோல் பில்லாவும் வெற்றிப்படம்தான். ஆனால் ஏகனுடன் சேர்த்து அசலையும் அஜீத்தின் ஃப்ளாப் லிஸ்ட்ல சேர்க்கிறதைவிட வேற வழியில்லை!
கெளதம் மேனனுடன் அணி சேரும் அஜீத் அடுத்த படத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள்! Better luck next time, Ajith!

சாம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். அழகிய இளம் மனைவி கிரேஸ், இரு பெண் குழந்தைகளான இசபெல், மஹி எனச் சிறிய அன்பான குடும்பம் அவனுடயது. தன் காதல் மனைவியுடனும், மகள்களுடனும் ஆனந்தமாக தன் வாழ்வைக் கழிக்கிறான் சாம்.
சாமிற்கு டாமி எனும் சகோதரன் இருக்கிறான். சாமைப் போல் நேர்வழியில் நடக்கத் தெரியாதவன் டாமி. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் டாமி, நிபந்தனைக்குட்பட்ட விடுதலையில் சிறையிலிருந்து வெளியே வருகிறான்.
தன் சகோதரன் டாமி மேல் மிகுந்த பாசம் கொண்டவன் சாம். அவர்கள் தந்தையான ஹாங்ஸ், டாமியை அவன் செயல்களிற்காக வெறுப்பவராக இருந்தாலும் தன் சகோதரன் டாமிக்கு அன்பும், ஆதரவுமாக இருக்கிறான் சாம். அதே போல் டாமியும் தன் சகோதரன் சாமை அதிகம் மதிப்பவனாகவும், அவன் மேல் அன்பு கொண்டவனாகவும் இருக்கிறான். சிறையில் இருந்து விடுதலை பெறும் டாமியை நேரில் சென்று அழைத்து வரும் சாம், அவனிற்கு நல்ல வழியில் நடக்கும்படி ஆலோசனைகள் வழங்குகிறான்.
இவ்வேளையில் சாம் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனும் அழைப்பு அவனிற்கு விடுக்கப்படுகிறது. நல்லதொரு வீரனாக அந்த அழைப்பை ஏற்று, தன் அன்பான உறவுகளைப் பிரிந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்கிறான் சாம்.
ஆப்கானிஸ்தானில் சாம், தன் சக வீரர்களுடன் ஒரு ஹெலிஹாப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அக்ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. விபத்துக்குள்ளான ஹெலியில் பயணம் செய்தவர்களைத் தேடித் தீவிர தேடுதலை நடத்தும் அமெரிக்க ராணுவத்தினால், சாமையோ, அவன் உடலையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் சாம் இறந்து விட்டதாக கருதி, அமெரிக்காவில் இருக்கும் அவன் மனைவி கிரேஸிடம் அவன் இறந்து விட்டதான தகவலைத் தருகிறது அமெரிக்க ராணுவம்.
தன் அன்புக் கணவன் சாம் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாகிய கிரேஸ், இத்தகவலால் உள்ளே நொருங்கிப் போகிறாள். சாமின் இரு பெண் பிள்ளைகளின் மீதும் கூட தந்தையின் மரணம் குறித்த வேதனையின் துகள்கள் மெல்ல விழுந்து விடுகின்றன. சாமின் சகோதரன் டாமி இந்த செய்தியறிந்து துடித்துப் போகிறான்.
சாம் வாழ்ந்த நகரில் அவனிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சாம் மிகவும் சிறந்த வீரன், நல்லதொரு நண்பன் என அவனைப் பற்றி சக வீரர்கள் நினைவு கூருகிறார்கள்.
இளம் வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த கிரேஸ், கண்ணீரிற்கு மத்தியில் தன் வாழ்வைத் தேடுகிறாள். தன் கணவனின் மேல் சட்டைகளில் அவன் வாசனையை நுகர்கிறாள். சாமுடன் ஆனந்தமாக கழித்த தருணங்களை மனதில் மீட்டிப் பார்க்கிறாள். சாமின் பிரிவு மெல்ல அவளை உள்ளே கொல்கிறது.
சாமின் சகோதரன் டாமி, தன் சகோதரனின் மரணத்தின் பின் தன் நடவடிக்கைகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான். சாமின் மகள்கள் இருவரோடு தன் நேரத்தை செலவிடுகிறான். இஸபெலும், மகியும் டாமியை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். கிரேஸின் வசதிகளற்ற சிறிய சமையலறையை தன் நண்பர்களின் உதவியுடன் புதுப்பித்து தருகிறான் சாம். தன் சகோதரனின் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். கிரேஸின் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை மலர வைக்க முயல்கிறான் அவன்.
குழந்தைகளினதும், டாமியினதும் தொடர்ந்த முயற்சிகளால் கிரேஸ் தன் கணவனின் மரணத்தின் சோகச் சுழலிலிருந்து மேலெழ ஆரம்பிக்கிறாள். கிரேஸும், டாமியும் அவர்கள் அறியாமலே தங்களிற்குள் நெருங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு நாள் இரவு, கிரேஸிற்கும், டாமிக்குமிடையிலான இந்தப் புதிய உறவானது அதன் எல்லைகளை சற்றுத் தாண்டிப் பார்த்து விட அவர்களை அழைத்து செல்கிறது. ஆனால் எல்லை தாண்டலின் ஆரம்ப நிலையிலேயே இருவரும் சுதாரித்துக் கொண்டு தங்கள் மரியாதையான உறவின் எல்லைகளிற்குள் திரும்பி விடுகிறார்கள். எல்லையை சற்றுத் தாண்டியதற்காக உண்மையிலேயே அவர்கள் உள்ளம் வேதனை கொள்கிறது.
இச்சம்பவத்தின் பின்னும் கிரேஸின் குழந்தைகளை வந்து சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்கிறான் டாமி. இப்போது கிரேஸிற்கும் டாமிக்குமிடையில் புரிந்துணர்வு கூடிய ஆரோக்யமான உறவு நிலவுகிறது. இந்நிலையில் கிரேஸிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பானது அவள் கணவன் சாம் இறக்கவில்லை உயிருடனேயே இருக்கிறான் எனும் தகவலை அவளிற்குத் தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தன் வீட்டிற்கு திரும்பும் சாம் வேறொரு மனிதனாக மாறியிருக்கிறான். தாலிபான்களின் கொடூரமான சித்திரவதைகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு வரும் சாம்,மன அழுத்தங்களின் பயங்கரக் குவியலாக இருக்கிறான். அவன் மனதில் இருக்கும் ஒரு ரகசியம் அவனை அகச் சித்திரவதை செய்கிறது. வீடு திரும்பிய சாம், தன் மனைவிக்கும், சகோதரனிற்குமிடையில் நிலவும் உறவு குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறான்……
போர் அது நிகழும் இடத்தில் ஏற்படுத்தும் அழிவுகளை தாண்டி உருவாக்கக்கூடிய அழிவுகள் உண்டு. போர் உருவாக்கும் அவ்வகை அழிவுகளின் மாயக் கரங்களின் நீட்சி எல்லையற்றது. யுத்த முனையிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ அதிகாரி, எவ்வாறு தன் வாழ்வையும், தன் அன்பான குடும்பத்தின் வாழ்க்கையையும் நரகத்தின் வாயிலிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பிக்கிறான் என்பதை அதிர்ச்சியுடன் விரிக்கிறது Brothers திரைப்படம்.
டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் Susanne Bier இயக்கிய Brodre எனும் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படமிது. திரைப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Jim Sheridan.
திரைப்படத்தின் அதிர்வைத் தரும் ஆச்சர்யம், சாம் வேடத்தில் வரும் Tobey Maguire. ஸ்பைடர் மேனில் நாம் கண்ட அந்த இனிய ஹீரோவா இவர் என்று புருவங்களை வியப்பால் உயர வைக்கிறார் டாபி மாக்குவைர்.
படத்தின் ஆரம்பத்தில் சிரித்த முகமும், அன்பு நிறைந்த குடும்பத் தலைவனாகவும் வரும் சாம், ஆப்கானில் தாலிபான்களின் சித்திரவதைகளின் போது படிப்படியாக மாற்றம் பெற்று முற்றிலுமாக வேறொரு உருவம் எடுத்து விடுகிறார். வெறித்த பார்வையும், உயிரற்ற கண்களும், மெலிந்த உடலுமாக, பின் வரும் அவரின் தோற்றமே மிரட்டுகிறது.
சாம், தன் மனைவியின் மீதும், சகோதரன் மீதும் சந்தேகம் கொள்ளும் கணங்கள் நுன்னிய ஊசி முனையால் குத்தும் உணர்வை வழங்குகிறது. போர் ஒன்றின் விளைபொருளான சாம் பாத்திரம் தன் மனதில் அடக்கி வைத்திருக்கும் ரகசியத்தையும், அழுத்தங்களையும் சுமக்க முடியாது உடைந்து அமிழ்வது வேதனையானது.
சாமின் அழுத்தங்கள் அவன் கட்டை மீறி வெடிக்கும் இரு கணங்கள் படத்தில் உண்டு. முதலாவது கணம் சாமின் மகள் மஹியின் பிறந்த நாள் இரவுணவின் போது இடம் பெறுகிறது அந்த வெடிப்பின் தொடர்ச்சியாக சாமின் அன்பு மகள் இஸபெல், நீ ஆப்கானில் செத்துப் போனவனாகவே இருந்திருக்கலாம் என சாமைப் பார்த்துக் கதறுவது கனமானது.
இரண்டாவது கணம், டாமி புதிதாக திருத்தியமைத்த கிரேஸின் சமையலறையை சாம் அடித்து நொருக்கும் காட்சி. டாபி மாக்குவைரின் நடிப்பு மிகையானதா அல்லது அழுத்தங்கள் குவிந்த ஒரு மனிதனின் இயல்பு இதுதானா என்று பிரித்தறிய முடியாதவாறு வன்மம் பீரிடும் உக்கிரமான காட்சி அது. அன்பு, சந்தேகம், வன்மம், உடைதல் என டாபி மாக்குவைரின் சினிமாப் பாத்திரங்களில் மிகவும் பேசப்படும் ஒரு பாத்திரமாக சாம் பாத்திரம் அமையும். [ ஸ்பைடர் மேன் 4ல் டாபி மாக்குவைர் இல்லையாம்]
சந்தேகமும், வன்முறையும், அச்சமும் குடிகொண்ட ஒரு கணவனை அன்புடன் சகித்துக் கொள்ளும் கிரேஸ் பாத்திரத்தில் Natalie Portman. பித்துப் பிடித்த நிலையில் சந்தேக வெறி கொண்டாடும் கணவனை தன் அன்பால் அணைக்கத் துடிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் நத்தாலியின் திறமைக்கு இப்பாத்திரம் அதிக வாய்ப்பை வழங்கி விடவில்லை. திரைப்படத்தை பார்க்கும் யுத்த முனையிலிருக்கும் அமெரிக்க வீரர்கள் கிரேஸ் போல் ஒரு மனைவி தங்களிற்கும் வேண்டும் என்று ஏங்குவார்கள்.
கொஞ்சம் முரடனாக இருந்து, நல்ல வழிக்கு திரும்புவனாக டாமியின் பாத்திரத்தில் நடிகர் Jake Gyllenhall. ஆரம்ப காட்சிகளில் தன் தந்தையுடன் மோதுவதும், சாமின் மரணத்தின் பின் அவன் குடும்பத்தின் மீது அக்கறை எடுப்பதும், கிரேஸ் மீது கவரப்பட்டு பின் ஒதுங்குவதும், வீடு திரும்பும் சாம் தன் சந்தேக கேள்விகளால் தாக்கும் போது அதனை அமைதியாக எடுத்துக் கொண்டு தன் சகோதரனை எப்போதும் அன்பால் அணைத்துக் கொள்வதுமென மிக இயல்பாக நடிக்க வருகிறது ஜேக் ஜிலன்ஹாலிற்கு. டாமிக்கும் அவரது தந்தை ஹாங்ஸிற்குமிடையிலான உறவு சாமின் மறைவின் பின் மீண்டும் வலுப்பெற ஆரம்பிப்பது மிக மென்மையாக கூறப்பட்டிருகிறது.
இரு சகோதரர்களினதும் தந்தையான ஹாங்ஸ், வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். அப்பாத்திரம் வழியே வியட்னாம் போரிலிருந்து வீடு திரும்பிய போர் வீரர்கள் முகம் கொடுத்திருக்ககூடிய சில பிரச்சினைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குனர்.
படத்தில் மஹி, இஸபெல் ஆகிய இரு சிறுமிகளின் நடிப்பும் அருமையானது. அன்பில் ஆனந்தமாய் மகிழ்வதும், தந்தையின் வெறியின் முன் பயந்து ஒடுங்குவதுமாக எப்படி இவ்வாறான பக்குவமான நடிப்பை இந்தச் சிறுமிகளால் வழங்க முடிகிறது என்று மனம் வியக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு மென்மையான குடும்பக்கதையை ஒரு தளத்திலும், ஆப்கானில் சாம் சந்திக்கும் கொடிய நிகழ்வுகளை இன்னொரு தளத்திலும் காட்சிப்படுத்தி படத்தை வேகமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஜிம் ஷெரிடன். ஆப்கானிலிருந்து சாம் வீடு திரும்பிய பின் திரைப்படம் அழுத்தங்கள் நிறைந்த ஒரு துன்பியல் நாடகமாக மாறி விடுகிறது.
படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகளின் நீளம் சலிப்பைத் தருகிறது. இருப்பினும் உச்சக்கட்ட காட்சியின் மூலம் பார்வையாளர்களைப் பற்றிக் கொள்கிறார் ஜிம் ஷெரிடன். படத்தில் சில கேள்விகளை அவர் அதிகாரங்களை நோக்கி உறுதியாக முன் வைத்திருப்பார் எனில் படம் இன்னமும் வீர்யமாக இருந்திருக்கக்கூடும்.
“போரில் மரணமுற்றவர்களே அதன் முடிவைக் காண்கிறார்கள். நான் போரின் முடிவைக் கண்டிருக்கிறேன் ஆனால் என்னால் மறுபடியும் ஜீவிக்க முடியுமா?” தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே, தன் மனைவியைக் கட்டியணைத்தவாறு, அவன் கண்களில் கண்ணீர் வழிய, சாம் தன் மனதிற்குள்ளே எழுப்பும் கேள்வி இது. கனமான இக்கேள்வி இலகுவாக பார்வையாளனின் தோளில் ஏறி உட்கார்ந்து விடுகிறது. இதற்கான விடை அன்பிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று! [**]
ட்ரெயிலர்


