




விடுதலைப் புலிகளின் அமைப்பு பல சமூகநல நிறுவனங்கள் என்ற பெயரில் ஜேர்மனியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று இலங்கை வெளிவிவகார ...





2009, மே 18 க்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒருவிதமான இறுக்கம் சூழ்ந்திருந்த சமயம், சில நாட்கள் அமைதிக்குக் பிறகு மீண்டும் திருப்பூரில் ஈழத்துக்கான கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. பகல்நேர அரங்கக் கூட்டங்கள்கூட இளைஞர்களால் நிரம்பியிருந்த நாட்கள் அவை. நடத்துவது யார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, ஈழம் தொடர்பான கூட்டமென்றால் வேலையைப் பொருட்படுத்தாமல் பலரும் அவ்விடங்களில் திரண்டார்கள்.
அப்படியான ஒரு அரங்க கூட்டத்தில் (அதிகம் அறிமுகம் இல்லாத சிறிய இயக்கம் ஒன்றால் திருப்பூர் நகர்மன்றத்தில் நடத்தப்பட்ட மாநாடு அது.) காலை முதல் மாலை 4 மணிவரை பலரது உரைகள் முள்ளிவாய்க்காலின் துயரமான இறுதி நாட்களைப் பற்றியதாக இருந்தது. அரங்கமெங்கும் துயரத்தில் உறைந்த முகங்களை மட்டுமே கண்டேன். அந்த நேரத்தில் பழ.நெடுமாறன் பேசத் துவங்குகிறார். அவரது வழக்கமான வாசகங்களுக்கு பிறகு பிரபாகரன் மரணம் குறித்தான கருத்து வருகிறது. “பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் அதற்கு சாட்சி, இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கும் என் முகம்தான். அவரது இருப்பை உறுதி செய்யும் விவரங்களை என்னால் தர முடியாது. அது அவருக்கு ஆபத்தை தரலாம். ஆகவே ஒரேயொரு செய்தியை மட்டும் உங்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அடுத்தகட்ட ஈழப்போராட்டத்துக்கான தயாரிப்பில் இருக்கிறார். சரியான தருணத்தில் அவர் வெளியே வருவார்”.
இந்த வாசகங்களுக்கு பிறகு அங்கே கைதட்டும் ஒலி நிற்க நான்கு நிமிடங்களானது. அதுவரை அங்கிருந்தவர்கள் முகங்களில் இருந்த சொந்த சகோதரர்களை பறிகொடுத்த சோகமும் அவர்களை காப்பாற்ற இயலாமல்போன குற்ற உணர்வும் மறைந்து போய் ஒருவிதமான மகிழ்ச்சியும் மனநிறைவும் தோன்றியது. நெடுமாறன் மீதான நம்பிக்கையை நான் இழந்த தருணமும் அதுதான். அப்போதுவரை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் எனும் நம்பிக்கை, போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களுக்கான ஆறுதல் என கருதிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தக் கருத்து, செயல்பட விரும்புபவர்களையும் போராடும் எண்ணத்தில் இருந்து விலக்கி வைக்கும் போதையாக காட்சி தந்தது அங்கே.
//இந்த சந்தர்பத்தில் பிரபாகரன் இருப்பு குறித்து சற்றே விரிவாக பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவரை தவிர்த்துவிட்டு ஈழவிடுதலையைப் பற்றி சிந்திக்கக்கூட தெரியாதவர்களாகத்தான் பெரும்பாலான தமிழுணர்வாளர்கள் இருக்கிறார்கள். //
எப்போதும் எல்லா மரணங்களும் சிலருக்கு கவலையையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் தரும். பேரன்பு கொண்ட மனிதனின் மரணத்தை கொண்டாடவும் சிலர் இருப்பார்கள். கொடூரமான மனிதனின் மரணத்திற்காக அழவும் சில ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பிரபாகரன் இறப்பு விடயத்தில், கொண்டாடுபவர்கள் கொண்டாடிக்கொண்டேயிருந்தார்கள். அதுகுறித்து கவலைப்பட வேண்டியவர்கள்தான் அவர் செத்திருக்கவே மாட்டார் என சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். வரலாற்றில் இந்த அவலம் நேர்ந்தது பிரபாகரனுக்கு மட்டுத்தான் என நினைக்கிறேன். தமிழ் சமூகத்தின் தவிர்க்கவியலாத ஆளுமை ஒருவரை இந்த நிலைக்கு தள்ளியது அவரை அளவுக்கு மீறி நேசித்தவர்கள்தான்.
பிரபாகரனது இறப்பு செய்தி தமிழ்செல்வனது மரணத்தைப்போல திடீரென வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டோம் என இந்திய இலங்கை அதிகாரவர்கங்கள் அப்போது அறிவித்துக்கொண்டிருந்தன. பிரபாகரனை கைது செய்தால் ஒரு மன்னனைப்போல நடத்தவேண்டும் என கருணாநிதி ஒரு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என வைகோ கர்ஜித்தார். சரணடைவு எனும் பேச்சுக்கே இடமில்லை, போராளிகள் கடைசிவரை களமாடுவர்கள் என கட்டளைத்தளபதிகளாகவே மாறி சில தலைவர்கள் முழங்கினார்கள். ஆகவே எல்லா மட்டத்திலும் பிரபாகரன் பேராபத்தில் இருக்கிறார் எனும் உண்மை தெரிந்திருக்கிறது.
முல்லைத்தீவில் சில சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வளைக்கப்பட்ட நிலையில் இருக்கும் போராளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள். கடல்வழியே தப்பிக்கும் வாய்ப்பை அறவே இல்லாமல் செய்ய இந்தியாவின் முற்றுகை. ஒருவேளை தப்பமுடிந்தாலும் தமிழகத்துக்குத்தான் வந்தாகவேண்டும், ஆனால் இங்கோ சிங்கள ராணுவத்துக்கு இணையான கடமையுணர்வுடன் புலிவேட்டைக்கு காத்திருந்த தமிழக காவல்துறை. இத்தகைய சூழலில் புலிகளுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புக்கள்தான், ஒன்று போராடி மடிவது அல்லது சரணடைவது. எப்படியாவது போராளிகள் பிழைத்தால் போதும் என ஏன் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தோன்றவில்லை? அல்லது இந்த கள யதார்த்தத்தை மக்கள் அறியவிடாமல் செய்தது யார்? சண்டையிட்டு சாவதா அல்லது சரணடைந்து உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்வதா என்பதை களத்தில் உள்ள போராளிகள்தான் முடிவு செய்ய வேண்டும். இங்கிருந்துகொண்டு அவர்களுக்கு கட்டளையிடும் தகுதியும் அதிகாரமும் நம் ஆட்களுக்கு எங்கிருந்து வந்தது?
கிளிநொச்சி வீழ்ந்த போது நடேசன் சொன்னார் “ஏழு கோடி தமிழ்மக்கள்தான் எங்கள் பலம்”. அவர் சரணடையும் முன்னால் நடந்த கடைசி செயற்கைகோள் தொலைபேசி உரையாடலில் சொன்னவை “இன்னும் அரை மணிநேரத்தில் நான் மீண்டும் அழைக்காவிட்டால் நான் கொல்லப்பட்டுவிட்டேன் என முடிவு செய்துகொள்ளுங்கள்”. பெரும் சித்திரவதைக்கு பிறகு கொல்லப்பட்ட நடேசனின் உடலின் புகைப்படத்தை பார்த்தபோதும் இப்போது பார்க்கும்போதும் என் நினைவில் தோன்றி தலைகுனியவைக்கும் வாசகங்கள் இவைதான் “ஏழுகோடி தமிழ்மக்கள்தான் எமது பலம்”. நடேசன் மட்டுமல்ல ஈழப்போரின் கடைசி இரண்டு நாட்களில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் ‘நம்மிடம்’ இருந்து நல்ல செய்தி வரும் எனும் நம்பிக்கையில்தான் தங்கள் இறுதிநாள் வரை இருந்திருப்பார்கள்.
ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நாம் இருந்திருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். உண்மையில் நாம் போரை வெறுக்கவில்லை, தோல்வியைத்தான் வெறுத்தோம். மனசாட்சியோடு சொல்லுங்கள், இதே ஒன்றரை லட்சம் மக்கள் சிங்களர்களால் கொல்லப்பட்ட ஒரு போரில், புலிகள் யாழ்பாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றும் நிலையில் இருந்திருந்தால் நாம் போர் நிறுத்தம் கோரியிருப்போமா? ஆகப்பெரும்பாலான தமிழ்தேசிய தலைவர்கள் நம்மை பிரபாகரனின் ரசிகனாக இருக்க மட்டுமே தயார்படுத்தினார்கள். இந்த தயாரிப்பால் நமக்கு பொதுமக்கள் இரண்டாம்பட்சமானார்கள்.
போரின் இறுதி நாட்களில் எப்படியாவது பிரபாகரன் பிழைத்தால் போதும் என்பதுதான் அனேகரது எதிர்பார்ப்பாக இருந்தது. இதனை ஈழமக்கள் மீதான அக்கறைக் குறைவு என பொருள் கொள்ளமுடியாது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஈழ ஆதரவு தலைவர்கள் எல்லோரும் பிரபாகரனும் புலிகளும்தான் ஈழம் எனும் அடிப்படையில் மட்டுமே பேசினார்கள். புலிகளின் போர்திறனும் பிரபாகரனின் ஆற்றலும் மட்டுமே ஆகப்பெரும்பாலான தமிழீழ ஆதரவு கூட்டங்களில் பேசப்பட்டன. இந்த பேச்சுக்கள் புலிகள் வெல்லவே முடியாதவர்கள் எனும் இறுமாப்பை பலரின் மனதில் விதைத்திருந்தது. புலிகள் மாதக்கணக்கில் பின்நகர்ந்துகொண்டிருந்த போதும் பிரபாகரனிடம் ஏதோ பெரிய திட்டமிருப்பதாக உறுதியாக நம்பிக்கொண்டிருந்த பலரை எனக்குத் தெரியும். எனவே உலகத்தமிழர்களிடையே விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கையை காப்பற்றுவதற்காகவேனும் புலிகள் களமாடவேண்டிய நிர்பந்தம் உருவானது. இந்தியாவுக்கான போரை நாங்கள் நடத்தினோம் என கோத்தபயா சொன்னது முழு உண்மையென்றால் நம் (தமிழர்களின்) நம்பிக்கைக்கான போரை புலிகள் நடத்தினார்கள் என்பது பாதி உண்மை.
பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் எனும் வெகுமக்களின் வேண்டுதல் அவருக்கு எள்முனையளவும் உதவவில்லை. இன்னும் வெளிப்படையாக் சொல்வதானால் அவருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ எனும் சந்தேகத்தைக்கூட அந்த வேண்டுதல் தின்று செரித்துவிட்டு ‘தம்பி வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்’ என சமாதானம் அடையவைத்தது. இந்த வேண்டுதல் தமது விருப்பங்களை சம்பவங்களைபோல கற்பனை செய்து பலரை பேசவைத்தது. இறுதி நாட்களில் பிரபாகரன் எத்தகைய மனோநிலையில் இருந்தார் என்பதைக்கூட நாம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் நிராதரவாக விடப்பட்டார். அவரது இறுதி விருப்பங்களும் முயற்சிகளும் வரலாற்றின் பார்வையில் இருந்து முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.
சார்லஸ் ஆண்டனி கொல்லப்பட்டதாக் ஒரு புகைப்படம் வெளியானது, அவர் போரில் வீரச்சாவடைந்தார் என தமிழ்தேசிய தலைவர்கள் சொன்னார்கள். சிங்கள ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு (பல பற்கள் பிடுங்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தி சொன்னது) கொல்லப்பட்டதாக ஒரு பிரபல புலனாய்வு இதழ் செய்தி வெளியிட்டது (ஜூவி என நினைவு). வீரச்சாவடைந்தார் எனும் செய்தி நமக்கு ஓரளவு திருப்தி தருவதாக இருந்தது, ஆகவே அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் எனும் கோணத்தில் இருந்த செய்தி கண்டுகொள்ளப்படவில்லை. துவாரகா கொல்லப்பட்டதாக சொல்லி ஒரு புகைப்படம் வெளியானது, அது துவாரகா இல்லை இசைப்பிரியா என நெடுமாறன் சொன்னார் (அந்த தொனி, நல்லவேளை அது துவாரகா இல்லை என்பதாக இருந்தது). அவ்வளவுதான், துவாரகா என்னவானார் எனும் ஐயமே எழாமல் அந்த செய்தி ஓரம்கட்டப்பட்டது. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படம் வெளியாகி மூன்றாண்டுகள் அது கவனிக்கப்படவேயில்லை. அவருக்காக நம்மை கண்ணீர் சிந்த வைத்தது சேனல்4 எனும் இங்கிலாந்து வணிக ஊடகம், அந்த வேலையைக்கூட செய்யவியலாதவர்களாகத்தான் நமது ஈழ ஆதரவு தலைவர்கள் இருக்கிறார்கள்.
இன்றுவரை மதிவதனிக்கு என்னவானது என கவலைப்பட இங்கு யாருமில்லை. பொட்டம்மானுக்கு என்னவானது என யோசிக்க ஆளில்லை. புலிகளின் முக்கியமான தலைவர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சரணடைந்து சிங்கள் ராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டதாக் உறுதியான தகவல் வந்தது. இங்கே எந்த சத்தமும் கேட்டதாக தெரியவில்லை. கைது செய்யப்பட்ட புலித் தலைவர்கள் குறித்து விவரம் சொல்லத் தயார் என சிங்கள அமைச்சர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னால் அறிவித்தார், அதையும் கேட்டுப்பெற நாதியில்லை. தமிழ்செல்வனின் மனைவி இன்றுவரை கருணாவின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது, அந்த செய்திக்கும் அதே கதிதான். பணிரெண்டாயிரத்துக்கும் அதிகமான சரணடைந்த போராளிகளின் எதிர்காலத்திற்காக இயங்கவும் ஆளில்லாமல், கனடாவில் ஐந்து நட்சத்திர தரத்தில் படோடாபமாக நடந்த நாடுகடந்த தமிழீழ அரசின் கூட்டத்தை கண்டிக்கவும் ஆளில்லாமல் திக்கற்று நிற்கிறது தமிழினம்.
ஈழத்தை தமது பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்களைக்கொண்ட தமிழகத்தில்தான் மேற்கூறிய புறக்கணிப்புக்கள் நடக்கின்றன. இந்த லட்சணத்தில் ஈழப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தமது விழிகளை மூடிக்கொண்டிருக்கிறது என நாம் குறைபட்டுக்கொள்கிறோம். நாம் நம்ப மறுக்கிற மற்றும் கண்டுகொள்ள விரும்பாத பல பிரச்சனைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரபாகரன் சாகவில்லை எனும் தீர்மானகரமான வேண்டுதல் காரணியாக இருக்கிறது. அவர் சரணடைந்திருக்க முடியாது எனும் நம்பிக்கைதான் சரணடைந்த பிற போராளிகளைப் பற்றிய நமது அலட்சியத்துக்கு அடிப்படை.