இந்த படம் 1982 ஆம் ஆண்டு வெளியான ட்ரான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய ஜெப் பிரிட்ஜஸ் (Jeff Bridges) தான் இந்த முதல் பாகத்தின் கதாநாயகன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறி கனவான்கள் மற்றும் தோழிகள் கொஞ்சம் கவனிக்க. நீங்கள் எழுதும் ப்ரோக்ராம்கள் விர்சுவல் உலகில் உயிர் பெற்று எழுந்தால் எப்படி இருக்கும். அது தான் ட்ரான் திரைப்படத்தின் மூலக் கரு. உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தின் இயக்குனர் Steven Lisberger ரெம்பவே அட்வான்சாக சிந்தித்து விட்டார். அதனால் தான் படம் பாக்ஸ் ஆபிசிலும், விமர்சகர்களிடமும் வெளியான போது மரண அடி வாங்கியது.
கெவின் பிளின் (Jeff Bridges) என்ற ப்ரோக்ராமர் என்காம் (ENCOM) என்ற ஆர்கேட் (Arcade) கேம் தயாரிக்கும் நிறுவனத்தில் ப்ரோக்ராமாரக பணி புரியும் போது, அவன் எழுதிய ஸ்பேஸ் பேரநாய்ட்ஸ் (Space Paranoids) என்ற கேமுக்கு எழுதிய ப்ரோக்ராம்கள் உட்பட சில ப்ரோக்ராம்களை அவனுடைய சக ஊழியனான எட் டெலின்ஜார் திருடி விடுகிறான். திருடியது மட்டும் இல்லாமல் கெவினை என்காமிலிருந்து அவனை டிஸ்மிஸ் செய்கிறான். கெவினிடம் வேறு ஆதாரம் இல்லாததால் அவனும் வெளியேற வேண்டிய நிலை. தனக்கு சொந்தமான ஒரு ஆர்கேட் நிலையத்தை (Flynn Arcade) நடத்தி வரும் கெவின், எப்படியாவது இந்த குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதற்காக டெலின்ஜார் உருவாக்கிய மாஸ்டர் கன்ட்ரோல் ப்ரோக்ராம்மை (M.C.P) ஹாக் செய்ய முயல்கிறான் கெவின். இதை கண்டுபிடிக்கும் எட் டெலின்ஜார் கெவினை M.C.P க்குள் நுழைய முடியாமல் பல தடைகளைப் போடுகிறான்.
இதனால் அங்கு பணிபுரியும் சக நண்பர்களான ஆலன் பிராட்லீயையும் (Bruce Boxleitner), லோராவையும் (Cindy Morgan) உதவிக்கு நாடுகிறான். ஆலன், ட்ரான் என்ற செக்யூரிட்டி ப்ரோக்ராம்மை உருவாக்க, லெவல் 7 எனும் செக்யூரிட்டி கேட்வேயை தற்காலிகமாக தடை செய்கிறான் டெலின்ஜார். லோரி தன்னால் லெவல் 6 செக்யூரிட்டி மூலம் M.C.P க்கு ஆக்சஸ் தர முடியும் என்று கூறுகிறாள். என்காமுக்குள் மூவரும் நுழைய லோராவின் வொர்க் ஸ்டேஷனில் இருந்து ஹாக் செய்ய முயல்கிறான் கெவின். அந்த வொர்க் ஸ்டேஷனுக்கு அருகில் தான் டிஜிடைசர் என்னும் பரிசோதனை முறை சாதனம் உள்ளது. அந்த M.C.P ஆனது தனக்கு என்று ஒரு செயற்கை அறிவை (Artificial Intelligence) உருவாக்கி கொண்டு இருக்கிறது. இதனால் கெவினை தன்னை ஹாக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறது M.C.P. அதைப் பொருட்படுத்தாத கெவினை டிஜிடைசர் மூலம் தன்னுடைய விர்சுவல் உலகத்திற்கு இழுத்து கொள்கிறது M.C.P.
விர்சுவல் உலகத்திற்கு வரும் கெவின் அங்கு பல ப்ரோக்ராம்கள் தங்கள் யூசரைப் போன்றே தோற்றம் அளிப்பதைக் காண்கிறான். உதாரணமாக ஆலனின் ட்ரான் ப்ரோக்ராம் ஆலனைப் போன்றே தோற்றம் அளிக்கிறது. அங்கு இருக்கும் சார்க் என்ற கன்ட்ரோல் ப்ரோக்ராம் டெலின்ஜார் போன்றே தோற்றம் அளிக்கிறது. மேலும் இது போன்ற தவறும் ப்ரோக்ராம்கள், அல்லது டீபக் செய்யப் படாத ப்ரோக்ராம்கள் அங்கு சிறைப் பிடிக்கப் பட்டு ஆர்கேட் கேம்கள் விளையாடுவதற்கு உபயோகப் படுத்த படுகின்றன (Cloud Computing?). அந்த விர்சுவல் உலகில் இருப்பவை அத்தனையும் ப்ரோக்ராம்கள், கெவின் என்னும் யூசரைத் தவிர. அந்த விளையாட்டுகளில் தோற்கும் ப்ரோக்ராம்கள் டீ'ரெஸ்(De resolution) அதாவது டெலீட் செய்யப் படுகின்றன. சார்க்கின் முக்கிய நோக்கம் கெவினை டீ'ரெஸ் செய்வது தான்.
கெவின் இயல்பாகவே சிறப்பான கேமராக இருப்பதால் தான் பங்கு பெறும் விளையாட்டுகளில் சுலபமாக வெற்றி பெறுகிறான். அதிலும் முக்கியமாக ட்ரான் மற்றும் ரேம் எனும் சக ப்ரோக்ராம்களுடன் இணைந்து, லைட் சைக்கிள் (Light Cycle) என்னும் விளையாட்டில் வெற்றி பெற்று அந்த விர்சுவல் உலகில் உள்ள ஓட்டை மூலமாக மூவரும் தப்பிக்கிறார்கள். கெவின் அந்த விர்சுவல் உலகில் தனக்கென்று சில சக்திகள் இருப்பதை உணர்கிறான். உதாரணமாக உடைந்த வாகனங்களை அவனால் சரி பார்க்க முடிகிறது. ட்ரான் ப்ரோக்ராம் எப்படியாவது தனது யூசருடன் தொடர்பு கொள்ள முயல்கிறது. அதற்கு லோராவின் விர்சுவல் வடிவான யோரியின் உதவியை நாடுகிறது. இந்த மூவரும் இணைந்து இன்புட், அவுட்புட் டவரை ஒரு விர்சுவல் ஷிப் மூலமாக அணுகுகின்றனர். ட்ரான் தன் யூசருடன் தொடர்பு கொண்டதா, சார்க்கும் M.C.P யும் என்ன ஆனார்கள் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதன் முதல் பாகத்தின் டிரெயிலர் இதோ:
இன்பார்மேஷன் சூப்பர்ஹைவே, சைபர் ஸ்பேஸ் பற்றி தெரியாத கூமுட்டை விமர்சகர்களால் இந்த படத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும் அப்போது கணினி பற்றிய அத்தனை அறிவு இல்லாததால், மக்களாலும் இதில் உபயோகிக்கப் பெற்ற டெக்னிக்கல் பதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. 'ஸ்டார் வார்ஸ்' எப்படி முதன் முறையாக கம்ப்யுட்டர் கிராபிக்ஸை உபயோகித்ததோ, அதே போல் முதன் முறையாக இந்த படத்தில் தான் கம்ப்யுட்டர் அனிமேஷனை வால்ட் டிஸ்னி உபயோகித்தது. இதனால் அங்கு இருந்த ரெகுலர் அனிமேஷன் ஆர்டிஸ்டுகள் இந்த படத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த கம்ப்யுட்டர் அனிமேஷன், தங்களது கன்வென்ஷனல் அனிமேஷனை அழித்து விடும் என்று பயந்தனர். அவர்கள் நினைத்ததைப் போலவே இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் கழித்து வால்ட் டிஸ்னி தனது கன்வென்ஷனல் அனிமேஷன் ஸ்டுடியோவை மூடியது.
சரி இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி பேசுவோம். 27 வருடங்கள் கழித்து என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது வால்ட் டிஸ்னி எடுக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 2000 ஆம் ஆண்டிற்கு பின் இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல முறை, பல பேரிடம் ஸ்க்ரிப்ட் கேட்டு சோர்ந்து போயிருந்தது டிஸ்னி நிறுவனம். ஒரு வழியாக, 2008 இல் Brian Klugman எழுதிய கதைக்கு Adam Horowitz, Richard Jefferies, Edward Kitsis மூவரும் திரைக்கதை எழுத, Joseph Kosinskiயை இயக்குனராகப் போட்டு படத்தை ஆரம்பித்தது டிஸ்னி நிறுவனம்.
காமிக் கான் (Comic Convention) என்னும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட்டில் நடக்கும். அந்த நிகழ்வில் காட்சியாளர்கள் தங்களது படைப்பை பற்றி தகவல்களை, ட்ரைலர் போன்றவற்றை வெளியிடுவர். அதில் சென்ற காமிக் கானில் ட்ரான் லெகசியின் டெஸ்ட் புட்டேஜை வெளியிட்டது. டெஸ்ட் புட்டேஜே படு மிரட்டலாக இருந்தது. அதில் முதல் பாகத்தில் சொல்லப் பட்ட லைட் சைக்கிள் சீகுவன்சை வெகுச் சிறப்பாக செம்மைப் படுத்தி இருந்தனர்.
அந்த டெஸ்ட் புட்டேஜ் உங்கள் பார்வைக்கு:
இந்த ட்ரைலர் ஒரு வகையில் எனக்கு "The Real adventures of Johnny Quest" கார்டூனை நினைவுப் படுத்தியது. இந்த ட்ரைலரைப் பார்த்து கூட நான் அதனைக் கவரப் படவில்லை. மேலும் இந்த புட்டேஜ் படத்தில் உபயோகிக்கப் படாது என்றும் இதன் படைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இதன் இரண்டாம் ட்ரை லர் தான் படு மிரட்டலாக இருக்கிறது. அலிஸ் இன் வொண்டர்லேன்ட் திரைப்படம் பார்த்த போது ஐ மேக்ஸ் 3 டியில் இதன் ட்ரைலரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். 300 மில்லியன் டாலர் செலவு செய்வதற்கு அர்த்தமாக அத்தனை அட்சர சுத்தமான விஷுவல்கள். இதோ உங்கள் பார்வைக்கு:
உண்மையில் இது அடுத்த அவதார் என்றே சொல்லலாம். கண்டிப்பாக அவதார் அளவிற்கு இல்லை என்றாலும் போட்ட காசை வசூலித்து விடும் என்றே நம்பலாம். ஆனால் டிஸ்னி மார்க்கெட் செய்வதில் தான் எல்லாமும் உள்ளது. இதன் முதல் படியாக, இந்த படத்தின் முதல் பாகத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும். முதல் பாகம் நான் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்தது. டாரண்டுகளில் தேடிய போது நல்ல ப்ரிண்டே கிடைக்கவில்லை. கடைசியாக இந்த படம் எனது பல்கலையில் படிக்கும் அனிமேஷன் துறை மாணவர்களுக்கு பாடமாக இருப்பது தெரிந்து, இந்த படத்தின் டி.வி.டி யை பல்கலை நூலகத்தில் இரவல் வாங்கி பார்த்தேன். சில காட்சிகள் கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தாலும், அப்போதைய தொழில்நுட்பத்தை பிரமாதமாக பயன்படுத்தி இருந்தனர்.
எனக்கு தெரிந்த ஆதி களத்தில் படித்த சி ப்ரோக்ராம், தரவுத்தள (டேட்டாபேஸ் ) அறிவை வைத்து இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்கி உள்ளேன். இந்த படத்தின் டெக்னாலஜி பற்றி ப்ளோரிடாவில் வெட்டியாக பொட்டி தட்டிக் கொண்டு இருக்கும் ஹாலி பாலி உங்களுக்கு விளக்குவார். இந்த படத்தின் டைட்டில் எலெக்ட்ரான் என்ற பதத்தில் உருவாக்கப் பெற்றது. நான் ஒன்றும் தகவல் தொழில்நுட்பமோ அல்லது நிரம்ப ப்ரோக்ராம் அறிவு கொண்டவனோ கிடையாது. இருப்பினும் 'TRON' என்ற கமான்ட் 'BASIC' ப்ரோக்ராம்மிங்கில் உபயோகிக்கப் படுகிறது. அது என்னவன்றும் அதன் செயல்பாடு பற்றியும் சொல்பவருக்கும் ஹாலி பாலி ஒரு 100 டாலர் கிப்ட் கார்ட் பரிசளிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்புடி?


புகைப்படக் கண்காட்சி போன்றதொரு திரைப்படம் எம்.கே.முருகானந்தன். அண்மையில் வந்து அதிகம் பேசப்படாமலே போன ஒரு படம். போர்க்களம். அற்புதமான படம் அல்லாவிட்டாலும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் பல ...

எம்.கே.முருகானந்தன்.
அண்மையில் வந்து அதிகம் பேசப்படாமலே போன ஒரு படம். போர்க்களம். அற்புதமான படம் அல்லாவிட்டாலும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் பல உண்டு. சில காரணங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியதும் கூட.
இரண்டு விடயங்களை முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. முக்கியமாக அதன் மிக வித்தியாசமான காட்சிப்படுத்தல் எனலாம். எந்தத் திரைப்படத்திலும் மிக முக்கியமான அம்சம் இதுவேயான போதும் மிகப் பெரும்பாலானவை வழமையாக போர்முலா வடிவை மீறுவதே இல்லை. இது மீறியிருக்கிறது.இரண்டாவது கண்பார்வையற்றவன் பற்றிய மறுபக்கப் பார்வை எனலாம்.
போர்க்களம் இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் அற்புதமான படப்பிடிப்புத்தான். ஒவ்வொரு பிரேமும் மிகவும் அக்கறையோடு கலையம்சத்தோடு எடுக்கப்பட்டுள்ளன. ஒளிச் சேர்க்கை, வண்ணக்கோலம், வித்தியாசமான கமராக் கோணம் என அசத்தலாக இருக்கின்றன. புகைப்படப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கக் கூடிய படமாகும். புகைப்படக் கண்காட்சிகளில் மட்டுமே காணக் கூடிய கமாராக் கோணங்கள் திரைப்படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இது தமிழ் திரைப்பட இரசிகர்களுக்கு முதல் அனுபவமாகவே இருக்கும்.
இரண்டாவது முக்கிய அம்சம் கண் தெரியாத ஒருவன் எவ்வாறு தனக்குள்ள புலக் குறைபாட்டை மேவுவதற்கு செவிப் புலனை எவ்வாறு அதிகபட்சம் பயன்படுத்துகிறான் என்பதாகும். உயிர் பிழைப்பதற்காக தாறுமாறாக ஓடுகிற ஒருவனை துப்பாக்கியால் சுடுமளவிற்கு அவன் தனது செவிப்புலனைத் தீட்டி வைத்திருக்கிறான்.
அந்தப் படத்தின் பிரதான பாத்திரம் கர்ணன். ஆனால் அவன் பார்வையிழந்தவன் என்பது படம் நீண்ட நேரம் பயணித்த பிறகே தெரிகிறது. அதுவரை அவனது பாத்திரம் சற்றுப் புதிராக இருந்தமை எதிர்பார்க்கக் கூடியதே. அவன் பிறவிக் குருடன் அல்ல. பள்ளி செல்லும் காலத்தில் ஒரு விபத்தில் அவனது கண்பார்வை பறிபோய்விடுகிறது. ஆனால் தனக்குள்ள குறையால் சோர்ந்து மனவிரக்திக்கு ஆளாகவில்லை. சவாலாக ஏற்றுக்கொள்கிறான். கேட்கும் திறனை முழுமையாகப் பயனப் படுத்திக் கொள்கிறான். ஓலியை கருவியாக்கி சூழலை தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறான்.
கண்பார்வை அற்ற ஒருவனால் எப்படி இவ்வளவு வல்லமையோடு இருக்க முடிகிறது என்பதும், தனி ஒருவனாகப் பலரை வெட்டி வீழ்த்த முடிகிறது என்பதும் பலருக்கு மிகைப்படுத்தபட்ட காட்சிகளாகத் தோன்றாம். ஆனால் தமிழ்ப்படத்தின் சூப்பர் ஸ்டார் கதாநாயகர்கள் வழமையாக பலருடன் ஒரே நேரத்தில் மோதி வெல்வதை எமது ரசிகர்கள் எவ்வித ஆட்சேபமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அது அதிமானுடச் செய்கையாகத் தெரியவில்லை. பலருக்கு அதுவே உவப்பானதாகவும் இருக்கிறது.
அப்படிப்பட்டவர்களுக்கு பார்வையற்ற இவனின் சண்டைக் காட்சிகள் ஆச்சரியமானதாக இருக்க வேண்டியதில்லை. இத்தகைய விதண்டா வாதத்திற்கு மேலாக, பார்வையற்ற ஒருவன் தன் முழுச் செவிப் புலனையும் செம்மையாகச் செதுக்கிப் பயன்படுத்தி; பார்வையுள்ளவர்கள் செய்யும் பல செயற்பாடுகளையும் அதே பூரணத்துவத்துடன் செய்ய முடியும் என்பது உண்மை.
மனிதர்கள் தங்கள் கண் பார்வையை, கேட்கும் ஆற்றலைவிட மிக முக்கியமானது என எண்ணுகிறார்கள்.
ஆனால் ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் ஒலிகளையே முதலில் உணர்கிறது. அத்திசையில் தலையைத் திருப்புகிறது. பார்வையால் சூழலை உணர நீண்ட காலம் அதற்குப் பிடிக்கிறது.
குழந்தையை விடுங்கள் உங்களை எண்ணிப் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்து பாருங்கள். உண்மை புரியும். எவ்வளவு ஓசைகளை உங்களால் கேட்க முடிகிறது. காற்றின் சலசலப்பு, எங்கோ கூவும் குருவியின் குரல், காலடி ஓசைகள். எத்தனை எத்தனையோ.
இவை யாவும் நீங்கள் கண் திறந்திருக்கும் போதும் நிகழ்திருக்கவே செய்யும். ஆயினும் உங்கள் புலன் பார்வையிலேயே பெருமளவு தங்கி இருப்பதால் இவற்றைக் கேட்க ரசிக்க முடியவில்லை.
ஒரு ஓசை என்ன ஓசை என்பது மட்டுமின்றி அது எத் திசையிலிருந்து வருகிறது. அது நகரும் ஓசையா அல்லது ஒரே இடத்தில் நிலையான நிற்கும் பொருளிலிருந்து பிறக்கிறதா என்பதையும் எம்மால் அனுமானிக்க முடிகிறது.
மேலே கூறிய காலடி ஓசையை அல்லது ஒரு ஓடும் வாகனத்தின் ஓசையை எண்ணிப் பாருங்கள். அது எந்தத் திசையிலிருந்து எழுகிறது. அது எம்மை நோக்கி வருகிறதா அல்லது எம்மை விட்டு அகல்கிறதா என்பதை எம்மால் கண் மூடியிருக்கும் போது ஒலியை மாத்திரம் கொண்டு அனுமானிக்க முடியும். நகரும் ஒலி எவ்வளவு வேகத்தில் எம்மை நோக்கி வருகிறது அல்லது பிரிந்து செல்கிறது என்பதையும் எம்மால் துல்லியமாகக் கூற முடியும்.
இதற்குக் காரணம் எமக்கு இரண்டு காதுகள் இருப்பதும், அவை சுமார் அரை அடி தூர வித்தியாசத்தில் இருப்பதும், இரண்டும் வௌ;வேறு திசைகளை நோக்கி இருப்பதும்தான். இதனால் ஒரே ஒலி எமது வலது காதையும் இடது காதையும் வந்தடையும் நேரத்தில் சில செகனட் வித்தியாசம் இருக்கிறது. இந்த நேர வித்தியாசத்தை எமது மூளையானது கம்பியூட்டர் போல அனலைஸ் பண்ணுகிறது. இதனால் ஒலிகளின் திசையை, வேகத்தை, தீவிரத்தை எம்மால் உணர முடிகிறது.
கண் மூடியதும், காது மேலும் கூர்மையாகிவிடுகிறது. இக் கதாநாயகன் கர்ணன் இவ்வாற்றலை தனது முயற்சியால் மேலும் வளர்த்துக் கொண்டான்.
கதையில் எந்தப் புதுமையும் இல்லை. கிஷோர்(கர்ணன்) சத்யன் உதவியுடன் தனியாக வாழ்கிறான். கார் ஓட்டுவதிலிருந்து உணவு தேநீர், வீடு பாராமரிப்பு எல்லாம் சத்யன் எனும் ஒரே உதவியாளன் மட்டுமே. ஆந்திரா லங்காவின் தனிக்காட்டு ராஜாவான தாதா சம்பத் ஸ்மிதாவை கரம் பிடிக்க ஆசைப்படுகிறான்.
அவனிடமிருந்து தப்பித்து ஓடிவரும் அவள் கிஷோரிடம் தஞ்சம் அடைகிறாள். துரத்தி வரும் ஆந்திர தாதாக்களை துவசம் பண்ணிக் கலைக்கிறான். அரை மனத்தோடு தனது இடத்தில் தஞ்சம் கொடுக்கும் அவனில் அவளுக்கு காதல் வந்துவிடுகிறது. கண் பார்வை இல்லாததால் இதனை ஏற்க விரும்பாத கிஷோர் அவளை போலீசில் கொடுத்து வீட்டாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறான். அவர்களோ சம்பத்திடமே கையளித்து விடுகிறார்கள்.
மீதி படம் முழுவதும் ஆந்திரா தாதாக்களுக்கும் இவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான். இறுதியில் போர்க்களத்தில் அவர்களைத் தனியே சந்திக்கிறான். கண் தெரியாத இவன் எப்படி தனது உடல் பலத்தையும், செவிப் புலனையும், பகுத்தறிவையும் பாவித்து அவளைக் காப்பாற்ற முயல்கிறான் என்பதே கதை.
தாதாக்கள், ரோட்டு ரவுடிகள், சந்தர்ப வசமாக கொலையாளிகளாக மாறும் நல்லவர்கள் என தமிழ் திரையுலகு நிறையவே தந்தவிட்டது. ஆயினும் சுப்ரமணியபுரம் நாடோடிகள், ரேனிகுண்டா, வெண்ணிலா கபடிக்குழு என பல நல்ல படங்கள் அதனுள் கிடைத்திருக்கினறன.
அந்த வரிசையில் சேர்க்கத் தக்கது இது. தேவையற்ற காட்சிகள் கிடையாது. எந்த ஒரு பாத்திரமும் அவசியம் இன்றி படத்தில் இல்லை. படத்தின் ஓட்டம் சற்று மெதுவாக இருக்கிறது. வசனங்கள் மிகக் குறைவு. காட்சிகளால் நகர்கிறது. அதுவே அதன் பலம். சில தருணங்களில் பலவீனமும் கூட. ஏனெனில் கதையின் நகர்வை சில இடங்களில் தெளிவாகப் புரிந்த கொள்ள முடியாதிருக்கிறது.
காட்சி அமைப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. பளீரென கண்ணைக் குத்துவது போலன்றி சற்றுக் கருமை படர்ந்த ஒளிஅமைப்பு. படப்பிடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து அல்பத்தில் சேர்க்கலாம் போலிருக்கிறது. வண்ணங்கள் இயற்கையானவை அல்ல. இரண்டு கலர் டோன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பல எதிர்பாராத திருப்பங்களும், திகிலும் இருக்கிறது. மனதைச் சூழும் திகிலைத் தீவிரமாக்கத் பின்னணி இசையும் துணையாக இருக்கிறது.
விழிப்புலன் அற்றவர்களை நையாண்டி செய்யாது உயரத்தில் நிறுத்தி வைத்த பெருமை மேஜர் சுந்தரராஜனுக்கு உண்டு. அக்காலத்தில் இரசித்த படம் அது - மேஜர் சந்திரகாந்.
இப்பொழுது விழிப்புலனற்றவனை மற்றொரு பரிமாணத்திற்கு உயர்த்தி வைத்த பெருமை போர்க்களம் படத்திற்கு உண்டு.
வெண்ணிலா கபடி குழு சினிமாவில் கபடி கோச் ஆக வந்து மனதில் நின்ற கிஷோர் இத் திரைப்படம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமா உலகில் பெற்றிருக்கிறார். பொல்லாதவன், ஜெயம்கொண்டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்ததாக அறிகிறேன். ஆனால் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.
குளொஸ் அப் சொட்கள் இல்லை. இதனால் முகத் தசைகள் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆயினும் கிஷோரின் உடல் மொழி அற்புதமாகக் இருக்கிறது.
ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் பிரகாசிப்பார் எனத் தோன்றுகிறது. பாத்திரத்திற்கு ஏற்ப அவரது குரலின் அடர்த்தியும் உதவுகிறது.
தன்னைச் சுற்றித் திரியும் காற்றின் மொழியை, அதன் ஒவ்வொரு அசைவையும் மிக நுட்பமாகக் கிரகித்து சூழலை தனது கணனி போன்ற மூளையில் பிரித்தறிந்து எதிர்வினை புரிவது அட்டகாசமாக உள்ளது.
எதிரியைத் தாக்கும்போது அவனது அசைவை நிதானமாக காது கொடுத்துக் கிரகித்து அவன் தன் கைக்கு அகப்படும் எல்லைக்குள் வந்ததும், எதிரி எதிர்பாராப் பிரகாரம் மரண அடி கெடுப்பதும் அசத்தலாக இருக்கின்றன.
ஆயினும் தனிமனிதன் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா என்ற ஆராச்சிகளுக்குள் நாம் புகக் கூடாது.
இவை எமக்கு பரிச்சியமான ஒவ்வொரு தமிழ் ஹீரோக்களின் அதிமானுட நாயகர்களின் அடையாளங்களும்தான்.
அதையே புதுமை செய்யப் புகுந்த இயக்குனரும் பின்பற்றுவது ஏமாற்றம் தரவே செய்கிறது.
சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு மரண அடி கொடுத்த பின் ஒரிரு கணங்கள் அசையாமல் நிற்பது அவனது ஸ்டைலான போஸாக இருக்குமோ என எண்ணினேன்.
ஆனால் மருத்துவனாக நின்று யோசிக்கும்போது கண் பார்வையின்றி ஒலியின் சலசலப்பில் மட்டுமே சூழலை அளக்கும் ஒருவனால் அப்படித்தான் இயங்க முடியும் எனப் புரிகிறது.
திடீரெனப் கொடுத்த அடியினால் பிறந்த ஓசையும், அடி வாங்கியவனது வேதனை ஒலியும் மேலோங்கி நின்று அவனது கவனத்தைத் திருப்பியிருக்கும்.
சற்று நிதானித்தே மீண்டும் சூழலுக்குள் அவனால் வரமுடியும். அதனால்தான் அப்படிச் சித்திரித்துள்ளார்கள்.
இவற்றை நடிகன் மாத்திரம் செய்ய முடியாது. இயக்குபவனின் பங்கு மிக அதிகம். பாண்டி சரோஜ்குமார் தனது முதல்படத்திலேயே பல புதுமைகளைச் செய்துள்ளார். பாங்காக் திரைப்படக் கல்லூரியில் இயக்குனராகப் பயின்றவர். மிக வித்தியாசமான இயக்குனர். திரைக் கதையில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தி, படத்தின் வேகத்தையும் - முக்கியமாக பிற்பாதியில் சற்று அதிகப்படுத்தி இருந்தால் அற்புதமான படமாக இருந்திருக்கும்.
சத்யன்தான் கிஷோரின் உதவியாளன். அப்பாவித்தன நடிப்பினால் சிரிக்க வைக்கிறார். சற்று நேரம் மட்டுமே தோன்றினாலும் பிஜு மேனன் தனது நடிப்பாலும் துப்பாக்கி சாகசங்களாலும் மனதில் நிற்கிறார். ஸ்மிதா நாயகி பெரிதாக வேலையில்லை.
ஆனந்தனின் கலை இயக்கம் படத்தின் சிறப்பிற்கு மிகவும் உதவியிருக்கிறது.
பாடல்கள் சாதாரணம். ஆயினும் பின்னணி இசை பல இடங்களில் அருமையாக இருக்கிறது.
சில நேரங்களில் திகிலூட்டவும் செய்கிறது. இந்தி இசை அமைப்பாளரான ரோஹித் குல்கர்னிதான் இசையமைத்திருக்கிறார். நான்கு பாடல்கள். நா. முத்துகுமாரின் ஆக்கங்கள். மனதில் நிற்கிற மாதிரி இல்லை.
ஆயினும் படத்தின் சிறப்பாக மனதில் கடைசிவரை ஒட்டிக் கொண்டிருப்பது ஒளிப்பதிவுதான்.
ஒளியும் இருளும் காட்சிக்குக் அற்புதமான விகிதாசாரத்தில் கலந்து மந்திரஜாலமாக அசத்துகிறது. ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒற்றக் கூடியன.
முற்றிலும் எதிர்பார்க்காத, வித்தியாசமான கோணங்களில் அவரது கலையுணர்வை மோகிக்கும் வண்ணம்; பதிந்த மகேந்திரன் பாராட்டப்பட வேண்டியவர்.
ஆயினும் தேவராஜ், மற்றும் தேவா ஆகியோரும் பங்களித்திருப்பதாகத் தெரிகிறது. எழுத்து, காட்சியமைப்பு, இயக்கம் பண்டி சரோஜ்குமார் என்றே போடப்படுகிறது. எனவே இவற்றில் இயக்குனரின் பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
கோடரியும் வாளும் இணைந்தது போன்ற வித்தியாசமான ஆயுதங்கள்,
இறந்த மாட்டின் முள்ளந்தண்டு எலும்பு,
மண்டை ஓடு போன்ற பின்னணிகள் பயங்கரமாக இருந்தாலும் பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை.
இறுதியாகச் சொல்வதாயின்
மிகச் சாதாரணமான ஒரு கதையை சொல்லபட்ட விதத்திலும்,
வழமைக்கு மாறான காட்சி அமைப்புகளாலும்,
கமராக் கோணங்களினாலும் பேச வைத்திருக்கிறார்கள்.
வழமையான போர்முலா படம் அல்ல.
மிகுந்த ஆர்வத்தோடு செய்திருக்கிறார்கள்.
கதை ஓட்டம் பிற்பாதியில் தொய்ந்தாலும் கடைசிச் சண்டைக் காட்சி அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டள்ளது.
இறுதி வழமையான சுபம்.
எம்.கே.முருகானந்தன்
நன்றி:- வீரகேசரி