பிரபாகரன் மீதான இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கியமான காரணம். ஈழத்தை வென்றெடுக்க எந்த ஆக்கபூர்வமான யோசனையும் இல்லாதவர்கள்தான் பிரபாகரன் மீண்டும் வருவார் என நம்பியாகவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வந்து போரிடுவார் என சொல்வது, இதில் நான் செய்ய எதுவுமேயில்லை எனும் சோம்பேறித்தனத்தின் ஒப்புதல் வாக்குமூலம். என்ன நடந்தது எனும் உண்மையை அறிய முயலாமல் அவர் சரணடைந்திருக்க மாட்டார் என சாதிப்பது, தன் விருப்பத்தை சம்பவமாக கற்பனை செய்துகொள்ளும் மனநோய்.
நாம் பேச மறுக்கிற அல்லது சிந்திக்க மறுக்கிற விடயங்கள்:தான் நம் எதிரிகளுக்கு ஆயுதமாக இருக்கிறது. பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படத்தைக்காட்டி நாம் பரிதாபத்தை தேடிக்கொண்டிருந்த சமயத்தில், புலிகளால் கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்ட சிறார்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என ஈ.வெ.கி.ச இளங்கோவன் ஒரு கூட்டத்தில் கேட்டார்.. இளங்கோவனது தகுதியும் யோக்கியதையும் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த கேள்வி நாம் பதில் சொல்ல வேண்டியதா இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களைவிட எங்கள் நாட்டு முகாம்கள் சிறப்பாக இருக்கின்றன என இலங்கை அரசு சொன்னது. இதைக் கேட்டபோது, ஒன்று நம் மீது நமக்கு கோபம் வந்திருக்க வேண்டும் இல்லை நம் அரசின்மீது கோபம் வந்திருக்க வேண்டும். வந்ததா? போர்குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை புலிகளையும் குற்றம் சாட்டியது. நாம் அந்த பகுதிகளை மட்டும் மறைத்துகொண்டு அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நடவடிக்கையை கோரினோம். ஆனால் உலகின் பார்வைக்கு புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களும்தான் சென்று சேர்ந்தது.
பதில் சொல்ல மறுக்கும் அல்லது காதால் கேட்கவே மறுக்கும் கேள்விகளால்தான் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம். விமர்சனங்களை எதிர்கொள்வதும், கடந்தகாலத்தில் நிகழ்ந்த தவறுகளை ஒத்துக்கொள்வதும்தான் விடுதலையை விரும்பும் மனிதர்களுக்கான முக்கியமான தகுதி. நியாயமான காரணங்கள் சொல்ல முடிகிற ராஜீவ் கொலைக்கான பழியை அமெரிக்கா மீது சுமத்துவதும் நியாயமான காரணத்தைக் கேட்கவேண்டிய (மாத்தையா போன்றோருக்கு விதிக்கப்பட்ட) கொலைகளுக்கு நாமே காரணம் கற்பிப்பதுமான பயந்தாங்கொள்ளித்தனமும் வெட்டிவீராப்பும்தான் நமது பெரிய பலவீனம்.
வெறுமனே ஆராதனை செய்து அந்தத் தலைவனின் குடும்பத்தை அநாதையாக சாகவிடுவதைவிட தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒப்புக்கொள்வதும் எந்தவகையிலும் இழிவானதல்ல. ஒரு காயத்தை மீண்டும் கீறிவிடுவது நிச்சயம் வலி நிறைந்த செயலே.. ஆனால் அது சிலசமயங்களில் மிகவும் அவசியமானதாகிறது. ஆகவே, தமிழீழம் தொடர்பான நம்பிக்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என தமிழ்தேசிய குழுமங்களில் உள்ள நண்பர்களைக் கோருகிறேன். விமர்சனம் செய்யும் நபராக அல்ல, 2009ஆம் ஆண்டுவரை உங்களையொத்த சிந்தனை கொண்டிருந்த ஒருவனாக..
மேற்சொன்ன கருத்துக்களுடன் ஒரு சதவிகிதம் ஒத்துப்போனாலும் அது குறித்து நீங்கள் கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் நமக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு சதவிகித காரணத்தைக்கூட பரிசீலித்து சரிசெய்தாக வேண்டிய அளவுக்கு மோசமானது.







கந்தகம் கலந்த தெருக்களில் இப்போது காமினிப் புதல்வர்களின் நடமாட்டம் விந்தைகள் பல புரிந்தவர் உறங்கும் வீர நிலத்தின் ...

கந்தகம் கலந்த தெருக்களில் இப்போது
காமினிப் புதல்வர்களின் நடமாட்டம்
விந்தைகள் பல புரிந்தவர் உறங்கும்
வீர நிலத்தின் மீது விமானத் தளத்திற்கான
அடிக்கல் நாட்டு விழா
சொந்தம் எம் பூமி இது என்று
சொல்லிட முடியா அளவிற்கு
வந்தவர் இங்கே திரிகிறார் – கையில் துவக்குடன்;
எம் வரலாற்றை அவரும் மாற்றுறார்
ஊர் ரொம்ப மாறிடுச்சு
போனவர் – வந்தவர் – ஏன் இனியும்
போகப் போறவர் கூட
ஆவலாய்ச் சொல்லுறார்
அதைக் கேட்கையில் நம்மவரும்
இப்போது ஆனந்தம் கொள்கிறார்
செம் புழுதித் தெருக்களில் படிந்த
செங்குருதி மணம் ஓயும் முன்னே
சங்கமித்தை வம்சம் தன்
சுவடு இது என்று சத்யம் மே ஜேயதே சொல்லுது
நம் சுவடு எங்கே என்று நாளைய
சந்ததிக்கும் நாம் சொல்லிட முடியா நிலையில்
நம்மினமோ சிறையுள் நாளும் தவிக்குது
இருப்புக்கள் யாவும் தொலைத்து
இனி இழப்பதற்கில்லை என்றான பின்
வெறுப்புக்குள் வாழ்கிறது ஓர் சந்ததி
வேரறுத்த வரலாற்றை மாற்றிட
பல வீர தீரச் செயல்களைச் செய்கிறது புத்தனின் சந்ததி
முறி கண்டிப் பிள்ளையாரின் கீழிருந்தும்
முந்நூறாண்டு பழமையான புத்தர் சிலை
நாளை முளைக்கலாம் – எங்கள்
கவரேஜ் பிள்ளையாரும் கண்டாவளையானும்
ஏன் புதூரும், வற்றாப்பளையும், மடு மாதாவும்
புத்தர் சிலையின் கீழ்
புதுமையாய் அமிழ்ந்து போகலாம்
துப்பாக்கிகளின் பிடியில் இப்போது
புது வசந்த கீதம் ஒலிக்கிறது
தப்பென்று சொல்லினாலோ
தவறி வாய் திறந்தாலோ
நாலாம் மாடி தான்
இப்போதைக்கு ஏற்ற இடம் என்று சாசனம்
எழுதப்பட்டாகி விட்டது
ஊர் இப்போது மாறித் தான் போச்சு
கார் இருள் அகற்ற களமாடிய நினைவுகள்
கந்தகம் சுமந்திட்ட கறுப்பு வரலாறுகள் யாவும்
மந்தமாய் மெது மெதுவாய் – எம்
மனங்களை விட்டகலலாச்சு
இனி ஓர் காலத்தில்
பழைய ராசாக்கள் கதை போலவும்
அடி பாட்டு படத்தில் வரும்
பைட் சீன் போலவும்
எம் தாய்மார்கள் தம் பிள்ளைகட்கு
உப கதை சொல்லக் கூடும்!
பாவம் வன்னிச் சனம் என்ற வார்த்தை
பறி போயி இப்போது
மோசம் இந்தச் சனம் என்று உலகம்
தூற்றலாச்சு
வீரம் எழுத நினைத்த வரலாறு கூட
வாழும் வரை தான் போற்றிடுவோம் எனும்
நிலையால் நாளும் நாறிப் போகலாச்சு
நிமிர்ந்து நின்ற வேளையில்
நிறைவாக வழங்கிய கைகள் எல்லாம்
இப்போது ஏதுமில்லை என்றான பின்
தம் பாட்டில் தம் பாட்டை பார்க்கலாச்சு!
இனி என்ன?
கதவில்லா கக்கூசு
காலையில் ஒதுங்கும் பனை வடலி
இவையாவும் சாமப் பேய்கள் உலவும்
சந்நிதியாய் மாறிடலாச்சு
காப்பொட் வீதி – களைப்பாற
கூல் சாதனம்
மாப்பிள் பதித்த பல வீடு
மணிக்கு மணி அப்டேற் காட்டும்
இன்ரநெட்டு
ஆப்பிள் முதல் அனைத்தும் கிடைக்கும்
அதிசய ஊராய் எங்களூர் ஆச்சு
உலைக் களம் பாடியவன்
இப்போதிருந்திருந்தால்
ஊர் பட்ட பாட்டை – பெருங்
கவி நிலையிலே தந்திருப்பான்,
நிலைக்கும் எம் தேசம என
கொண்ட கனவுகளும்
எமை விட்டு நீங்கிப் போகும் நிலையில்
உயிர் பிழைக்கும் நிலையை எண்ணியபடி
எங்கள் தெருக்களும் அழகிறது
சிறிய மனங்களின் பெரிய வெப்பியாரங்கள்
கரிய இருள் கொண்டு அகற்றப்படுகின்றது
ஏ 9 தெருவும், எம்மவர் ஏறி நடந்த
வீதிகளும் இனி
எம் வாய்க்குள் நுழையாத பெயர்
கொண்டு மாற்றப்படும்
போனதோ வரலாறு என்று யாரிடம் சொல்லி
நோகலாம்?
வந்தாரை வாழ வைத்த வன்னி நிலம்
இன்றும்
சூறையாட வந்தோரை
வாழ வைக்கிறது
நிலம் மட்டும் தன் நிலையில் மாறவில்லை
நாம் மட்டும் மாறி விட்டோம்
பனங்காம மண்ணின் மகிமைகள்
தொல் பொருள் ஆய்வில் கிடைக்கா வண்ணம்
பல பருந்துகள் நோட்டமிடுகின்றது – யார்க்கும் தலை
வணங்காதிருந்த வரலாறுகள் வெளித் தெரியா வண்ணம்
இலங்காபுரி வேந்தால் இன்றும் மூடப்படுகின்றது
எங்கள் நிலம் இன்றும் அழுகிறது தேற்றுவாரின்றி
ம்ம்…ஊர் ரொம்பத் தான் மாறிடுச்சு


மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பாகவும், உலகத் தமிழர்களின் பெருமளவான பொருட் செலவுடனும், பங்களிப்புடனும், பிரமாண்டமான ...

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பாகவும், உலகத் தமிழர்களின் பெருமளவான பொருட் செலவுடனும், பங்களிப்புடனும், பிரமாண்டமான முறையில் திரைக்கு வரத் தயாராகிறது இத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பெயர் தான் மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! ஆசியாக் கண்டத்தில் உள்ள மங்களவர் கூட்டுத் தாபனத்தின் தயாரிப்பில், கோமான், சைக்கோ, மற்றும், வருவாய்நிதி, பனிமொழி, பொருமா, கொலைஞர், முதலிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும், ஸ்பெக்ரம் விருது புகழ் பாசாவின் இசையிலும் திரைக்குவரத் தயாராகிறது இந்தப் படம். இனித் திரைப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஹாலிவூட் திரை உலகத்தினையே ஒரு கணம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு; ஆங்கிலத் திரைப்பட உலகையே ஒரு கணம் புரட்டிப் போடுமளவிற்கு Inspired by true events (இப் படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை)எனும் அறிமுக டைட்டிலோடு ஆரம்பமாகிறது படம். படத்தின் கதைப்படி கதாநாயகர்களான சைக்கோ, மற்றும் கோமான் ஆகியோர் ‘அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் விமானத்தில் ஆசியாக் கண்டத்திலுள்ள மகிழ்நாடு எனும் இடத்திலிருந்து, அந்த நாட்டிற்கு அருகேயுள்ள சலங்கை எனும் நாட்டிற்குப் போகிறார்கள்.
போகும் வழியில் பல அடி உயரத்தில் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நின்று விடுகிறது. உடனடியாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பேந்தப் பேந்த முழி பிதுங்கிய இருவரும்; “இப்போ பிளேனை ஓட்டுறதுக்கு என்ன வழி?” அப்படீன்னு கேட்கிறார்கள். உடனே கதாநாயகர்களுள் ஒருவரான சைக்கோ அவர்கள் ”கோமான் நீங்க அனல் பறக்கப் பேசினிங்க என்றால் பிளேன் பறந்திடும்!” என்கிறார்,
அதற்கு கோமானோ, ”என்ன சைக்கோ சார் அப்பிடிச் சொல்லிட்டீங்க, நீங்க தானே என்னை விடப் பெரிய, முதிர்ந்த நடிகர், அப்ப நீங்களே பேசிடுங்க” எனச் சொல்லுகிறார். இதனால் கடுப்பாகிய நடிகர் சைக்கோ அவர்கள் கோமானின் கழுத்தைப் பிடித்து; ”நீ பேசுறியா இல்லை, உன்னோடை சலங்கைத் தீவிற்கு ஆதரவான நடிகர்களின்ரை படத்தைப் புறக்கணிக்கச் சொல்லி, அடிக்கடி சொல்லுவாயில்லே. அந்தப் புலம்பலுக்கான, ரகசியத்தைப் போட்டுடைக்கவா என்றதும்,
தன்னையே ஒரு கணம் உற்றுப் பார்த்த இயக்குனர் கோமான், ”ஓக்கே சைக்கோ நானே பேசிடுறேன் என்று பேசத் தொடங்குகிறார்.
‘’என் அன்புக்குரிய மகிழ் நாட்டு மக்களே, சலங்கை அரசிற்கு ஆதரவாய் அங்கு போய் கும்மியடித்து, குதூகலம் புரிந்த நடிகை பிசினைப் புறக்கணிக்கலாம். அதற்காக அவர் பஜயுடன் நடித்த காவலனை எப்படி நாம புறக்கணிக்க முடியும்? நடிகர் பஜய் இப்போது எனது அன்புக்கும், பண்புக்கும் பாத்திரமாகி நாம் மகிழ்வர் கட்சியிலும் இணைந்து விடுவார் போலிருக்கிறது. என்னோட தயவில் பகலவனிலும் கலக்கப் போகிறார். ஆகவே இன்று முதல் அனைத்துத் திரைகளிலும் அவர் படமே ஓடட்டும்!!