ஆறாவது சர்வதேசத் திரைப்பட விழா துபாயில் டிசம்பர் 9 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 16 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்விழாவில் 55 நாடுகளிலிருந்து 168 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் அராபிய ஆவணப்படங்களும் பாலஸ்தீனிய குறும்படங்களும் உள்ளடக்கம். பெரும்பாலான திரையிடல்கள் மால் ஆஃப் எமிரேட்ஸ் - சினிஸ்டார் திரையரங்குகளிலும் சொற்பமான படங்கள் மதினாத் ஜூமைரா, டிஎம்சி உள்ளிட்ட மற்ற மூன்று இடங்களிலும் திரையிடப்பட்டன.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை தேர்வுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது ஒருவகையில் சரியானதே. பெரும்பான்மையுடன் போட்டியிட முடியாத சிறுபான்மை சினிமாவிற்கான தளமாகவும் துபாய் திரைப்பட விழா இருக்கிறது. A celebaration of Indian cinema என்கிற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமிதாப் பச்சனிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நம் ஊரிலிருந்து அவள் பெயர் தமிழரசி மற்றும் யோகி இரண்டும் இடம் பிடித்திருந்தன. பிற நாடுகளின் வரிசையில் பிரெஞ்சுத் திரைப்படங்களும் அதிகம் திரையிடப்பட்டன.
மற்ற நாடுகளின் சினிமா பரிச்சயமான அளவிற்கு நான் வாழும் நிலப்பரப்பின் திரைப்படங்களை இன்னும் பார்த்திருக்கவில்லை(ஈரான் நீங்கலாக) எனவே இம்முறை மத்திய கிழக்கின் படங்களைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் முன்பெப்போதுமில்லாத பரபரப்பான நாட்களை எதிர்கொண்டிருப்பதால் நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.
THE NILE BIRDS – Egypt
WHISPER WITH THE WIND -Iraq
MY DEAR ENEMY - South Korea
THE MAN WHO SOLD THE WORLD - Morocco
நான்கு படங்களுமே நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. திரைப்படம் என்கிற வகையில் எகிப்திய படமான நைல் பேர்ட்ஸ் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தாலும் நைல் நதிக்கரை மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வு, காமம், கொண்டாட்டம், துயரம் இவற்றை ஓரளவிற்கு சுமாரான திரைக்கதையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எகிப்தில் சினிமா ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை. அதிக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை. வளர்ச்சி, தொழில்நுட்பம் என எதுவுமில்லாத ஒரு தேசத்திலிருந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முக்கிய சினிமாவாக இருக்கலாம். இப்படத்தினை அதன் இயக்குனரோடும் கதாநாயகனோடும் அமர்ந்து பார்த்தேன். படம் முடிந்த பின்பான உரையாடலில் நான் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எகிப்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்து இச்சினிமா குறித்த நல்லதொரு திருப்தி இருந்ததை அவர்களின் களிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
After the Downfall, Heman, The Children of Diyarbakir, Whisper with the Wind போன்ற குர்திஷ் இயக்குனர்களின் படங்கள் இம்முறை இடம் பெற்றிருந்தன. குர்திஷ் இன மக்களின் அழித்தொழிப்பை களமாகக் கொண்டிருக்கும் இத் திரைப்படங்கள் துருக்கி,ஈரான் மற்றும் ஈராக் நாடுகளால் கொன்று குவிக்கப்பட்ட குர்திஷ் இன மக்களின் அவலத்தை மிகுந்த வலியுடன் நம் முன் வைக்கின்றன. Turtles can fly படத்தை இயக்கிய பக்மன் ஹோபாடியின் No one Knows about Persian Cats படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பியிருந்தேன் அத்திரைப்படம் இங்கு திரையிடப்படாததால் இரானிய குர்திஷான ஷாஹ்ரம் அலிடியின் இயக்கத்தில் வந்த Whisper with the Wind படத்தைப் பார்த்தேன். ஷாஹ்ரம் அலிடியின் முதல் படமிது. கான் 2009 திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. குர்திஷ் இன மக்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வெறியாட்டத்தை, படுகொலைகளை இத் திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. வறண்ட மலைகள் சூழந்த நிலப்பரப்பு, எல்லாவிடத்தும் நிறைந்திருக்கும் காற்றின் அமானுஷ்ய சப்தம் இவற்றின் பின்னணியோடு மிகத் துல்லியமான, அபாரமான ஒளிப்பதிவும் சேர்ந்து இப்படத்தை மிளிரச் செய்திருக்கிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் சாமான்யர்களின் வாழ்வு மிகுந்த வலியுள்ளதாக இருக்கிறது. தொடர்ச்சியான போர்களிலும், வல்லரசுகளின் கோரத் தாண்டவங்களிலும் சிக்கி அலைவுறுவதோடு மட்டுமில்லாமல் மதம், சமூகக் கட்டுக்கள், சிறுபான்மை இனத்தவரின் மீதான அதிகாரத்தின் வெறியாட்டம் என எல்லா வன்முறைகளும் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண்டிருக்கும் இடமாக இத் தேசங்கள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலிலிருந்து வெளிவரும் படங்கள் தங்களின் துயரம் நிரம்பிய வாழ்வை, இழப்பை, கதறல்களை இரத்தமும் சதையுமாக பார்வையாளன் முன் வைக்கின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்ச்சி பார்வையாளனை நிலைகுலைய வைக்கிறது. அப்படி ஒரு அதிர்வைத்தான் இப்படமும் ஏற்படுத்தியது. ஈராக் - அமெரிக்க போர்சூழல் பின்னணியில் வெளிவந்த turtles can fly படத்தின் தொடர்ச்சியாக இதை அணுகலாம். இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறானது என்றாலும் இரண்டுமே சாமான்யர்களின் துயரத்தை மிக அழுத்தமாகவே நம் முன் வைக்கின்றன.ஈராக் மலைப்பிரதேசங்களில் வாழும் குர்திஷ் மக்களின் அழித்தொழிப்பில் தன் மகனை இழந்த மாம் பால்டார் என்கிற முதியவர் திக்பிரம்மையுற்ற மனைவியுடன் எஞ்சிய நாளை கழிக்கிறார். தன் வாகனத்தில் மலைகள், சமவெளிகள் முழுக்கப் பயணித்து அங்கங்கே மீதமிருக்கும் மக்களுக்கு தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார். கூண்டோடு அழிக்கப்பட்ட கிராமங்கள், உயிரோடு புதைக்கப்பட்ட மனித உடல்கள் எல்லாவற்றையும் தாண்டி மீதமிருக்கும் மனிதர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது பயணங்களில் தென்படும் கடைகள், நிகழ்வுகள் யாவும்
திரும்பி வரும்போது காணாமல் போயிருக்கின்றன அல்லது சிதிலமாகிக் கிடக்கின்றன. உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் அழித்தொழிப்புகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரலாம் என்கிற பயத்தோடு வாழ்கிற மக்களின் அவலத்தை மிகத் துல்லியமாய் பதிவு செய்திருக்கும் படமிது. எல்லா நம்பிக்கைகளும் காணாமல் போன பின்பு அங்கங்கே கேட்கும் அல்லா அல்லா என்கிற அவலக் குரல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மாம் பால்டார் பதிவு செய்த பிறந்த குழந்தையின் அழுகுரலொன்றை தடைசெய்யப்பட்ட வானொலி ஒளிபரப்பு செய்கிறது. மலைப் பிரதேசமெங்கும் வானொலியில் கேட்கும் அப்போதுதான் பிறந்த குழந்தையின் அழுகுரல் புதியதொரு துவக்கத்திற்கான நம்பிக்கைகளைத் தருவதோடு படம் நிறைவடைகிறது.ஈழம், குர்திஷ்தான் என நிறைவேறாமலேயே போன அற்புதங்கள் கணக்கிலடங்கா குழந்தைகளின் பெண்களின் முதியவர்களின் இளைஞர்களின் உடல்களைத் தின்று அதிகாரத்தின் காலடியில் புதையுண்டிருக்கலாம். ஆயினும் அதிகாரத்தின் குரல்வளையை நோக்கிப் புதைவிலிருந்து நீளும் ஆயிரம் கைகளைப் பற்றிய கனவுகளின் மீது நம்பிக்கை வைப்பதுதான் இந்நாட்களின் மீட்பாய் இருக்கிறது.
மொராக்கோ திரைப்படமான The man who sold the world புதுமையான காட்சி அனுபவத்தைத் தந்தது. திரைப்படவிழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டு இரண்டு முறையும் அரங்கு நிறைந்தது. இவ்விழாவில் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இதைச் சொல்லலாம். இமாத் நூரி(Imad Noury), சுவெல் நூரி (Swel Noury) என்கிற மொராக்கோ சகோதரர்கள் இயக்கிய படமிது. இவர்களின் தந்தை ஹக்கிம் நூரி மொராக்கோவில் நன்கு அறியப்பட்ட இயக்குனர். தாய் மரியா (Maria Pilar Cazorla) ஸ்பானியத் திரைப்பட தயாரிப்பாளர். இத் திரைப்படத்தை தயாரித்திருப்பதும் இவர்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் 'A Weak Heart' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. பெரும்பாலான காட்சிகளில் இரஷ்ய இயக்குனர் அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் பாதிப்பை உணர முடிந்தது. திரையில் மிகச் சிறந்த கவித்துவப் படிமங்களை உண்டாக்குவதில் வல்லவரான தர்க்கோயெவ்ஸ்கியால் பயன்படுத்தப்பட்ட பல திரைப்படிமங்கள் இவர்களை பாதித்திருக்கின்றன. கவித்துவ உச்சங்களை திரையில் கொண்டுவர தர்க்கோயெவ்ஸ்கியால் மட்டும்தான் முடியுமென்கிற என் இறுக்கமான நம்பிக்கைகளை இவர்கள் சற்றுத் தளர்த்தியிருக்கிறார்கள். மத்திய கிழக்கின் intellectual cinema என இத்திரைப்படத்தை தாராளமாக கொண்டாடும் அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்ப சுவெல் நூரி.
ரெட் காமிராவினைக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். லில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Audrey Marnay யின் வெண்ணிற உடலில் தனியாய் தெரியும் அடர் சிவப்பு உதடுகளும் சிவப்புச் சாயம் பூசின நகங்களும் ரெட் காமிராவின் அசாத்தியங்கள். படம் முழுவதுமே சிவப்பு நிறம் காதலின் நிறமாகவும் கொண்டாட்டத்தின் நிறமாகவும் கையாளப்பட்டிருக்கிறது.
காட்சிகளுக்குப் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் படத்திற்கு அசாதாரணத் தன்மையை தந்திருக்கின்றன. மனதின் மிக ஆழமான, கொந்தளிப்பான, உணர்வுகளின் / உணர்ச்சிகளின் தெறிப்பை ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. பதினைந்து தலைப்புகளில் இத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளமில்லா தேசத்தில் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. வளைந்த கால் ஒன்றையும் மிக இலேசான இதயத்தையும் கொண்டவனுமான எக்ஸ்(Said Bey) அரசாங்கத்தின் கோப்புகளை மறு பிரதியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். எக்ஸின் கையெழுத்து அந்த ஊரிலேயே மிகச் சிறந்த கையெழுத்தாய் இருப்பதனாலும் அவன் உடல் சிக்கலை முன் வைத்தும் அவனை அரசாங்கம் போர் முனைக்கு அனுப்பி வைக்க வில்லை. எக்ஸின் அறைத்தோழனும் சக பணியாளனுமான நே (Fahd Benchamsi) எக்ஸின் மீது மிக ஆழமான அன்பை வைத்திருக்கிறான். இருவரும் மிக நெருக்கமான அடர்த்தியான அன்பில் திளைக்கிறார்கள். மேலதிகமாய் எக்ஸிற்கு லில்லி என்கிற மிக அழகான பாடகியின் காதலும் கிட்டுகிறது. அவள் எக்ஸை இந்த உலகத்தின் எல்லாவற்றையும் விட அதிகமாய் நேசிக்கிறாள்.
தன் மீது நம்பிக்கை வைக்கும் உயரதிகாரி, அன்பையும் அக்கறையும் கொட்டும் உயிர்த்தோழன், தன்னை வாரிக் கொடுக்கும் அழகான காதலி என எல்லாமிருந்தும் எக்ஸ் துயரமடைகிறான். பதட்டமடைகிறான். இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்துவிட்டதே என குற்ற உணர்வு கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையை குலைத்து விடுவோமோ என பயப்படுகிறான். தன்னை உலகத்துடன் பொருத்திப் பார்த்து உலகம் எப்போது மகிழ்வடைகிறதோ அப்போதுதான் தன்னால் மகிழ்வாய் இருக்க முடியும் என நம்புகிறான். இறுதியில் மனநிலை பிறழ்கிறான்.
இப்படத்தின் திரையாக்கம் மகிழ்வையும், உற்சாகத்தையும், அன்பில் திளைத்தலையும், நட்பையும், காதலையும், காமத்தையும், உடலையும், போதையையும், பைத்தியத்தன்மையையும் மிகச் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. போர்ச்சூழலை காண்பிக்க இரண்டு சிதிலமடைந்த வீடுகளும் எக்ஸ் மற்றும் நே வின் பதட்டங்களும் போதுமானதாய் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் கதையும் புறம் சாராது அகத்திலேயே பயணிப்பதால் இடம்/தேசம் குறித்தான அடையாளமற்றத் தன்மையை உண்டாக்க இயக்குனர்கள் பெரிதாய் மெனக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.
திரையிடலுக்குப் பின்பான கலந்துரையாடலில் நூரி சகோதரர்களில் ஒருவரும் தயாரிப்பாளரான தாயும் மற்றும் எக்ஸாக நடித்திருந்த சையத்பேவும் பங்குபெற்றனர். இரஷ்ய நாவலை அராபிய போர் சூழலுக்குப் பொருத்த எவ்வாறு முடிந்தது என்கிற வினாவிற்கு நூரி பதிலளித்தார். தஸ்தாயெவ்ஸ்கி, காஃப்கா போன்றவர்களின் படைப்புகளில் சூழல்கள் பின்னணிகள் குறித்த பெரும் விவரணைகள் இல்லாதது எல்லா சூழல்களுக்கும் பொருந்திப் போக இலகுவாய் இருக்கிறதென்றார். தாய் தயாரிப்பாளராக இருந்ததால் தங்களால் சுதந்திரமாய் இயங்க முடிந்ததென்றும் பட நேர்த்தியை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட முடிந்ததாயும் பகிர்ந்தனர். அரை மில்லியன் யூரோக்களை இப்படத்திற்கு செலவு செய்ததாய் மரியா பகிர்ந்தார். முப்பது வயதையும் எட்டியிராத இவ்விளம் இயக்குனர்கள் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானதுதான். மேலதிகமாய் இத்திரைப்படம் மூலமாய் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன போன்ற மொன்னை கேள்விகளுக்கும் மிக நிதானமாய் பதில் சொல்லும் பொறுமையும் இவர்களுக்கு இருக்கிறது.படம் முடிந்த பின்பு நூரியின் கைகளை அழுத்தமாய் பற்றிக் குலுக்கினேன். இவ்விரு சகோதரர்களும் வருங்கல மத்தியக் கிழக்கின் தவிர்க்க முடியாத சினிமா அடையாளமாகவிருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
துபாய் திரைப்பட விழாவின் வண்ணம் வருடத்திற்கு வருடம் மெருகேறிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்நிகழ்வை அவதானித்து வருபவன் என்கிற முறையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக தைரியமான படங்களை விழாக் குழுவினர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். உள்ளூர் படங்களுக்கு கணிசமான பரிசை வழங்குவதின் மூலம் அராபிய இளைஞர்களிடையே திரைப்படம் குறித்தான சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறார்கள். அய்ரோப்பிய திரைப்பட விழாக்களைப் போல கவர்ச்சியும் வசீகரமும் புகழின் வெளிச்சமும் அங்கீகாரங்களும் இன்னமும் இவர்களுக்கு கிடைக்கவில்லைதான் எனினும் மத்தியக் கிழக்கின் பெருமளவில் அறியப்படாத சினிமாக்களுக்கு இவ்விழா ஒரு பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
அகநாழிகை மார்ச் 2010 இதழிலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. நன்றி வாசு.



இந்தியாவின் சக்தி வாய்ந்த ஐம்பது பிரபலங்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 28 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இவரை தென்னிந்திய ...

ஒரு காலத்தில் ரஜினி ரசிகர்கள் யாருக்கும் அஜித்தை பிடிக்காது. இதற்க்கு காரணம், சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அஜித் அளித்த ஒரு வில்லங்கமான பேட்டி. அதில் அஜித் சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணம் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. நான் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பேன் என்று கூறினார். இது "அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்" என்று நம்ம நித்யா புகழ் பத்திரிகையில் வெளி வந்தது. இதை படித்த அனைத்து ரஜினி ரசிகர்களும் ஆத்திரம் அடைந்தனர். ரஜினியின் ரசிகர் கூட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். இயல்பாகவே மக்களிடம் அஜித் மீதான வெறுப்பு பரவி இருந்தது. அதை இன்றும் கூட மக்களிடம் காணலாம். 



எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது! எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து ...

****************
என் மகள் படிக்கும்பள்ளியில் சில நாட்களுக்கு முன் வரவேற்பு ப்ளாக்போர்டில் எழுதியிருந்த வாசகம் என்னை கவர்ந்திருந்தது, நானும் எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா மறந்து மறந்து போயிடறது, இன்னைக்கு அதுக்காகவே குவியல்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி நலன் கருதி, வண்ண உடை அணிவித்தல், கோவிலுக்கு கூட்டி செல்லுதல், மாலை போடுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் என்றிருந்தது!
குழந்தைக்ள் கல்வியில் அக்கறை காட்டும் பள்ளியில் என் மகள் படித்து கொண்டிருக்கிராள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையும் கூட!
*****************
படித்ததில் பிடித்தது
மலேசியாவை சேர்ந்த தோழர் பாலமுருகனின் இந்த சினிமா விமர்சனம் நன்றாக இருந்தது.
செல்வேந்திரனின் பரிசலின் “டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்” சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனமும், அதை தொடர்ந்து நடைபெற்ற பின்னூட்ட விவாதத்தின் பதிலும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது!
*****************
தருமி அய்யா, என்னை பதின்மவயது குறிப்புகள் தொடர் எழுத அழைத்திருந்தார், பதின்ம வயதில் நான் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன்!, சில வித்தியாசங்கள் தவிர
ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,
பதினொரு வயதில் பீர் அடித்தேன்,
பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,
பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிறுப்பித்தேன்.
இதை தவிர நீங்கள் செய்த அதே சேட்டைகளை தான் நானும் செய்தேன்!
***********************
நண்பரின் பித்தனா, சித்தனா என்ற வலைப்பூவில் பார்த்த இந்த யூடியூப் வீடியோ கொள்ளை அழகு, உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இங்கேயும் பகிர்வு!
************************
88 minutis
இரண்டு நாள் முன்பு ஸ்டார் மூவீஸில் இரவு 12 மணிக்கு இந்த படம் பார்த்தேன்!
the game என்ற படத்திற்கு பிறகு திரைக்கதையில் என்னை அசரடித்த படம்,
al pasino நடிப்பை பற்றி ஆங்கில பட பிரியர்களுக்கு நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை, ஆனால் ”செண்ட் ஆஃப் வுமன்” படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் நடிப்புக்கு வேலை குறைவு தான், ஆனால் திரைக்கதை அனைத்தும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது! எதிர்பாராத திருப்பங்களும், கட்டில்! நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸும் கண்டிப்பாக அனைவரும் ரசிக்க வேண்டிய ஒன்று!
********************
குட்டி கவிதை(மாதிரி)


மேலும்படிக்க


பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழின் உச்சியில் இருந்த ரஷ்ய எழுத்தாளர் மார்க்ஷிம் கார்க்கி. இவர் எழுதிய ‘தி மதர்’ என்ற நாவல் ...


பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழின் உச்சியில் இருந்த ரஷ்ய எழுத்தாளர் மார்க்ஷிம் கார்க்கி. இவர் எழுதிய ‘தி மதர்’ என்ற நாவல் நூற்றுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
மேலும்


ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி என்றால் ...

ஆங்கில படங்களில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களும் அத்துபடி என உங்களால் சொல்ல முடியுமா? அப்படி என்றால் உங்கள் திறமைக்கு சவால்விடும் இணையதளம் ஒன்று இருக்கிறது.
ஸ்கிரின்பிளேகுவிஸ் என்னும் அந்த தளம் உங்கள் திரைப்பட அறிவை சோதிக்கும் வகையில் வினாடி வினா பாணியிலான கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்கிறது.
மொத்தம் 5 வகையான வினாடி வினா இருக்கின்றன.எல்லாமே சுவாரஸ்யமானவை.
முதல் வினாடி வினாவுக்கு பிரேம் பை பிரேம் என்று பெயர்.குறிப்பிட்ட திரைப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பத்து பிரேம்கள்(காட்சிகள்) தேர்வு செய்யப்பட்டு கான்பிக்கப்படுகிறது.அவற்றை பார்த்து படத்தை சொல்ல வேண்டும்.
அடுத்த பகுதியில் பிரேமுக்கு பதிலாக 5 நொடி ஒடக்கூடிய காட்சிகள் அடுத்தடுத்து தோன்றும். அவற்றைப்பார்த்து படத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
மூன்றாவது வழக்கமான கேள்வி பதில் பகுதி.
அடுத்த பகுதியில் திரைப்படங்களில் இருந்து பிரபலமான வசனங்கள் மேற்கோள் காட்டப்படும் .இந்த பஞ்ச் டயலாக் மூலம் சரியான் படத்தை சொல்ல வேண்டும்.
கடைசி பகுதி உண்மையிலேயே சுவையானது.குறிப்பிட்ட படங்களீல் சேர்ந்து நடித்த நடிகர்களை கொண்டு அல்லது ஒரே நடிகர் தொடர்பான படங்களை வைத்து ஒரு பிரமிடை உருவாக்கி காட்ட வேண்டும்.
ஹாலிவுட் படங்களை பார்த்து ரசித்தவ்ர்கள் முயற்சித்து பார்க்கலாம். அப்படியே யாரவது கோலிவுட் படங்களூக்காக இது போன்ற இணையதளத்தை உருவாக்கலாம்.
——-
http://www.screenplayquiz.com/frame/framehome.php


அனாதி குஞ்சாமணியிடம் எனது கேள்விகளுக்கு பதில் எழுதும்படி சொல்லுங்களேன் ப்ளீஸ்…
1. கரண்ட கட் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குஞ்சு ?
2. வுமனைசர் என்றால் என்ன ? விபரம் சொல்ல முடியுமா?
3. நடிகர் குஜய் பற்றி உங்களின் கருத்து ?
அன்புடன்
பழனிவேல்முருகன்
சென்னை
மேற்படி மெயிலை எனக்கு அனுப்பி வைத்த அனாதிக்கும், கேள்வி கேட்ட பஞ்சாமிர்த அடச்சே… ப.வே.முவுக்கும் நன்றி. பாருங்கள் நேற்றைக்குதான் எனக்கு நேரமே கிடைத்தது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்தேனா, அப்போ பார்த்து அமெரிக்காவில இருக்கிற விளங்காத கூட்டாளிப்பய அமெரிக்காவிலிருந்து இயக்கப்பட்டும் அந்த மாதிரியான ஒரு சைட்டின் பாஸ்வேர்டை அனுப்பி பாருடா பாருன்னு சொன்னான். இன்னும் தூங்காமல் பார்க்கிறேன் முடியலை. அதுக்குள்ள இந்த அனாதிப்பய, ஒழுங்கா பதிலை போஸ்ட் செய்யுன்னு நச்சு நச்சுன்னு நச்சுறான்(எங்கே எவளோட படுத்திருக்கான்னு தெரியலை,அடிக்கடி டெல்லிக்கு வேற போயிடுறான்)
இப்போது பதில்களைப் பார்க்கலாம்.
1. பவர் ஷட்டவுனால தமிழர்களுக்கு பெரும் கொடுமையை இழைத்திருக்கிறது தமிழக அரசு. அதிலும் சமீபத்திய அறிக்கையில் இனி இரவில் பவர் கட் இருக்காது என்று சொல்லியிருக்கிறார்கள். என்னய்யா அக்கிரமம் இது? பவர் கட்டினால் என்னைப் போல எண்ணற்றோர் பெற்று வந்த அஜால் குஜாலுக்கு வேட்டு வைத்து விட்டீர்களே நியாயமா? தமிழக அரசின் இந்த அறிவிப்பை படித்த எனது நண்பர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். இன்னொரு நண்பருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது. இருவரும் ஃப்ளாட்டுகளில் குடியிருக்கின்றார்கள் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ப்ளாட்டுகளில் இருக்கும் குருமாக்கள் சூடு காணாமல் சில்லிட்டுப் போயிருக்கின்றன. பெண்பாவம் பொல்லாதய்யா பொல்லாது.
செய்தி தாள்களில் வரும் செய்திகளை உண்மையென்று நம்பும் என் நண்பர்களில் பலர் என்னிடம் சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டும் மூன்று குஞ்சுகளும், நான்கு சாமான்களுமா இருக்கிறது. அங்கு மட்டும் பவர் கட் இல்லையாமே என்று பொறாமையில் புழுங்குகின்றார்கள். எதைச் செய்கிறதோ இல்லையோ, மின்வாரியம் மிகச் சரியாக பவர் கட் செய்வதில் கின்னஸ் சாதனை செய்து வருகிறது என்று மேலும் புலம்புகிறார்கள். சென்னையில் ஃபாக்டரி வைத்திருப்பவனுக்கெல்லாம் தடையற்ற பவர் கொடுக்கும் அரசு மற்ற பகுதிகளில் ஃபாக்டரி வைத்திருப்பவர்களுக்கு ஏன் துரோகம் செய்கிறது என்கிறார்கள். வரும் தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டுக் குத்தி ஆப்பு அடிக்கிறோமா இல்லையான்னு பாருன்னு கண்கள் சிவக்க சொல்கிறார்கள். சென்னையைத் தவிரப் பிற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் உட்பட ஆண்களில் பெரும்பாலானோர் பவர் கட்டினாலும், சென்னையில் மட்டும் பவர் கட் இல்லையென்ற விஷயத்தினாலும் ஆளும் தமிழக அரசின் மீது படு வெறுப்பில் இருக்கின்றார்கள். மாற்று வேண்டுமென அவர்கள் மனம் விரும்ப ஆரம்பித்து விட்டதை நான் கண்கூடாக கண்டு வருகிறேன். ஆளும் கட்சி என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிக்கு வாய்ப்பை வழங்க விரும்புகின்றார்கள் மக்கள்.
அவரவர்களுக்கு அவரவர் பிரச்சினை. எனக்கு பவர் கட் இல்லையென்றால் தான் பிரச்சினை.
2. வுமனைசருக்கு சரியான எடுத்துக்காட்டு – குமுதமும், ஆனந்த விகடனும். எப்படி என்கின்றீர்களா? மேற்படி பத்திரிக்கைகளில் பெண்கள் இல்லாமல் ஏதாவது தொடர்ந்தால் போல் நான்கு பக்கங்கள் இருக்குமா? பெண்களை விரும்புவர்களைத் தானே வுமனைசர் என்போம். உடனே சாருவைப் பற்றி நினைத்து விடக்கூடாது. சாருவின் பேட்டியைப் படித்து விட்டு பல கணவர்கள் தங்கள் பெண்டாட்டிகள் மேல் சந்தேகப்பட்டனராம். காது வழிச் செய்தி இது? சாருவின் பாராட்டு மழைகளில் நனைபவர்களுக்கு உடனடி பிரச்சினை கைமேல் பலனாக கிடைக்கும் என்பது நித்தி வழி கண்ட உண்மை. நித்தியை வாழ்த்தினாலும் காசு, திட்டினாலும் காசு பார்க்கும் சாரு பிழைக்கத் தெரிந்தவர். படிக்கிறவர்கள் பற்றி நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
3. நடிகர் குஜய் – ஒரு நிமிடம் அவர் முகத்தை உற்றுப் பார்த்தால் வாந்தி நிச்சயம். ஒடுங்கிய கண்கள். பற்களுக்குள்ளேயே பேசும் வழக்கம். எந்த வித எக்ஸ்பிரஷனும் காட்ட முடியாத முகம். ஒரு நடிகர் எப்படி இருக்ககூடாது என்பதற்கு குஜய் நல்ல உதாரணம்.
மற்றபடி அவரைப் பற்றிச் சினிமாவில் வரும் வசனமெல்லாம் காக்காய் ரகம்.
Filed under: அரசியல், சினிமா, பெண்கள், பொதுப் பிரச்சினைகள்


எந்திரனில் ரஜினிக்கு சம்பளம் 25 கோடியாக இருக்கலாம். இயக்குனர் ஷங்கர் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெறலாம். ஆனால் ...


இன்றைய நிலையில் ரஜினி ஒரு படத்திற்காக 2 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நடிக்க வேண்டிய அவசியமோ, ஷங்கர் போல இயக்குனர்களிடம் அவர்கள் சொல்வதை மதித்து அது போல் நடிக்க வேண்டிய தேவையோ இல்லை!
ஷங்கரையும், ரஜினியையும் எந்திரனுக்காக இவர்கள் உழைக்கும் இந்த கடின உழைப்புக்கு பாராட்டுவதிலென்ன தப்புங்க?


உங்களை நிஜமாகவே இருக்கை முனையில் ஒன்றரைமணி நேரம் இப்படம் உட்கார வைத்திருக்கும். நகம் கடித்தபடி ஒவ்வொரு காட்சிக்கு ...


உங்களை நிஜமாகவே இருக்கை முனையில் ஒன்றரைமணி நேரம் இப்படம் உட்கார வைத்திருக்கும். நகம் கடித்தபடி ஒவ்வொரு காட்சிக்கு பின்னாடியும் 'அடுத்து என்ன நடக்க போகிறதோ' என மனம் பதைபதைத்தபடி காத்திருப்பீர்கள். நான் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேன் ஏன் நினைத்தீர்களானால் படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அப்படி பட்ட படம் தான் பதினொன்று பதினாலு (11:14..திரைப்படத்தின் பெயரே அதுதான்.).
படத்தின் மேகிங் மிகவும் புதுசு. இயக்குனர் கொஞ்சம் அமோரோஸ் பெர்ரோசை மேகிங்கில் உல்டா பண்ணி இருப்பது போல தோன்றினாலும் இது வேறு வகை. ஐந்து கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் இரவு பதினொன்று பதினாலுக்கு என்ன நடக்கிறது என்பதை த்ரில்லாக (தில்லாக) சொல்லி இருக்கிறார் இயக்குனர் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் கிரேக் மார்க்ஸ். ஐந்து வெவ்வேறு கதைகள் ஒரே புள்ளியில் பதினொன்று பதினாலுக்கு இணைந்தாலும் ஒவ்வொரு கதைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்து படத்தின் கடைசியில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கு தெளிவாக நம் திடுக்கிடல்களுக்கு விடை அளிக்கிறது படம்.
கதை 1.
---------
ஜாக் தண்ணி அடித்துக் கொண்டு செல்போனில் பேசியபடி,காரை ஒட்டி வரும்போது எதோ ஒன்று அவன் காரின் மேல் மொத கார் சறுக்கிக் கொண்டு சாலை ஓரத்துக்கு செல்கிறது. அப்போது மணி 11:14. சாலை ஓரத்தில் மான்கள் சாலை கடக்கும் சிக்னலை காணும் அவன், எதோ மான் தன காரில் அடி பட்டு செத்து இருக்கும் போல என நினைத்து காருக்கு எதுவும் அடி பட்டிருக்கிறதா என பார்க்க இறங்கி வந்து பார்க்கிறான். அப்போது தான் அங்கு சிதைந்த முகத்துடன் ஒரு மனித உடலை பார்க்கிறான். குடிபோதையில் அவனை இடித்து விட்டதை உணர்ந்து கொள்ளும் வேளையில் இன்னொரு கார் அவனது அருகே வர, அந்த மனிதனை மறைத்து வைக்கிறான் ஜாக். அந்த காரில் வரும் நார்மா ஒரு நடுத்தர வயதுப் பெண். மானை அடித்து விட்டதாக அவள் கருதி அவனுக்கு உதவ, காவலருக்கு 911 என்ற என்னை அடித்து பேசி சொல்லி விட்டு போகிறாள். அவசர அவசரமாக அந்த பிணத்தை காரின் டிக்கியில் வைத்து பூட்டி காரை எடுக்க எத்தனிக்கும் வேளையில் அவனது காரின் பின்னே ஒரு போலீஸ் கார் நிற்கிறது. இறங்கி அவனிடம் வரும் போலீஸ் அவன் குடித்திருப்பதை உணர்ந்து அவனுக்கு விலங்கு பூட்டுகையில் அவனது காரின் டிக்கியில் ரத்தகரை பார்த்து உள்ளே ஒரு பிணம் இருப்பதை கண்டு திடுக்கிடுகிறான் போலீஸ். அவனை போலீஸ் சரக்கு அழைத்து செல்ல அங்கே உள்ளே ஏற்கனவே பச்சி மற்றும் டப்பி(duffy) இருப்பதை பார்கிறான். அவர்கள் இவனுக்கு இடம் தர மறுக்க அந்த களேபரத்தில் போலிசிடம் இருந்து தப்பி ஓட, போலீஸ் இவனை துரத்த, பச்சி மற்றும் டப்பி தப்பி ஓடுகிறார்கள். ஜாக் ஓடி செல்ல அங்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கு இருந்து வெளி வரும் நார்மா, தனது கணவனை காணவில்லை என்றும் தனது மகள் விபத்தில் இறந்து விட்டால் என்றும் அவள் கூற அந்த நேரம் போலீஸ் வந்து அவனை பிடிக்கிறான். அவன் தான் தனது மகளை விபத்தில் கொன்று விட்டதாக கூறி அவனை அடிக்கிறாள் நார்மா.
கதை 2.
--------

டிம் மார்க் மற்றும் எட்டி என்ற டீன் ஏஜ் வாலிபர்கள் ஒரு வேனில் பீர் அறிந்தியபடி தாறுமாறாக ஒட்டி செல்கிறார்கள்.
அவர்கள் போதை வரவழைக்கும் கோகைனை உரிய ஒரு புத்தகத்துக்கு தீ வைக்கிறார்கள் அது குபு குபு என எரிய அதனை தூக்கி சாலை ஓரத்தில் எறிகிறார்கள். அப்போது போதையின் உச்சத்தில் எட்டி வேன் ஜன்னல் கதவை திறந்து அப்படியே ஒன்றுக்கு போக, அதனை வேனை ஒட்டி கொண்டிருக்கும் மார்க் தடுக்க, சாலையின் நடுவே வந்துவிட்ட ஷேரி என்ற பெண்ணை இடித்து விட அந்த பெண் அங்கேயே மரணிக்கிறாள். அப்போது மணி 11:14. செய்வதறியாது அவர்கள் திகைக்க அங்கே ஓடி வருகிறான் ஒரு வாலிபன் (டப்பி). அவள் இறந்து போனதை உணர்ந்ததும் இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து வேனை நோக்கி சுட ஆரம்பிக்க, அவர்கள் வேனை கிளப்பி கொண்டு தப்பிக்கிறார்கள், அப்போது தான் டிம் எட்டியின் இடுப்பு பகுதியில் ரத்தம் கொப்பளிப்பதை பார்க்க, எட்டி, அந்த விபத்தில் ஜன்னல் கதவு மூடிக்கொள்ள, தனது ஆண் குறி வெட்டு பட்டு அந்த விபத்து நடந்த இடத்தில் துண்டாகிவிட்டதை சொல்லி அழுகிறான். டிம் அதனை தேடி விபத்து நடந்த இடத்துக்கு செல்ல, அங்கே இறந்த ஷேர்ரியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருக்கும் இருவர் அந்த விபத்துக்கு இவன் காரணமாக இருக்கலாம் என துரத்த, டிம்மின் ஆண் குறியை தூக்கி கொண்டு வேனில் ஓடி வந்து ஏறி வேனில் பறக்கிறார்கள். டிம் ஏட்டிக்கு அவனுடையதை அளித்து தனது நட்பை பறை சாற்றிகொள்கிறான்.
கதை 3
---------
தனது நாயை வாக்கிங் கூட்டி செல்கிறான் பிரான்க். அப்போது ஒரு கல்லறை தோட்டத்தை கடக்கும் போது அங்கே தனது மகள் ஷேர்ரியின் கார் சாவி கிடப்பதை காண்பவன், தனது மகளின் பாய் பிரெண்டான ஆரோன் கல்லறையில் உள்ள ஒரு தேவதையின் சிலை விழுந்து தலை நசுங்கி செத்து கிடப்பதை கண்டு தனது மகள் பிரச்னையில் இருக்கிறாள் என உணர்ந்து அவளை காப்பாற்ற, அந்த பிணத்தை தனது காரின் டிக்கியில் ஏற்றி ஒரு பாலத்தின் மேல் சென்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்த மேம்பாலத்தின் மேலிருந்து பிணத்தை வீசி எறிய அது ஒரு காரின் மேல் விழுகிறது. அப்போது மணி 11:14 (கவனிக்க, இந்த பிணம் தான் முதல் கதையில் வந்த ஜாக்கின் காரில் விழுந்தது). அவனது ஜாக்கெட்டை தெருவில் எரிந்து கொண்டிருக்கும் புத்தகத்தில் போட்டு அதை எரிக்கிறான்.(இந்த புத்தகம் தான் இரண்டாம் கதையில், அந்த டீன் ஏஜ் வாலிபர்களால் வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டது).
கதை 4
---------