அப்படீன்னு கோமான் சார் பேசியது தான் தாமதம்; முற்பத்தி மூவாயிரம் அடிகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கையில் தொழில் நுட்பக் கோளாறால் கீழே விழும் வகையில் வேகமாகப் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த, விமானம் கோமானின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்டுப் பறக்கத் தொடங்குகிறது.
இந்தத் தொழில் நுட்பத்தை இப் படத்தில்; இயக்குனர் கோமான் அவர்களே (இப் படத்தின் இயக்குனர்) தனது உயிரையும், சைக்கோவின் உயிரையும் பணயம் வைத்து வானத்தில், அதுவும் 33,000 அடி உயரங்களுக்கு மேல் பழுதடைந்த விமானத்தினை அனல் பறக்கப் பேசி ஓட வைக்கும் வகையில், விமானம் விழுவதற்கு முன் டயலாக் பேசி வானத்தின் இடை நடுவில் வைத்து மீண்டும் விமானத்தைப் பறக்கச் செய்து எடுத்திருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். இக் காட்சியானது படத்தில் வரும் வேளையில்; ரசிக சிகா மணிகள் அனைவரும் நிச்சயம் தியேட்டரை விட்டெழுந்து கைதட்டித் துள்ளி மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
இத் தொழில் நுட்பத்திற்கு இணையாக உலகில் இதுவரை எந்தவிதப் படங்களிலும் தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால் ஹொலிவூட் இயக்குனர்கள் கூட இவ் விடயத்தினை அறிந்து கோமானின் வீட்டை நோக்கிப் படையெடுக்க விசாவிற்கு விண்ணப்பிபதாக தகவல்களும் வெளியாகியுள்ளது. ’’என்னங்க கோமான் சார், உங்க பேச்சைக் கேட்டு ஆப் ஆன எஞ்சினே ஓர்க் பண்ணுது, ஆனால் ஏன் சார் பொட்டு வரும், பொட்டு வரும் என்று அடிக்கடி சொல்லுறீங்களே, அவர் இன்னும் வரலை? அப்படீன்னு ஓர் சுவையான கேள்வியினை நடிகர் சைக்கோ, கோமானைப் பார்த்து கேட்பதாக படத்திலோர் காட்சியுண்டு. இந்தக் காட்சியின் போது கோமான் சார் சொல்லும் பதிலிருக்கிறதே. தியேட்டரில் பல நாள் சிரிக்காத உம்மணா மூஞ்சிகளையும் விழுந்து விழுந்து சிரிக்கப் பண்ணும் வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை.
‘யோவ் சும்மா வாயை மூடிக்கிட்டு இருய்யா. நானே மக்களை வைச்சுக் காமெடி பண்ணிக் கிட்டு இருக்கிறன். நீ வேற.. என்னைய வைச்சு காமெடி பண்ணப் பார்க்கிறியா?பிளேனைத் திசை மாத்திக் கடலிலை இறக்கிடுவன். ஜாக்கிரதையா இருங்க சைக்கோ சார்!!” அப்படீன்னு சொல்லியதும் சைக்கோ வாயை மூடிக்கிட்டு கோமான் சார் முன்னாடி உட்கார்ந்திருந்து, பூலோகத்தில் மின் வெட்டு இடம் பெறும் மேட்டரை IPAD இல் பார்த்துக்கிட்டு இருக்காரு.
விமானம் பறந்து கொண்டிருக்க இருவரும் கண்ணை மூடுகிறார்கள். அப்போது படத்தின் முதலாவது பாடல் ஆரம்பிக்கிறது.
‘அடிப்பேன் திருப்பி அடிப்பேன்..
எனது புளுகால் சலங்கை ஆமிக்கு திருப்பி அடிப்பேன்
அடிப்பேன் திருப்பி அடிப்பேன்
எனது பேச்சால் உலகை அளப்பேன்….
இவ்வாறு பாடிக் கொண்டிருக்க விமானம் சலங்கை எனும் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் தரையிறங்குகிறது.
அபுகா ஜிபுகு குபுகா விமானத்திலிருந்து இறங்கி மண்ணைத் தொட்டுக் கும்பிட்ட பின்னர், கையில் உள்ள கடிகாரத்தை எடுத்து 19.05.2009 எனும் திகதியை மாற்றி, நாங்கள் எங்களிடம் உள்ள டைம் மெசின் மூலம் இப் போதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் போகப் போகிறோம் என்று கூறியதும் படத்தின் காட்சிகள் அனைத்தும் மாறுகின்றன.
படத்தின் கதைப்படி நாயகர்கள் சைக்கோ, மற்றும் சீமான் அவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி நேரத்தில் இறந்த ஒரு பெரியவரின் DNA அல்லது மரபணுவை எடுத்துக் கொண்டு மீண்டும் மகிழ் நாட்டிற்கு வருகிறார்கள். மகிழ் நாட்டில் உள்ள தமது ’வாய்ப் பேச்சு வீரம்’ எனும் ஆய்வு கூடத்தில் வைத்து மைக்ரோ பில்டர் கண்ணாடி (Micro Filter Glass) மூலம் ஒரு படைத் தலைவனையும், அவனுக்கு கீழே போராடும் வகையில் பல வீரர்களையும் சலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்காக விடுதலை வேண்டிப் போராடும் வண்ணம் உருவாக்கிறார்கள்.
இவர்களால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்கள் அனைவரும் இவர்களின் சொல்லினைக் கேட்டு, மீண்டும் ஒரு போர் வேண்டி சலங்கை நாட்டில்த் தரையிரங்கிப் போரினைத் தொடுக்கிறார்கள்.இறுதியில் “இந்த வாய்ச் சொல்லில் வீரர்களின் போலியான பேச்சினை நம்பி ஏமாந்திட்டமே” எனும் உண்மையினை உணர்ந்தவர்களாக மீண்டும் தங்களை உருவாக்கியவர்களான கோமான், சைக்கோ ஆகியோரைத் தேடி வந்து கடித்துக் குதறுவதுடன் இப் படம் முடிவடைகிறது. இதுவே இப் படத்தின் கதையுமாகும்.
படத்தின் சிறப்பம்சமாக தேனிசை தென்னப்பாவின்
“புலம் பெயர்ந்த மகிழர் நாங்கள் இருக்கிறோம்
போர் புரியும் உங்களுக்கு உதவுறோம்
நிலங்களை மீட்கையில் நிமிர்ந்து சிரிக்கிறோம்
நெஞ்சில் உமை போற்றி வியந்து ரசிக்கிறோம்” எனும் உணர்ச்சியான எழுச்சிப் பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தில் பள்ளிப் படிப்பை இடை நடுவில் கைவிட்டு விட்டு, பன்னிரண்டு வயதிலே போராடப் புறப்பட்ட இயந்திர மனிதர்கள், உணவோ உறக்கமோ இன்றி சளைக்காது போரிடும் காட்சி நிச்சயம் மனதை ஒரு கணம் உறையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்தக் காட்சியின் போது, ஓர் காலத்தில் ஈழத்தில் தடை செய்யப்பட்டிருந்த
“12 வயதினில் தோளிலே துப்பாக்கி எங்கே அவன் போகின்றான்….
பிள்ளை போராடத் தான் போகின்றான்” எனும் பாடலை மீண்டும் அனைவரும் பார்த்து + கேட்டு மகிழும் வண்ணம் தேடி எடுத்து இணைத்திருப்பது இயக்குனரின் பணிக்கு சான்றாக விளங்குகின்றது.