பச்சி ஒரு கடையில் வேலை பார்க்கிறாள். அங்கு வருகிறான் அவளது சிநேகிதனும் கடையில் வேலை பார்ப்பவனுமான டப்பி. தனது காதலி ஷெர்ரி கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் அதனை கலைக்க உடனே ஐநூறு டாலர் வேண்டும் என கேட்க, பச்சி தனது உடல் நிலை சரி இல்லாத சகோதரியின் வைத்திய செலவுக்கே பணம் இல்லை என அவனிடம் புலம்ப அவன் அவளிடம் ஒரு பிளானை சொல்கிறான். அதாவது, அந்த கடையை தான் கொள்ளையடித்து பணம் எடுத்து சென்று விட திட்டம் இடுவதாக கூறுகிறான். அதற்காக அவன் கொண்டு வந்துள்ள ரிவால்வரையும் காட்டுகிறான்.போலீஸ் தன்னை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தன காதலியை அழைத்து சென்று அவளது கர்ப்பத்தை கலைத்து விட எண்ணி இருப்பதாக கூறுகிறான். அப்போது அந்த டீன் ஏஜ் வாலிபர்கள் வந்து கடையில் பீர் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். அப்போது அங்கே வருகிறாள் டப்பியின் காதலியான ஷெர்ரி. அவளை அழைத்து தனி அறைக்கு செல்கிறான் டப்பி. அப்போது அவனது ரேவோல்வரை எடுத்து தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக நினைத்து கொண்டு விளையாடிகொண்டிருக்க ரேவோல்வேர் வெடித்து விடுகிறது. பயந்து போன டப்பி பச்சியை திட்டி கொண்டிருக்க, அவனது கோட்டை வாங்கி கொண்டு புறப்படுகிறாள் ஷெர்ரி. அப்போது கல்லாவிலிருந்து பணத்தை திருடுகிறான் டப்பி. பச்சி, கொள்ளை அடிப்பது நிஜம் போல இருக்க வேண்டும் என சொல்லி தனது கையில் சுட சொல்கிறாள். டப்பி அவளது கையில் ஓரத்தில் சுட்டு விட்டு அவளுக்கு மருத்துவ உதவி செய்து அவளை போலிசை அழைக்க சொல்லி விட்டு வெளியேற, பச்சி பொலிசில் பேசி கொண்டிருக்கும்போதே போலீஸ் வந்துவிட மயிரிழையில் தப்பிக்கும் டப்பி, எப்படி அவ்வளவு சீக்கிரம் போலீஸ் வந்தது என குழப்பமடைகிறான். ஷெர்ரி இன் கார் இருக்கும் இடம் சென்று தனக்கு பணம் கிடைத்து விட்டதாக கூற, ஷெர்ரி தன காரில் இருந்து இறங்கி அவனை நோக்கி வருகையில், வேனில் அடிப்பட்டு சாகிறாள். அப்போது மணி 11:14 ஓடி வரும் டப்பி அவள் இறந்து விட்டதை கண்டு வேனை நோக்கி சுட துவங்க, அவர்கள் தப்பிக்க, யாரோ கொடுத்த தகவலின் படி அங்கு வரும் போலீஸ் டப்பியை கைது செய்கிறது. பச்சியும் அதற்க்கு உடந்தை என அவளையும் கைது செய்கிறது.
கதை 5.
-------------
இது ஷெர்ரி இன் கதை. நமக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் இந்த பகுதி விடை அளிக்கிறது. முதல் கதையில் ஜாக் யாரிடம் பேசி கொண்டிருந்தான்? ஆரோன் எப்படி இறந்தான்? டப்பி மற்றும் பச்சியை போலீஸ் க்கு போட்டு கொடுத்தது யார் என்பதை நச்சென்று விவரிக்கிறது இந்த பகுதி.
படத்தில் ஏகப்பட்ட கதைகள் முடிச்சிகள் இருந்தாலும் படத்தின் இறுதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு தெளிவான கதையை நமக்கு புரிய வைப்பது திரைக்கதையின் வெற்றி. படம் முழுக்க நடப்பது ஒரு நாள் இரவு மட்டுமே. எனினும் அதனை படமாக்கிய விதம் நம்மை இங்கு அங்கு என நகர விடாமல் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிரேக் மார்க்ஸ். இவரே இந்த படத்தை சிறிதும் தொய்வின்றி எடுத்து செல்ல முழு முதல் காரணம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷேன் ஹில்பர்ட் இயக்குனரின் வலது கையாக இருந்து படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறார்.
11: 14 விறுவிறுப்பின் உச்சம்.
படத்தின் முன்னோட்ட காணொளியை காண இங்கே சொடுக்கவும்

![]() |
| 2 டியில் இருந்து 3 டிக்கு |
![]() |
| 'வடை போச்சே' - 3 டியில் வந்து இருக்க வேண்டிய படம் |
![]() |
| "Shrek" நான்காம் பாகமும் 3 டியில் வருகிறது |
![]() |
| "Tron Legacy" கொக்கா மக்கா 3 டி மிரட்டல் |
![]() |
| "Tron Legacy " - ஒபெநிங் எல்லாம் நல்லா தான் இருக்கு |
![]() |
| "Up" 3 டியில் மிகப்பெரும் ஹிட்டானதைத் தொடர்ந்து "Toy Story" யும் 3 டியில் |


சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நிலவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் - நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, `அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதையடுத்து டைரக்டர் அரவிந்தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ - மாணவிகளை வைத்து `நிலவே வருக' என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். இவ்வாறு அரவிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் சினிமா ஆசை காட்டி ஏராளமாவர்களை ஏமாற்றியவர் குற்றவாளியா? அல்லது சினிமாக்காரர்களின் உண்மை முகம் தெரியாமல் சினிமா மோகத்தால் பணத்தை அள்ளிக் கொடுத்த அப்பாவிகள் குற்றவாளிகளா? சினிமா ஆசையால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சீரழிந்திருக்கும் அந்த பிளஸ்2 மாணவி குற்றவாளியா? |
|


இதில் எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும் எனக்கு முன்னாடியே தெரியும் என்கிறான்.மலீனா என்று படம் இருப்பது தெரியுமா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்."ம்ம்..அந்த படத்தின் அன் கட் வெர்ஷனை எங்கள் கல்லூரியிலே போட்டுக் காட்டினார்கள்.." என்று பதில் வருகிறது.
அவனும் நானும் இரு துருவம் தான்.ஏதாவது குடும்ப விஷேசத்தில் பெண்களுக்கு ஆடை தேர்வு செய்ய சொன்னால் நான் எடுக்கும் நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.ஆனால் அவர்களுக்கு பிடிக்கும்.யாராவது வலிய வந்து எடுத்து கொடுக்க சொன்னால் மறுத்து விடுவேன்.எனக்கு செய்யணும் என்று தோன்றினால் செய்வேன்.இதுவே அவனாகயிருந்தால் பொறுமையாக செய்வான்.சலிப்படைய மாட்டான்.
அடுத்தது யாருக்கு என்ன பொருந்துமோ அதை தான் நான் வாங்குவேன்.அவன் மற்றவர்களின் பார்வையில் அது நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்வான்.உதாரணம் மாமா பெண்ணிற்கு குடை வாங்க வேண்டியதிருந்தது.அவன் போய் பிங்க் கலரில் குடை வாங்கி கொடுத்து விட்டான்.யாராவது இந்த கலரில் வாங்குவார்களா என்று கேட்டு விட்டேன்.ஒரு வாரம் கழித்து உனக்கே தெரியும் என்று சொன்னான்.
அவள் வகுப்பில் எல்லோரும் அந்த குடையைப் பற்றி கேட்டார்களாம்.அவளுக்கும் பிடித்து விட்டதாம்."எப்படி.." என்று என் வியப்பை வெளியே காட்டாமல் கேட்டேன்."சிம்பிள் எல்லா பெண்களுக்கும் பிங்க் கலர் பிடிக்கும் நமக்கு கறுப்பு பிடிப்பது மாதிரி..தவிர நீ ஏற்கனவே சொன்ன காரணமும் உண்டு" என்று சொன்னான்.நான் ரெண்டு விஷயங்களை மறந்திருப்பது தெரிந்தது - 1.அவன் வெப் டிஸைனர்.நான் வேலை செய்வது டேட்டாபேஸ். 2.அடுத்தவர்கள் வைத்திருக்கும் பொருட்களை தான் பெண்கள் விரும்புவார்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.அதை நானே மறந்து விட்டேன்.அவன் மறக்காமல் இருந்திருக்கிறான்.என்ன இருந்தாலும் என் அனுபவத்தையும் சேர்த்து கொண்டு வளர்ந்தவன் அல்லவா.
இன்னொரு உதாரணம்.ஒரு பெண் அவனிடம் எனக்கு சமைக்க தெரியாது என்று எத்தனை முறை சொன்னாலும் அவன் பதில் இதுதான்."கல்யாணத்திற்கு அப்புறம் கத்துகலாம்..".இதுவே நானாக இருந்தால் அவள் எததனை முறை அப்படி சொன்னாள் என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.அவள் மூன்றாவது முறை சொல்லியவுடன் எம்.ஜி.ஆர் பாணியில் அவள் மேல் பாய்ந்திருப்பேன்."நல்லா கொட்டிக்க தெரியுதுல..அப்புறம் என்ன சமைக்க தெரியாதா.." என்று ஆரம்பித்து அது சண்டையாக மாறும் வரை திட்டுதான்.அப்புறம் எங்கே நட்பு தொடரும்.நேரே எண்ட் கார்டு தான்.
சின்ன வயதில் என்னால் படிக்க முடியாத காமிக்ஸ் புத்தகத்தை அவன் படித்து விட்டான்.அவனே படித்து விட்டான் நானும் படித்து விட வேண்டும் வீம்பாக எடுத்து படித்தாலும் என்னால் முடியவில்லை.
தியேட்டரில் படம் பார்க்கும் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி பாதியில் வந்ததே கிடையாது.ப்ளாக் எழுத ஆரம்பித்தப் பின் மொக்கை படத்திற்கு போவதேயில்லை.நேற்று ஒரு வாரம் கழித்து சாட்டில் வந்தான்.
அவன் - "என்ன பண்றே.."
நான் - "ரோட் படம் பாக்க முயற்சிக்கிறேன்..நீ என்ன படம் பாத்தே.."
அவன் -"எதுவும் நடக்கும்..படம் செம மொக்கை.."
நான் - "டெலிட் பண்ணிராத..நான் வரும் போது பாக்கணும்.."
அவன் - "முதல்ல வேட்டைக்காரனைப் பாத்து முடி..அப்புறம் இதை பாக்கலாம்.."
மனதுக்குள் நினைத்து கொண்டேன் - "என்னைக்கு நான் ப்ளாக் எழுதுறதை நிறுத்துறேனோ..அன்னிக்கி தான் வேட்டைக்காரனைப் பாக்க முடியும் போல..விஜய்க்காக இந்த தியாகத்தைக் கூட செய்ய மாட்டேனா என்ன..சீக்கிரம் வடை வாங்க வேண்டியது தான்.."


வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் சினிமா வயதுக்கு வருவதின் அடையாளங்களையும் தடயங்களையும் இதில் ...

இந்தப் படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. திரைக்கதையும் கூட சுமார்தான். ஆனால் திறமையாக உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வைகள்தான் இப்படத்தின் பலம் என நினைக்கிறேன். உதாரணமாக அந்த நண்பர்கள் குழு கஞ்சா புகைத்து விட்டு சுவாதீனமேயில்லாமல் உரையாடு்ம் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சியில் பிரேம்ஜியின் நடிப்பு தரமானதாக இருந்தது. அப்படியொரு மினி-சைக்கோ பாத்திரத்தை ஏற்றதற்காக சிநேகாவை பாராட்ட வேண்டும். கிராமத்து பஞ்சாயத்து காட்சிகளிலும் தரமான ஒளிந்திருக்கும் கிண்டல். சீரியஸாக சென்று கொண்டிருக்கும் காட்சிகளிலுள்ள நகைச்சுவையை நாம் தான் கண்டுணர வேண்டியிருக்கும். அந்த மாதிரியான 'மேக்கிங்கில்'தான் இந்தப்படத்தின் தனித்தன்மையை உணர முடிகிறது.
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் மீதான ஆவலை 'கோவா' உருவாக்கியிருக்கிறது.
பரவலாக பாராட்டப் பட்ட 'தமிழ்ப்படம்' எனக்கு அவ்வளவு திருப்தியை அளிக்கவில்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்தியது. மற்ற படங்களின் கிளிஷேக்களை தொடர்ந்து கிண்டல் செய்த போது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் அதுவே மொண்ணைத்தனமாக தொடரும் போது இந்தப்படமே ஒரு கிளிஷேவாக மாறிப் போன அபத்தம் நிகழ்ந்து விட்டது. இதையெல்லாம் பாலாஜி, சந்தானம், ஜீவா குழுவினர் இதை விட அற்புதமாக செய்துவிட்டதால் இந்தப்படமே 'லொள்ளு சபா' போன்ற நிகழ்ச்சியின் ஹை-பட்ஜெட் வடிவம் போலாகி விட்டது. இன்னும் கொஞ்சம் சீரியஸாக உழைத்திருக்கலாம். 'இந்தப்பாடலை சிவா பாடிக் கொண்டிருக்கிறார் (என்று போட சொன்னார்), பாப் மயூசிக் குடும்பப் பாடல், தமிழ் சினிமாவின் அபத்தமான பாட்டு வரிகளை கிண்டலடிக்கும் .. ஓ.மகசீயா....போன்ற சிறந்த நக்கல்களால் இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்க்க முடிந்தது.என்றாலும் தமிழ் சினிமாவின் உளுத்துப் போன கிளிஷேக்களையும், அதன் தரத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்தாதாமல் கல்லாப்பெட்டியிலேயே குறியாக இருந்த இயக்குநர்களையும் சூப்பர் ஸ்டார்களையும், ஒழுங்காக மூத்திரம் போகத் தெரியாத பையன்கள் கூட அரசியல் கனவுகளுடன் பஞ்ச் டயலாக் பேசும் அபத்தங்களையும் செருப்பால் அடித்த ஒரே காரணத்திற்காகவே இந்தப் படத்தை பாராட்ட வேண்டும்.
suresh kannan


சிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த ...

சிவப்பு பலூன் (The Red Balloon ) 34 நிமிடங்கள் ஓடக் கூடிய பிரஞ்ச் குறும்படம். 1956 ல் வெளியான படம். அந்த வருடத்தில் சிறந்த குறும்படத்திற்கான கேன்ஸ் அவார்ட் மற்றும் ஆஸ்கர் அவார்டையும் வென்றுள்ளது இப்படம்.
இதன் இயக்குநர் ஆல்பர்ட் லமொரீஸ் (Albert Lamorisse). லமொரீஸ் ஒளிப்பதிவாளராக இருந்து 40 வயதுக்குப் பின் குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கத் துவங்கி இருக்கிறார். ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிகப்பு பலூனில் லமொரீஸின் மகனே முக்கிய கதாபாத்திராமாய் நடித்துள்ளான்.
வெளியாகி 54 வருடங்கள் கடந்த பின்பும் இன்று பார்க்கும் போதும் ஒரு புதிய உலகை திறந்து விடக் கூடிய பரவசமான, மகிழ்வான அனுபவமாய் இருக்கிறது சிவப்பு பலூன்.
அற்புதங்களுக்கும் மாயங்களுக்கும் மனித மனம் பன்னெடும் காலமாய் ஏங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாகத் தான் உலகெங்கும் மாயக் கதைகள் குவிந்து கிடக்கின்றன. பறக்கும் குதிரைகள், பேசும் மிருகங்கள், நினைத்ததை உடனே தரும் கற்பக மரம், பாற்கடல், இப்படி கதைகளில் மனிதன் உண்டாக்கிய கற்பனை சிருஷ்டிகள் ஏராளம்.
குழந்தைகளின் கற்பனைகள் எல்லையற்றது. எந்த எழுத்தாளனும் , கவிஞனும், கதை சொல்லியும் குழந்தைகளின் கற்பனைக்கு முன்னே தோற்றுப் போகவே நேரும். அவர்களோடு தான் பொம்மைகள் கூட பேசுகின்றன. அவர்களின் கதைகளை கேட்கின்றன, நட்பு கொள்கின்றன, உறவாடுகின்றன. வானமும், மலைகளும், நதிகளும், கடல்களும் கூட அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களாகின்றன.
’சிவப்பு பலூன்’ ஒரு சிறுவனுக்கும் ஒரு சிவப்பு பலூனுக்குமான உறவைப் பற்றிய கதை.
4 அல்லது 5 வயது சிறுவன் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பெரிய சிகப்பு பலூன் விளக்குக் கம்பத்தில் கட்டி இருப்பதைப் பார்கிறான். விளக்குக் கம்பத்தில் ஏறி பலூனை எடுக்கிறான். பலூனை கைகளில் பிடித்த படி மகிழ்வோடு தெருக்களில் நடக்கிறான்.
பலூனை கைகளில் பிடித்த படியே பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். அவன் வழக்கமாய் பள்ளிக்குப் போகும் பேருந்து வருகின்றது. பேருந்தில் கூட்டமாய் இருக்கிறது. பலூனிடன் ஏற முயற்சிக்கும் சிறுவனை நடத்துநர் நிறுத்துகிறார். பலூனை விட்டு விட்டு ஏறச் சொல்கிறார். அவன் பலூனை இழக்க மனமில்லாமல் நிற்கிறான். பேருந்து கிளம்புகிறது. அவன் மனம் தளராமல் பலூனை கைகளில் பிடித்த படி பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான்.
பள்ளிக்குள் சென்றதும் பலூனை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. அங்கிருக்கும் வாயில் காப்போனிடம் மாலை வரை பத்திரமாய் வைத்திருங்கள் என்று ஒப்படைக்கிறான்.
மாலை பள்ளி முடியும் போது மழை பெய்கிறது. சிறுவன் பலூனை நனையாமல் எப்படி கொண்டு போவது என்று யோசிக்கிறான். குடையோடு போகும் ஒவ்வொருவரிடம் ஒண்டிக் கொண்டு பலூனை மட்டும் குடைக்குள் நனையாமல் வைத்து விட்டு சிறுவன் நனைக்கிறான். பல்வேறு குடைகளில் தஞ்சமடைந்த பின் வீடு சேர்கிறான்.
நிறைய வீடுகளை கொண்ட, நிறைய மாடிகளைக் கொண்ட கட்டிடம் அது. உயரத்தில் இருக்கும் அவனது வீட்டு சன்னலின் வழி அவனது தாயார் பலூனை தூக்கி எறிந்து சன்னலை சாத்துகிறாள்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் அறையின் சன்னலைத் திறக்கிறான் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது அவனது சிவப்பு பலூன். உயரத்தில் இருக்கும் பலூனை அவனால் பிடிக்க முடியவில்லை. கைகளை நீட்டுகிறான் பலூன் தானாய் இறங்கி அவனது கைகளுக்குள் வருகின்றது.
மறுநாள் காலை பள்ளி கிளம்பும் போது பலூனிடம் ஏதோ சொல்லி சன்னலில் வெளியே விடுகிறான் சிறுவன். அவன் பல மாடிகள் இறங்கி வந்து சேரும் போது அவனிடம் வருகிறது பலூன். அவன் போகும் வழியெல்லாம் அவனுடனேயே போகின்றது. வழியெல்லாம் பலூனுடன் விளையாடி படியே போகிறான். பலூனும் அவனுடன் விளையாடுகிறது.
பேருந்து நிறுத்தில் பலூனுடன் நிற்கிறான். பேருந்து வருகின்றது. அவன் பலூனை பறக்க விட்டு பேருந்தில் ஏறுகிறான். பலூன் பேருந்தை பின் தொடர்கிறது செல்கிறது.
பள்ளிக்குள் செல்லும் முன் அவன் பலூனை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு பலூன் பள்ளியின் சுவரைக் கடந்து உள்ளே வருகின்றது. அதைப் பார்த்து பல சிறுவர்கள் பிடிக்க ஓடுகின்றனர் ஆனால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பலூன் தப்பிக்கின்றது. சிறுவனைத் தேடி அவனின் வகுப்பறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்ய யாருக்கும் மாட்டாமல் தப்பிக்கின்றது சிவப்பு பலூன்.
பலூனுக்கும் அவனுக்குமான சிநேகம் சில பெரிய மாணவர்களின் கண்களை உறுத்துகின்றது. அவனிடமிருந்து பலூனைக் கைப்பற்ற முயற்சி செய்து ஒரு முறை துரத்துகிறார்கள். பலூனும் சிறுவனும் தப்பிக்கின்றார்கள்.
ஒரு முறை கடையில் ஏதோ பொருள் வாங்க நுழையும் சிறுவன் பலூனை வெளியே விட்டுச் செல்கிறான். காத்திருக்கும் பலூனை, முன்பு பிடிக்க முயற்சித்து தோற்றுப் போன சிறுவர்கள் மறைந்திருந்து கைப் பற்றுகிறார்கள்.
கடைக்குள்ளிருந்து திரும்பும் சிறுவன் பலூனை காணாமல் தேடுகிறான். பலூனைத் திருடியவர்கள் பலூனை ஒரு இடத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து உடைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான். பலூனைக் காப்பாற்ற போராடுகிறான். ஒருவனின் கல் பட்டு பலூனில் இருந்து காற்று வெளியேறத் துவங்குகின்றது. பலூனை கீழே பிடித்து இழுத்து மிதித்து உடைக்கிறான் ஒருவன். பலூன் வெறும் ரப்பர் துண்டாய் கீழே விழுகின்றது. சிறுவனும் பலூனும் மட்டும் தனித்திருக்க அவைவரும் ஓடி விடுகின்றனர். சிறுவன் பலூனைப் பார்த்து கண் கலங்கத் துவங்குகிறான்.
மீதியை வெண்திரையில் அல்லது டிவீடியில் காண்க என்று சொல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாதவர்களுக்காக முழுவதும் சொல்வது தானே நியாயம்.
பிறகு தான் நிகழ்கிறது அற்புதம். ஊரில் சில சிறுவர்கள் கையில் வைத்திருந்த பலூன்கள் எல்லாம் அவர்களின் கைகளை விட்டுத் தானாய் பறக்கத் துவங்குகின்றன. ஒரு பலூன் விற்பனையாளனின் கைகளிலிருந்த பலூன்கள் பறக்கத் துவங்குகின்றன. இப்படி ஊரில் உள்ள பலூன்கள் எல்லாம் ஒன்று கூடி அணி வகுப்பு நடத்துகின்றன. பல்வேறு இடங்களைக் கடந்து அத்தனை பலூன்களும் சிவப்பு பலூனை இழந்து அழும் சிறுவனின் முன்னால் இறங்குகின்றன. அத்தனை பலூன்களையும் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். அந்த பலூன்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளையும் ஒன்றாக்கிப் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக் கொண்டு ஃபேரசூட் மாதிரி வானில் பறக்கின்றன. அவன் மகிழ்வோடு பறந்து உயரே உயரே போகிறான்.
இடையில் ஒரு காட்சியில் சிறுவன் பலூனோடு நடக்கும் போது ஒரு சிறுமி நீல பலூனோடு கடந்து போகிறாள். உடனே சிவப்பு பலூன் சிறுவனிடமிருந்து நீல பலூனைப் பின் தொடர்ந்து செல்கிறது. சிறுவன் போய் பிடித்து வந்து நடக்கத் துவங்கும் போது நீல பலூன் சிறுமியை விட்டு சிறுவனோடு வருகின்றது. சிறுமி ஓடி வந்து நீல பலூனை பிடித்துப் போகிறாள்.
ஒவ்வொரு மனிதனின் ஆசைகளும் கனவுகளும் வெவ்வேறு நிறமான பலூன்களாய் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அழகான கதையும். இயல்பான நம்பகத் தன்மையுடன் கூடிய படமாக்கலும், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத நிகழ்வுகளின் வியப்பும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறத புதுமையாய் அழியாத அற்புதமாய் என்றென்றும் ’சிவப்பு பலூனை’ வாழ வைக்கும்.


இந்த படம் 100 நாட்கள் ஓடும் , சன் தொலைக்காட்சி இடைவேளைகளில் மட்டும்.
சுருட்டை முடி, 4 நாள் வழிக்காத தாடி, அழுக்கு பையன் லுக் இது போதுமா பிளேபாய் தோற்றம் கொண்டு வர. விஷாலை பார்க்க முடியல.... அவருக்கு ஏத்த படம், ஒரு ஊருல இருந்து இன்னோரு ஊருக்கு போய் ஒரண்ட இழுக்குறதுதான். அத விட்டுட்டு பெஸ்டு ஃபிகர தேர்ந்தெடுக்க நம்மல படுத்தி எடுக்காப்ல. தியேட்டருல ஒரு நாதாரி விஷால் ரசிகன் கேனத்தனமான வசனத்துக்கு விசில் அடித்தான், பலரும் அவனை பாவமாக பார்த்தனர்.
வழக்கம் போல 3 நண்பர்கள் கதாநாயகனுக்கு. 3 ஃபிகர தேர்ந்தெடுத்து அதுல பெஸ்டு டாவை கல்யாணம் பண்றதுதான் அவரது உயர்ந்த லட்சியம், இதுக்கு உயிர் கொடுத்து உதவ 3 கோமாளி நண்பர்கள். தியேட்டருல உக்கார முடில, போதுவா பாடல்கள்தான் தாலாட்டும், இங்க முழு படமும் தாலாட்டுது. அதுவும் படத்துல விஷால் ஏதாவது சாதிச்சுட்டு திரையில் ரொம்ப கிளோஸா வந்து மூஞ்சிய ஒரு மாதிரியா வச்சுகிட்டு சபாஷ்னு நெஞ்ச தட்டும் போது ரொம்ப கேவலமா இருக்கு. நாயகிகள் அவங்களால முடிஞ்ச அளவுக்கு தங்கள் 'திறமையை' காட்டிட்டு போதுங்க.
ஒரு திருட்டு விசிடி விற்கும் நபர் இந்த படத்தயாரிப்பாளருக்கு போன் போட்டு காட்டு கத்தல் கத்திருக்காரு, " இப்டி படம் எடுத்தா ஒருத்தனும் சி.டி. வாங்க மாட்றான், எங்க பொழப்பு என்னாறதுனு".
மொத்தத்தில் தீராத விளையாட்டு பிள்ளை - - தேறாத விளையாட்டு பிள்ளை


இது “Feel Good Movie”-க்களின் யுகம். தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ...