ஆனால் அடுத்த கணமே தமது பிள்ளைகளைப் படிக்கவும், சொகுசு வாழ்க்கை வாழவும் அனுப்பி விட்டு, இக் கள முனையில் நிற்கும் இயந்திர மனிதர்களைப் பார்த்து சில மனிதாபிமானமற்ற போர் வெறியர்கள் பேசும் காமெடி வசனங்கள் பலரது மனங்களிலும் ஆத்திரத்தை வர வைக்கும் வண்ணம் இயக்குனர் படத்தில் வசன அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.
“அடியுங்கள்…அடியுங்கள்! விடாமல் அடியுங்கள்!
முல்லைத்தீவில ஆமியா? நம்ம தலைவருக்கே சவாலா!!
என வசனங்கள் பேசுவதும்,
“ஊரிலை சனம் செத்தால் தான் எங்களின் வீட்டு உணவு மேசையில் சப்பாடு விழும்!”
“இனியொரு வெற்றிச் செய்தி கேட்காமல் வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போக மாட்டேன்……” என ஒரு சில வெளிநாட்டுத் தமிழர்களும் டயலாக் பேசி உணர்ச்சியினை ஊட்டுவதும் படத்தில் மனங் கவர்ந்த வசனங்களாக உங்கள் மனதில் பதியும் என்பதில் ஐயமில்லை.
படத்திற்குக் காமெடிக்குப் பஞ்சமே இல்லை எனும் வகையில் பிரபல காமெடி நடிகர் வருவாய் நிதி அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட பணியில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் நிதி அவர்கள் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதும், பின்னர் உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தினுள் ’’கழிப்பறைக்குப் போய் விட்டு வருகிறேன்’’ என்று புறப்பட்டு; மேடைக்குப் பின் புறத்தில் இருந்து ‘டாஸ்மாக் பியர்’ அருந்துவதும் பார்வையாளர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் சிரிப்பினை வர வழைக்கும் காட்சிகளாக அமைந்திருக்கின்றது.
படத்தின் ஒரு காட்சியில் வருவாய் நிதியுடன் ;காட்சிகளில் தோன்றிய துணை நடிகர் பாசா கைது செய்யப்பட்டவுடன், பாசாவை விடுவிக்கக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை வருவாய் நிதி அவர்கள் ஆரம்பிக்கிறாரு. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு சில மணி நேரத்தினுள் “மக்களே… என்னுடைய சொல்லுக்கு சத்திய அரசு இணங்கி விட்டது. நான் வழங்கப் போகும் தொகுதிகளை நம்பி, பாசாவை விடுதலை செய்ய;சத்திய அரசு இணங்கியதால்”நான் இப்போதே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் எனச் சொல்லி மேடையில் இருந்து இறங்குகிறார்.
இத்தகைய காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால்; பார்வையாளர்களின் கரகோசம், விசிலோசை முதலியவற்றால் தியேட்டர்களே அதிரப் போகுகிறது என்பது மட்டும் உண்மை. படத்தில் கவர்ச்சிப் பாடல் போடனும்; அயிட்டம் சாங்ஸ் வேண்டும்; எனும் சைக்கோ சாரின் கூற்றுக்கு அமைவாக நடிகையினைத் தேடி அலைந்த இயக்குனர் கோமான் அவர்கள் இறுதியில் ஊழல் வழக்கில் கைதாகி, ஜெயிலில் இருக்கும் நடிகையான பனி மொழியினைக் கவர்ச்சிப் பாடலில் நடிக்கச் செய்திருப்பது படத்திற்குப் பிளஸ் பாயின்ட். பனி மொழியுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இப் படத்தில் தோன்றி நடனமாடியிருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம். உங்களுக்காக இப் பாடலினையும் இங்கே இணைத்துள்ளேன். நீங்களனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய பாடல் இது.
இந்தத் திரைப் படத்தினை ஆங்கிலத் திரைப்படங்களான Splice, Piranha முதலியவற்றைத் தழுவி எடுத்திருப்பது போலத் தோன்றினாலும், படத்தின் பின்னணிக் காட்சிகளில் நிஜமான, உயிரையே பணயம் வைத்து நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், இப் படம் வேறு படங்களின் தழுவல் இல்லை என்பதையும் பார்வையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பது இயக்குனரின் அபிப்பிராயமாகும்.
நான்கு சுவருக்குள் இருந்த படி படத்தின் இசையினைப் பாசா அவர்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். இத் திரைப் படத்தினை, புதிய படங்களை வழமை போல நீங்கள் திருட்டு வீசிடியில் பார்த்து மகிழ்வது போலன்றி; தியேட்டரில் சென்று பார்த்து மகிழும் வகையில் 3D தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் படத்தில் பல பஞ்சு வசனங்கள் இடம் பெற்றிருப்பதால், உலகின் முதல் தரப் படங்கள் அனைத்தையும் விட மிக நீண்ட நாட்களுக்குத் தியேட்டர்களிற்கு வருவாயினை இப் படம் ஈட்டிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
உலகத் திரையரங்குகளில் எதிர் வரும் மே மாதம் காண்பிக்கப்பட இருக்கிறது மீண்டும் ஓர் ஈழ யுத்தம் திரைப்படம். ஆதலால் இப் படத்தினைப் பார்த்து விட்டு, உங்களின் விமர்சனங்களை எழுத தயாராகுங்கள்.


“துணிக்கை ஒன்றை ஆரம்ப வேகம் 100m/s இல் செங்குத்தாக மேல்நோக்கி எறிந்தால், அது திரும்பி பூமியை அடையும் வரையிலான பயணத்துக்கான வே...”
இந்த இடத்தில் நிறுத்திவிட்டு குமரன் மாஸ்டர் ஒரு மர்ம புன்னகை ஒன்றை விடுவார்.
“வேக நேர வரைபா சேர்?”
சேர் இப்போது சடக்கென்று கேள்வியை மாற்றிவிடுவார்.
“இடப்பெயர்ச்சி நேர வரைபை வரைக”
சொல்லி முடித்துவிட்டு இறங்கி நடந்துவருவார். எல்லோரும் அட் எ டைம் குனிவார்கள். போகும் வழியிலேயே முன் வாங்கு யாழ் இந்துக்காரன் கொப்பியை நீட்டுவான். சேர் பார்த்திட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார். கொஞ்சம் பின்னே வந்தால் இன்னொருத்தன் நீட்டுவான். ஒரு சின்ன யோசனைக்கு பிறகு அதே சிரிப்பு. இன்னும் கொஞ்சம் பின்னே வந்தால், ஏதோ கலியாண வீட்டு ரெஜிஸ்ரேஷனில கையெழுத்து வைக்கிற மாதிரி அத்தனை பெரும் சீரியஸா ரியாக்ஷன் கொடுப்பான். நிமிரவே மாட்டான். நம்ம வாங்கு நிலைமை இன்னும் சோகம். பக்கத்தில இருந்த மக்கரின் வரைபை பார்த்தால், பந்தை வானத்தில எறிஞ்சத பார்த்து அப்பிடியே கீறியது போல இருந்தது. கீர்த்தியின் கொப்பியில் வெறும் நேர்கோடு மட்டும் இருக்கும். கேட்டால் புவி ஈர்ப்பு மாறாதென்று விஞ்ஞான விளக்கம் குடுப்பான். மயூ என்கின்ற மயூரதன், நம்ம செட்டிலேயே செம குண்டன். அதே நேரம் செம மண்டையும். அவன் வரைபை பார்த்தால், முதலில் வெளிப்பக்கமாக வளைஞ்சு உச்சத்துக்கு போய் பிறகு உட்பக்கமாக வளைஞ்சு போய் மீண்டும் நேர அச்சை முட்டியிருந்தது. எனக்கென்றால் அது பிழை போல இருந்தது. நாங்களும் மண்டை என்று இந்த உலகுக்கு நிரூபிக்கவேண்டாமா? என்னுடைய வரைபு ஒரு சரிவான நேர்கோடாக இருந்தது. ஒரு டக் டிக் டோஸில் கீறியது தான். காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு குமரன் மாஸ்டர் சொன்னார்.