இது “Feel Good Movie”-க்களின் யுகம். தமிழில் சொன்னால், ‘மனதுக்கு இனிமை தரும் படங்களின்’ காலம். உலகம் கிராமமாகச் சுருங்கும் உலகமய, தகவல் தொழில்நுட்ப யுகத்தின் பொற்காலத்தில் வாழும் உலகமயக் குடிமக்கள் Feel Good Movie-க்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். பரவசமடைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். யதார்த்த உண்மை மனதுக்கும், சிந்தனைக்கும் இனிமையாக இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு அங்கு இடமில்லை. உண்மை போல தோற்றமளித்தால் போதும். மனதுக்கு இனிமையளிப்பதுதான் முக்கியம். பிறகு, ஸ்லம்டாக் மில்லியனரைக் கொண்டாடியதைப் போல, அதனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மை நேம் இஸ் கான் இதே பட்டியலில் தான் வருகிறது.
…
சிறு வயது முதல் “Asperger syndrome” எனும் நோயினால் பாதிக்கப்பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக் கான்), தனது தாயின் மரணத்தையொட்டி, அமெரிக்காவில் வாழும் தம்பியுடன் வாழச் செல்கிறான். அங்கே, மந்திரா(காஜோல்) எனும் விவாகரத்தான பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறான். அவளது மகன் ஸமீரும்(யுவன்), ரிஸ்வானை நேசிக்கிறான். செப்-11-க்கு பிறகு அமெரிக்கா முழுதும் வெளிப்படும் இஸ்லாமியர் வெறுப்பின் விளைவாக, பள்ளிச் சிறுவர்களிடையேயான் தகராறில் ஸமீர் கொல்லப்படுகிறான்.
அதிர்ச்சியுற்று மனம் உடையும் மந்திரா, “கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!” எனக் கத்துகிறாள். “இங்கிருந்து போய் விடு” என விரட்டுகிறாள். “நான் எப்பொழுது திரும்பி வரட்டும்” எனக் கேட்கிறான் ரிஸ்வான். “அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்! அதன் பிறகு வா” என அவள் கூறும் வார்த்தைகளைக் கொண்டு, அமெரிக்க அதிபரை சந்திக்கப் புறப்படுகிறான் ரிஸ்வான். கையில் காசின்றி, கார்களை ரிப்பேர் செய்து பயணத்தை தொடர்கிறான். தீவிரவாதி என சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாகி… என நீண்ட அலைக்கழிப்புகளைத் தாண்டி, புதிய அமெரிக்க அதிபரை சந்திப்பதில் வெற்றி பெற்றுகிறான்.
இந்தக் கதையைப் படிக்கும் பொழுதே, போஸ்டரில் உள்ள அமெரிக்க கொடி தற்செயலாக இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவாக படத்தின் உள்ளடக்கத்தை உணர்த்தும் குறியீடாக அமெரிக்க கொடி ஷாருக்கின் மீது படிந்திருக்கிறது. இதனை லக்கிலுக் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தார். “ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.” படத்தின் உன்னதத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், இந்த அடிப்படையான கேள்வியை பரிசீலிப்போம். முதலில், இது அமெரிக்கர்களுக்கான படமா, இந்தியர்களுக்கான படமா, அல்லது சொல்லப்படுவது போல உலகப் படமா?
திரைக்கதை முழுவதும் அமெரிக்காவைச் சுற்றி வருகிறது. செப்-11க்குப் பிறகு, அமெரிக்காவில் நிலவும் இஸ்லாமியர் மீதான வெறுப்பைப் பேசிச் செல்கிறது. இதற்கு சற்று முன்பாக, “நியூயார்க்”, “குர்பான்” முதலான பாலிவுட் திரைப்படங்களும் இஸ்லாம்+அமெரிக்கா+பயங்கரவாதம்+வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற ஃபார்முலாவில் வெளி வந்தன. இப்படி இந்தித் திரையுலகம், அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லீம்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து வரிசையாகத் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
“செப்டம்பர் 11 பற்றி இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த படம் இதுதான்” என சாரு போற்றிக் கொண்டாடும் இந்தத் திரைப்படத்தின் அதியற்புதக் கருவிற்கான தூண்டுதல் எதிலிருந்து பிறக்கிறது? குஜராத்தின் வடுக்கள் இன்னமும் ஆறாத இந்தியாவை விட்டு விட்டு, திரைக்கதை அமெரிக்காவை கதைக்களனாக தேர்ந்தெடுப்பதன் நோக்கம் தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடையை, எகானமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் ஷாருக் கான் சொல்கிறார். “இந்தியாவில் அற்புதமாகவும், வெளிநாடுகளில் மிக நன்றாகவும் ஓடக் கூடிய திரைப்படங்களை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், மை நேம் இஸ் கானைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் அற்புதமாகவும், இந்தியாவில் மிக நன்றாகவும் ஓடியிருக்கிறது. எனவே, நாம் செய்ய வேண்டியது எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்வது தான்.” ஷாருக்கின் விளம்பர முத்திரையுடன் கூடிய வரிகளைத் தாண்டி, மை நேம் இஸ் கான் திரைப்படத்திற்கான அடிப்படையான படைப்பு உந்துதல், இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.
பாலிவுட் திரைப்படங்களுக்கு உருவாகியிருக்கும் சர்வதேச சந்தைதான் “மை நேம் இஸ் கான்” போன்ற திரைப்படங்களுக்கான அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்திலிருந்து தான் ‘அமெரிக்காவில் இஸ்லாமியர் இனஒதுக்கல் குறித்த திரைக் காவியம்’ தோன்றுகிறதேயன்றி, இதற்கு நேர்மாறான முறையில்உருவாகவில்லை. அதே எகானமிக் டைம்ஸ் பேட்டியில், இந்தித் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் வணிகச் சிக்கல்களை ஷாரூக் மேலும் விளக்குகிறார். “அரங்கு நிறைந்த காட்சிகளுக்கும், வெள்ளிவிழாக்களுக்குமான காலம் முடிந்து விட்டது. எவ்வளவு சீக்கிரமாக இதனை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு மொத்த திரைப்படத் தொழிலுக்கும் நல்லது.” அவர் மேலும் விளக்கிச் செல்கிறார். திரையரங்கிற்கு மக்களை வரவழைக்க, ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பேட்டிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, இணையத்தில் பிரபலப்படுத்துவது என பல வழிகளில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது. அதனை விட முக்கியம், திரைப்படத்திற்கு உள்ள பரபரப்பை பயன்படுத்தி, முதல் சில வாரங்களில் எவ்வளவு அதிகமான தியேட்டர்களில், எவ்வளவு அதிகமான நாடுகளில் திரையிட முடியுமோ, அவ்வளவு அதிகமாகத் திரையிட்டு வசூல் செய்து விட வேண்டும். இதன் மூலம் தான், “எங்காவது ஓரிடத்தில் நம்மை பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.” ஆக, மை நேம் இஸ் கான் எனும் மாபெரும் காவியத்தின் ரிஷி மூலம் இதுதான்!
அதாவது, இந்தித் திரைப்படங்களுக்கான சந்தை, வட இந்திய மாநிலங்களாக இருந்த வரை, பணக்கார வில்லன்களின் பணக்கார மகள்களை ஏழை ஷாரூக் திக்கித் திக்கி காதலித்துக் கொண்டிருந்தார். ஆன்டி ஹீரோவாக ஆர்ப்பரித்தார். சந்தை இந்தியாவைத் தாண்டி சற்று விரிவடைந்த நேரத்தில், அமெரிக்காவிலும், லண்டனிலும் டூயட் பாடி, இந்தியாவின் பெருமையை, இந்தியப் பெண்களின் கற்புத் தூய்மையை பறைசாற்றும் படங்களை தந்து கொண்டிருந்தார். சந்தை மொத்த உலகமான பொழுதோ, அமெரிக்காவே கதைக் களனாகி விட்டது. திரைப்படத்தில் இந்தியா ஊறுகாயாகி விட்டது. உலகமய குடிமக்கள் புரிந்து கொள்ளத் தக்க கதையாக, அடையாளப்படுத்திக் கொள்ளத் தக்க கதையாக மாறி விடுகிறது. அதனால் தான், இந்த ‘முற்போக்குப் படத்தை’ அமெரிக்க ஃபாக்ஸ் நிறுவனம் நூறு கோடிகளுக்கு விரும்பி வாங்குகிறது. ஸ்டார்-ஃபாக்ஸ் நிறுவனத்தின் முதலாளி விஜய் சிங், தமது லாஸ் ஏஞ்செல்ஸ் தலைமையகம் ஷாருக் கானின் திரைப்படத்தை ஏன் விரும்புகிறது எனத் தெளிவாகக் கூறுகிறார். “முதல் நாளிலிருந்தே, கான் திரைப்படத்தை ஒரு காதல் கதையாகத்தான் பார்க்கிறோமேயல்லாமல், சமூகப் பிரச்சினைகள் குறித்த படமாக அல்ல.” எனவே, இந்த மாபெரும் கலை படைப்பின் உள்ளடக்கமும், வடிவமும் விரிவடையும் ஹாலிவுட்-பாலிவுட் சந்தைத் தேவைகளிலிருந்து பிறக்கிறது.
இந்தப் பொருளியல் அடிப்படையில் பிறக்கும் கலைப் படைப்பு, அதன் ஆதாரமாக விளங்கும் கட்டமைப்பை, அந்தக் கட்டமைப்பிலிருந்து பிறக்கும் வன்முறையை கேள்விக்குள்ளாக்குமா என்ன? அதனால் தான், கதைப்படி ரிஸ்வான் கான் சூறாவளியால் பாதிக்கப்பட்டகறுப்பின மக்களை காப்பாற்றியும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் எனத் தான் சந்தேகப்படும் டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானைப் போட்டுக் கொடுத்தும், அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும் ‘நல்ல பெயர்’ வாங்குகிறான். ஆனால், இது சாருவுக்கு நெருடலாகப் படுகிறது. “ரிஸ்வான் தான் ஒரு சிறந்த குடிமகன் என்று நிரூபிப்பதற்காக கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜார்ஜியா மாநிலத்துக்குச் சென்று பலவிதமான சாகச வேலைகளைச் செய்து அமெரிக்கர்களிடமும், அமெரிக்க ஜனாதிபதியிடமும், அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவனை விரட்டி விட்ட மந்திராவிடமும் ’நல்ல’ பெயர் வாங்குகிறான். மிகவும் குரூரமான கற்பனை. நான் ஒரு முஸ்லிமாக இருந்தால் பயங்கரவாதி என்றுதான் முத்திரை குத்தப்படுவேன். போலீஸால் தாக்கப்படுவேன். மனைவியால் விரட்டி அடிக்கப்படுவேன். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து நான் ஒரு நல்ல குடி மகன் என்று நிரூபிப்பதற்காக ஒரு சூப்பர்மேனாக மாறி சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப் பாற்றியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய கொடுமை! “ பிறகு அவரே தன்னை சமாதானம் செய்து கொண்டு, “ஆனால் இந்த ஒரு விஷயத்தைத் தவிர, மற்றபடி மை நேம் இஸ் கான் ஒரு அருமையான படம்.” என விளம்புகிறார். யா அல்லா, என்ன கொடுமை சாரு இது?
இந்த ‘நெருடலான’ காட்சிகளால் தானே, “எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை; இறைவன் கருணையானவன்; அன்பு ஒன்றே எல்லா மதங்களின் ஆதாரமாக உள்ளது” என்று சாருவே கூறும் இப்படத்தின் அடிப்படை செய்தியே உணர்த்தப்படுகிறது? அதனால் தானே, இறுதிக் காட்சியில் அதிபரிடம் ரிஸ்வான் கை குலுக்கும் பொழுது, தன்னுடைய வெறுப்பால் சாதிக்க முடியாததை ரிஸ்வான் அன்பினால் சாதித்திருக்கிறான் எனப் படத்தின் ‘மெசெஜை’ மந்திரா சொல்கிறாள்? அதற்கு வித்திடும் காட்சிகளே இவைதானே? எனவே, திரைப்படத்தின் அடிப்படை தர்க்கத்தை உருவகப்படுத்தும் காட்சிகளை, ஏறத்தாழ திரைப்படத்தின் இரண்டாம் பாதியை, மொத்தமாக “அந்த ஒரு விஷயம்” எனச் சாதாரணமாக எப்படி ஒதுக்கித் தள்ளுகிறீர்கள் சாரு? பிறகு அது அருமையான படமாவது எப்படி? ஒன்று, நீங்கள் அந்தப் படத்தின் அடிப்படை மெசேஜை மறுக்கிறீர்கள் அல்லது அடிப்படை மெசேஜ் எது என்று புரியாமலேயே பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உன்மத்த நிலையில் எழுதுவதன் பக்க விளைவுகள்தான் எத்தனை எத்தனை?
‘அமெரிக்க அதிபரை ஏன் சந்திக்க விரும்புகிறான், இவன் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம்’ என அமெரிக்கப் போலிசால் ரிஸ்வான் கான் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது, அவன் தான் மசூதியில் விவாதித்த டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை அமெரிக்கப் போலிசிடம் தீவிரவாதி என போட்டுக் கொடுப்பது தான். ஜார்ஜ் புஷ் ‘கண்டறிந்ததைப் போல’ சதாம் உசேன் வைத்திருந்த ‘பேரழிவு ஆயுதங்களோடு’, டாக்டர் ஃபைஸுர் ரஹ்மானை ரிஸ்வான் கண்டு பிடிக்கவில்லை. மாறாக அவருடன் நடத்தும் ஒரு விவாதத்திலேயே அவர் தீவிரவாதி என முடிவு கட்டி போலிசுக்கு தகவல் சொல்லுகிறான். ஃபைஸுர் ரஹ்மான் கவுண்டனமோ சிறைக்கு அனுப்பப்பட்டாரா, அங்கே அவரை எத்தகைய மனிதாபிமானமிக்க, கண்ணியமான முறைகளில், அமெரிக்க கண்யவான்கள் விசாரித்தார்கள், அல்லது அவர் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மலைப் பகுதியில் வைத்து ஒசாமாவின் வலது கை அல்லது இடது கண் என சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதெல்லாம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஒரு Feel Good Movie-ல், இது போன்ற ரசாபாசமான காட்சிகள் இடம் பெற்றால் என்னாவது?
இறுதிக் காட்சியில், திரையில் தோன்றும் நிழல் ஒபாமா, ரிஸ்வான் கானிடம் கை குலுக்குகிறார். “நான் பயங்கரவாதியில்லை” என ரிஸ்வான் சொல்ல, புன்னகையோடு ஆமோதிக்கிறார். ரிஸ்வான் கானின் புரட்சியும் முழுவடைகிறது. படமும் முடிவடைகிறது. ஆனால், நிஜ ஒபாமா என்ன செய்கிறார்? ஆப்கானிஸ்தானுக்கு ஜார்ஜ் புஷ்ஷை விடவும் அதிகமான துருப்புகளை அனுப்புகிறார். “நாங்களும் பயங்கரவாதிகள் இல்லை” எனக் கதறும் நூற்றுக்கணக்கான ரிஸ்வான் கான்களை, மனித குலம் கற்பனை செய்யவியலாத வகையில் சித்திரவதை செய்த கவுண்டனமோ பே சிறைக் கொடுமைகள், “அமெரிக்க வரலாற்றின் துயரமான அத்தியாயம்” என உருகுகிறார். உருகிய மறு நொடியே, கவுண்டனமோ பே சிறையை மூடி விட்டு, கைதிகளை இல்லியனோஸ் சிறைக்கு மாற்ற உத்தரவிடுகிறார். இடம் மாற்றுவதே சாதனையாகி விடுகிறது.
இடம் மாற்றுவது போலவே, அமெரிக்க அரசின் அதிபர் முகமூடி மட்டும் மாறியிருக்க, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” மட்டும் உக்கிரம் மாறாமல் தொடர்கிறது. சாருவே சொல்வது போல, “பாலஸ்தீனம், லெபனான், ஆஃப்கனிஸ்தான், ஈராக் என்று இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகள் தேசம் தேசமாக அழிக்கப்பட்டு வரும் காலம் இது. இந்த தேசங்களில் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்; வெடிகுண்டுகளால் உடல் உறுப்புகளை இழந்த எண்ணற்ற குழந்தைகள் இந்த தேசங்களில் தாய், தந்தையின்றி அனாதைகளாய்த் திரிகின்றன.” ஆனால், இந்த நிஜ ஒபாமாவைத் தான், “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என அழைக்கப்படும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரின் குரூர யதார்த்தத்தைத்தான், “மை நேம் இஸ் கான்” அறிமுகப்படுத்துகிறதா?அப்படி இல்லையென்றால், இது ஒடுக்குமுறையாளர்களுக்கு இசைவான மொழியில் பேசும் படமல்லாமல் வேறென்ன? இந்த இலட்சணத்தில், “இது ஒரு வழக்கமான கரன் ஜோஹர் படம் இல்லை. ஷ்யாம் பெனகல், கேத் தான் மேத்தா போன்றவர்களின் அரசியல் சினிமாவோடு ஒப்பிடத்தக்க ஒரு படம்” என கூறுகிறீர்களே சாரு, நல்ல வேளை ஷ்யாம் பெனகலுக்கும், கேத்தன் மேத்தாவுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. தெரிந்திருந்தால், நொந்து போயிருப்பார்கள். இது வழக்கமான கரன் ஜோஹர் படமில்லை என்பது உண்மைதான். “குச் குச் ஹோத்தா ஹை” போன்ற அபத்தக் களஞ்சியங்களிலிருந்து, உலகமயத்தின் சுவையை உணர்ந்த உலகமய மசாலாவுக்கு அவர் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்.
சாருவின் கட்டுரை வெளிவந்திருக்கும் அதே உயிர்மை இதழில், குஜராத் படுகொலையின் புகைப்படமாக, அடையாளமாக மாறிப் போன குத்புதீன் அன்சாரி குறித்த கட்டுரையொன்றும் வந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான கட்டுரை. அன்சாரியைக் குறித்து, இது வரை எந்தக் கரன் ஜோஹரும் திரைப்படம் எடுக்கவோ, அமெரிக்காவில் என்ன, இந்தியாவில் கூட வெளியிடவோ முன் வரவில்லை. ஏனெனில், அன்சாரியின் ‘கதையும்’, வாழ்வும், Feel Good Feeling-ஐ உண்டாக்குவதுமில்லை, அதிலிருந்து கல்லா கட்டுவது சாத்தியமுமில்லை.
பி.கு: “படத்தில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா? இப்படி ஏன் எல்லாவற்றையும் குறை சொல்கிறீர்கள்? உங்க கண்ணுக்கெல்லாம் நல்லதே படாதா” என்று தானே கேட்க வருகிறீர்கள்? திரைப்படத்திலிருந்து சொல்வதானால், சாரு உருகும் அந்த ‘சஜ்தா’ பாடல், ஒரு அருமையான கவ்வாலிப் பாடல். இதயத்தை ஊடுருவும் இசை… ஆழமானதும், கவித்துவமானதுமான வரிகள்… என்ன, அதனைக் கேட்கும் பொழுது, ரிஸ்வான் கானை மட்டுமல்ல, குத்புதீன் அன்சாரியையும் சற்று மறந்து விட வேண்டியிருக்கிறது. திரைப்படத்திலிருந்து வெளியே வந்து சொல்வதானால், நந்திதா தாஸ் இயக்கிய ‘ஃபிராக்’ திரைப்படம் பாருங்கள். அத் திரைப்படத்தில் இசைக் கலைஞராக நடிக்கும் நசிருதீன் ஷா ஓரிடத்தில் சொல்வார்: “வெறும் ஏழு சுரங்களைக் கொண்டு இத்துணை வெறுப்பை நான் எப்படி எதிர் கொள்வேன்?” அத் திரைப்படம் எங்கோ அமெரிக்காவில் ரிஸ்வான் கான் சந்திக்கும் வெறுப்பைப் பற்றியல்ல, இங்கே, நமது தவத்திரு நாட்டில் அன்சாரிகள் சந்திக்கும் வெறுப்பை பற்றிப் பேசுகிறது.

சன், கலைஞர், விஜய் என்று எதைத் திருப்பினாலும் ஒரு ஆபாசக் குப்பை அல்லது அறுவை தொடர்கள் தான். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமல் நல்ல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறார்கள்.
திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஒரு நிகழ்ச்சியை கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். மானாட மயிலாட போன்ற ஆபாச கூத்துக்களையும், பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடக்கும் கும்மாங்குத்து நடனங்களையும் பார்ப்பதற்கு எப்போதுமே எனக்கு விருப்பம் இல்லை.
தனியாக இருக்கும் போது பார்க்க ஆவல் இருந்தாலும் (ஜாள்ளத் துடைச்சிட்டேன்) வீட்டில் பெற்றோர், சகோதரிகள் இருக்கும் போது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கும். அதனாலேயே சிரிப்பொலி, ஆதித்யா தவிர எந்தச் சேனலும் நான் பார்ப்பதில்லை. எந்தச் சேனலைத் திருப்பினாலும் சினிமா அல்லது சினிமா பாடல் அல்லது சினிமாவை வைத்து குத்தாட்டம் என்று ஒரு விரசமாக மாறிவிட்டது சாட்டிலைட் சேனல்கள்.
ஆனால் சேற்றில் முளைத்த செந்தாமரை என்பார்களே அது போல ஒரு சில நல்ல நிகழ்ச்சிகளும் சன், கலைஞர் டிவிகளில் வருகின்றன. அதில் பூவா தலையா என்ற ஒரு நிகழ்ச்சி கலைஞர் டிவியில் திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது. முழுவதும் பெண்களே விவாதிக்கும் ஒரு அரங்கம். ஒரு தலைப்பு, இரு பிரிவுகள். நடுவர்களாக நம்ம குஷ்பு, ஸ்ரீ பிரியா.
எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கம் போல, கலைஞர் டி.வி உள்பட எல்லா சானல்களும் தமிழைக் கொலை செய்கின்றன என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்குத் தமிழ் பேசுகிறார்கள். ஓரளவுக்குத்தான். ஆனால் குஷ்புவை பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக
நடிகைகளில் எனக்கு சமீப காலமாகப் பிடித்தவர் குஷ்பு. அழகுக்காக மட்டுமல்ல. அவர் பேசும் தமிழ். உச்சரிப்பு கூட ஓரளவு மிகச் சரியாகப் பேசுகிறார். ஆனால் பெரியார் கொள்கைகள் என்பதை கொள்ளைகள் என்று சொன்னதை ஏற்க முடியாது. பாவம் விட்டு விடுவோம். நமீதாவை விட நன்றாகவே பேசுகிறார். படிக்கிறார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் படித்தாரே. (ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படித்தாரோ?)
பூவா தலையா நிகழ்ச்சியில் கடந்த வாரம் தமிழை வளர்த்தது பழைய திரைப்படங்களா புதிய திரைப்படங்களா என்ற விவாதம் நடந்தது.
பங்கேற்றவர்கள் பெரும்பாலும் நல்ல தமிழிலேயே பேசினர். விதிவிலக்காக சிலர் ஆங்கிலம் கலந்து பேசினாலும் தங்கள் தவறை உணர்ந்து தமிழிலேயே பேசினார்கள்.
ஸ்ரீ பிரியா மிகத் தெளிவாக தமிழில் அழகாகப் பேசினார். அதிலும் ரேடியோ என்பதற்கு வானொலி என்று கூட அழகுத் தமிழில் பேசினார். நிறைய தமிழச் சொற்களைப் பேசினார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால்
வட இந்தியப் பெண்ணான குஷ்பு தனது குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தை அவரே வீட்டில் சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னார். அது தான் ஆச்சரியம். உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். இந்த ழ, ல, ள உச்சரிப்புதான் சமயத்தில் எனக்கு வரமாட்டேன் என்கிறது என்று சொன்னார்.
முடிவு என்னவோ பழைய திரைப்படங்களே தமிழை வளர்த்தன என்பதுதான். அதுவல்ல முக்கியம். அங்கு பேசிய இரு நடிகைகளின் தமிழ் பற்றிய அக்கறைப் பேச்சே முக்கியம்.
அதிலும் ஸ்ரீ பிரியா சொன்னது. தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். அதை சரியாக உச்சரித்தாலே போதுமானது. தமில், டமில், டாமில், என்று சொல்லாமல், உங்கள் தாயை அழைப்பது போல் அழகாக தமிழ் என்று முதலில் பேசுங்கள் என்றார். இத்தனைக்கும் அவர் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை என்றார். திரைப்பட வசனகர்த்தாக்களே தன்னை நல்ல தமிழ் பேச வைத்தார்கள் என்றார்.
இதெல்லாம் எழுதிக் கொடுத்து பேசிய பேச்சுகளாக நினைக்கலாம். ஸ்ரீ பிரியா தமிழ் நடிகை அதனால் அப்படி நினைக்க முடியவில்லை. குஷ்புவை பொருத்தவரை ஜெயா டி.வி. ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்தே அவரது தமிழை கவனித்து வருகிறேன். முடியாத இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார். அதனால் இந்த நிகழ்ச்சியிலும் இந்த பகுதி மட்டுமல்ல எல்லா பகுதியிலும் நல்ல தமிழே பேசுகிறார். ஏன் மற்ற நடிகை, நடிகர்கள் நல்ல தமிழ் மட்டுமல்ல தமிழே பேசுவதில்லை என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
கடைசியாக ஒன்று. அதில் பேசிய ஒரு பெண், இந்தக் காலத்திற்கு ஏற்ப ஆங்கிலம் கலந்து வசனம் வருவது இயற்கைதானே அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீ பிரியா சொன்ன பதில் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது.
இது எப்படி இருக்கு?
மனதுக்கு நிறைவாக இருந்த ஒரே உருப்படியான டி.வி. நிகழ்ச்சி பூவா, தலையா.



