“நல்லா….…. தெரியுது”
சொதப்பிவிட்டேன் என்று தெரிந்தது. மயூவின் கொப்பியை அவரே போய் வாங்கிப்பார்த்தார். பார்த்திட்டு ஒரு புன்னகை. “நீ ஒரு மண்டைக்காய்” என்று சொல்லும் புன்னகை அது. அந்த புன்னகைக்காக பலர் தவம் கிடப்பார்கள் அப்போது.
சேர் எங்களை தாண்டி முன்னே போகிறார். அந்த பகுதி தேவதைகளின் கூடாரம். ஒன்றிரன்று பெண்கள் கொப்பி காட்டுவார்கள். மற்றைய பெண்கள் கால் நகத்துக்கு கியூடெக்ஸ் சரியாக அடித்திருக்கா என்று அந்த நேரம் தான் செக் பண்ணுவார்கள். தேவதைகளை நாங்கள் கணக்கு பண்ண வேண்டுமே ஒழிய அவர்களை கணக்கு பண்ண சொல்லக்கூடாது. ஆனால் குமரன் மாஸ்டர் அந்த இரண்டையும் செய்தார்!
இப்படி ஒரு ரவுண்ட் போய்விட்டு, குமரன் மாஸ்டர் மீண்டும் கரும்பலகைக்கு போய் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டு பன்ச் டயலோக் ஒன்று விடுவார்.
“தம்பியவை பௌதீகம் எண்டது ஒரு கடல் பாருங்கோ!”
**********
டியூஷன் கொட்டில்… யாழ்ப்பாணத்து கல்வியின் இருதயம் இது. இங்கே காலடி எடுத்து வைக்காமல் எந்த ஒரு யாழ்ப்பாண இளைஞனும் ஏஎல் தாண்டியிருக்கமாட்டான். இன்றைக்கு உலகம் பூரா பரந்திருக்கும் கணக்காளர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலை வல்லுனர்கள் முதற்கொண்டு சாதாரண முகநூல் புரட்சியாளர்கள் வரை எவருமே இங்கே படிக்காமல் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். ஸ்கோலர்ஷிப் பாஸ் பண்ணினால் தான் யாழ் இந்துவுக்கோ வேம்படிக்கோ நுழையலாம். அட்மிஷன் டெஸ்ட் பாஸ் பண்ணினாலும் அப்பன்காரனிடம் ஐயாயிரம் ரூபா இருந்தால் தான் சென்ஜோன்ஸ் சுண்டுக்குளியில் சேரலாம். இப்போது அது ஐம்பதாயிரம் என்கிறார்கள். ஆனால் எங்கள் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் அட்மிஷனுக்கு இது ஒன்றுமே தேவையில்லை. மாச மாசம் பீஸ் கட்டினால் போதுமானது. வருகை டாப்பு இல்லை. யூனிபோர்ம் இல்லை. ஒழுங்கான கிளாஸ் ரூம் இல்லை. ஆனால் அங்கே கற்பிக்கும் ஆசிரியர்களும் டூப்பு இல்லை. எங்கள் எல்லோருக்கும் வாழ்வழித்த, இன்றைக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களை படிப்பித்து சமூகத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்து டியூஷன் கொட்டில் தான் இன்றைக்கு நம்மட கொல்லைப்புறத்து காதலி.
************
“சண் காட்டும் ஆட்கள்” என்று ஒரு பிரிவு இருக்கிறது. எட்டு மணி டியூஷனுக்கு ஆறுமணிக்கே எழுந்து பேபி சோப் போட்டு தேய் தேயென தேய்த்து முகம் கழுவி, பின்னர் தமக்கையின் பெஃயார் அண்ட் லவ்லியை மூஞ்சிக்கு தப்பும் ஆகிருதிகள் இவர்கள். அந்த காலத்தில் ஒரு சீப்பு இருந்தது. தட்டையாக நடுவில் ஒரு சின்ன வளையம், அதற்குள் நடுவிரலை செருகி, அப்படியே உள்ளங்கையில் வைத்து மேவி இழுக்கலாம். இரண்டு காதுப்புற தலைமயிரையும் அப்பிடியும் இப்பிடியுமாக இழுத்து ஒதுக்கலாம். பிடரிப்பக்கம் இரண்டு புறமும் சேர்ந்து நடுவிலே ஒரு நேர்கோடு கீறும். நம்மட ஆளு இத அழகாக செய்வார்.
எங்கள் காலத்தில் பிரபுதேவா baggy ஜீன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய், குழாய் ஜீன்ஸ் பாஷன் வந்துவிட்டது. மேலே இருந்து கீழே வரை ஒரே சைஸ் குழாய் தான். டெனிம் எல்லாம் எவனாவது வெளிநாட்டில அண்ணன்காரன் இருப்பவன் மட்டும் போடுவான். இந்த ஜீன்சுக்குள் ஷேர்ட் இன் பண்ணுறது ஒரு லோங் ப்ரோசீஜர். தலைவர் என்ன செய்வார் என்றால், முதலில் பனியனை தன்னுடைய அப்பிள் பெண்டருக்குள் செருகுவார். அது கூட ஓகே. ஆனால் அடுத்ததாக ஷேர்ட்டையும் அங்கேயே செருகுவார். பின்னர் ஜீன்சை இழுத்து பெல்ட் போட, ஷேர்ட் அப்படியே உடம்போடு ஒட்டிக்கிடக்கும். தலைவர் திரும்பி இப்போது பின்பக்க ஷேர்ட்டை கொஞ்சமே வெளியே இழுத்துவிடுவார். இப்போது பார்த்தால் முன்னுக்கு மட்டும் ஷேர்ட் வண்டியோடு ஒட்டிக்கிடக்க, பின்னுக்கு பொங்கிப்போய் இருக்கும். இது ஸ்டைல். இதே போஸில் கண்ணாடிக்கு முன்னே நின்று இரண்டு கைகளையும் அகட்டி விரித்து, தலையை ஒரு ஆட்டு ஆட்டி, “தத்தளிக்கும் மனமே தத்தை தருவாளோ?” என்று முணுமுணுத்தபடி நான்கு கொப்பிகளையும் தூக்கிக்கொண்டு அண்ணர் புறப்படுவார். வகுப்பிலே முன் வாங்கில் இருப்பார்கள். கடைசி கிளாசில என்ன படிச்சம்? என்று வாத்தி கேட்கும்போது தடாலென்று எழுந்து நோட்ஸ் கொடுப்பார்கள். கொடுக்கும்போது பக்கத்து வரிசையில் இருக்கும் பெட்டைகளை பார்த்து சிரிப்பார்கள். கணக்கு கொடுத்தால் மட்டும் குனிந்த தலை நிமிராமல் ஏதோ ஐன்ஸ்டீன் யோசிக்கிற எபக்ட் குடுத்தபடி அப்பிடியே கொப்பியில் கிண்டிக்கொண்டிருப்பார்கள். இந்த சண் காட்டுற ஆட்களுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அவங்கள் ஒரு பொன்ஸ்!
அடுத்த கோஷ்டி காவாலி கோஷ்டி. இந்த கோஷ்டிக்கு ஷேர்ட் எல்லாம் இன் பண்ணுற பழக்கமே கிடையாது. ஷேர்ட் போட்டால் பின் பக்க அடிப்பக்கம் சோழமன்னனின் ஓலைச்சுவடி போல சுருண்டு போய் கிடக்கும். இவர்கள் ஏல் படிக்க ஆரம்பிக்கும்போது நான்கு பாடத்துக்கும் நான்கு கொப்பிகள் வாங்குவார்கள். முதல் வருஷம் நான்கு கோப்பி இரண்டு கொப்பியாகும். இரண்டாம் வருடம் எல்லாமே ஒரே கொப்பியில் நடக்கும். நான்கு கட்டு கொப்பி வாங்கினால், முதல் கட்டு பிசிக்ஸுக்கு, இரண்டாம் கட்டு கெமிஸ்ட்ரிக்கு. கடைசி இரண்டு கட்டும் டபிள் மட்ஸுக்கு. நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒற்றை முடிஞ்சுது என்று வையுங்களேன். பக்கத்தில இருக்கிறவனிடம் வெறும் ஒற்றை கேட்பார் நம்மட காவாலி. அவன் நடுவால கிழிச்சு கொடுக்க, அண்ணர் செம சீரியஸாக அதில எழுதுவார். அந்த ஒற்றை கொஞ்ச நேரத்தில் ரொக்கட்டாக மாறி சோதியர் எலக்ட்ரோனிக்ஸ் கணக்கில் மண்டை காய்ந்துகொண்டிருக்கும் சமயம் பார்த்து பின்னாலே விழும். யாழ்ப்பாணத்து “கொசப்பு கதைகள்” பலவற்றிய உருவாக்கிய இலக்கியவாதிகள் இந்த காவாலிகள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.
இதிலே மூன்றாவது வகை ஒன்று இருக்கிறது. அது தான் தானும் தன்பாடும் என்று இருக்கின்ற உருப்படாத பயலுகள். “படம் காட்டுதல் நன்றன்று” என்ற வள்ளுவர் மொழிக்கிணங்க நடப்பவர்கள். ஆண்டு பத்தில் தைத்த ஜீன்சை, இயலுமான வரை கீழே இறக்கி ஏஎல் முழுக்க போடுவார்கள். அதுக்கு மேலே ஒரு ஷேர்ட்டையோ டீஷேர்ட்டையோ போட்டபடி, ஒரு பாட்டாவையும் மாட்டிக்கொண்டு அமைதியாக வகுப்புக்கு வருவார்கள். இவர்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இவர்களில் கெட்டிக்காரர்களும் இருப்பார்கள். கிலோ என்ன விலை கேசும் இருக்கும். யார் என்ன என்று கூட படிக்கிறவனுக்கே ரிசல்ட் வந்தா பிறகு தான் தெரியும். இந்த ஜென்டில்மேன்களுக்கு பெடடைகளை பார்த்தால் பீலிங் இராதா என்று கேட்கலாம். அதெல்லாம் அளவுக்கதிமாக இருக்கும். இருந்தது! பட் எந்த பெட்டைகளு அவர்கள் பீலிங்கை விளங்கிக்கொள்ளுவதில்லை. பொதுவாக பெட்டைகள் “சண் காரரை” கண்டு சிரிக்கும். காவாலிகாரனிடம் விழும். இதை தான் Good men always end up last என்று சொல்வார்களோ தெரியாது.
இப்போது பெட்டைகள் செக்ஷனுக்கு போவோம். முதலில் “செடில் காட்டும் பெண்கள்”. அநேகமான அழகு பெண்கள். திமிர்களோடு கூடவே திமிரும் சேரும். இவர்கள் பொதுவாக சுண்டுக்குளி ஆட்களாக இருப்பார்கள். அதற்காக சுண்டுக்குளியின் அத்தனை பெண்களும் தேவதைகள் என்று சொல்வதற்கில்லை. செம மொக்கை பிகரெல்லாம் சுண்டுக்குளியில் படிக்கும். ஆனாலும் அந்த பள்ளிக்கூடத்துக்கு போன அடுத்த நாளே அந்த பிகரும் செடில் காட்ட தொடங்கிவிடும். இவர்களில் சிலர் “போப்ஃட்” அடித்திருப்பார்கள். நடையில் ஒரு நளினம் இருக்கும். நடக்கும் போது உடல் ஒருபக்கம் உலாஞ்சும். முகம் உட்பட எல்லாமே பளிச்சென்று இருக்கும். சின்ன புன்னகை கூட ரெடிமேட்டா குடுப்பாளவை. அந்த அழகு, திமிர் எல்லாமே சேர்ந்து இயல்பாக இவர்களை செடில்காரிகள் ஆக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிலது கொழும்பில் இருந்து வந்திருந்தால் கதை கம்மாஸ். ஜீன்ஸ் டீஷேர்டோட எங்கட பாட்ச்சில் ஒருத்தி. நம்ம ஜெகன் போய் இங்கிலீஷ்ல கூட கதைச்சு பார்த்தான். ம்ஹூம். செடில் என்றால் அப்பிடி ஒரு செடில். அடியேன் இந்த விஷயத்தில் செம அலெர்ட். நம்மை எல்லாம் பக்கத்து வாங்கில இருக்கிற பார்த்திக்கே சரியா தெரியாது. பெட்டைகளா தெரிஞ்சு வச்சிருக்கபோகுதுங்க? கதைச்சு எல்லாம் நோண்டி ஆகி டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டேரயிட்டா காஷ்மீர் போய் டூயட் பாட ஆரம்பிச்சிடுவோம்.
“ச்சா .. அவள் நல்ல பெட்டைடா” என்று ஒரு ரக பெண்கள் இருக்கிறார்கள். சிம்பிளான பெண்கள். முகத்துக்கு பொன்ஸ் பவுடர் மட்டும் போடுவார்கள். அது கூட, காதுப்பக்கம் சரியாக துடைக்க மறந்து போய் வருவார்கள். தலைக்கு இன்னமும் நல்லெண்ணய் தடவுவார்கள். புரட்டாதிசனி, கௌரி காப்பு டைம் என்றால் தலைக்கு முழுகி, வெறும் கிளிப் போட்டு தலைமயிர் ஈரலிப்பாக தொங்கவிட்டு வருவார்கள். நேர் பின்வாங்கில் இருந்தால் சீயாக்காய் வாசம் தூக்கும். இவர்கள் அனேகமாக உடுப்பது பாவாடை சட்டை. இவர்களுக்கென்று அப்போது வலு பேமஸான ஒரு ஸ்டைல் சட்டை இருந்தது. சாதாரண சீத்தை துணியில் தான் சட்டை தைத்திருப்பார்கள். சட்டையின் பாவாடைப்பகுதி குடைவெட்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். மேற்பகுதி வெறும் ப்ளைய்ன் ப்ளவுஸ் தான். ஆனா அங்கே தான் ஒரு சின்ன ட்விஸ்ட். பிளவுஸின் பின் பக்கம் ஒரு குட்டி துணியாலேயான ரிபனில் கட்டப்பட்டிருக்கும். பின்னுக்கு மட்டும்தான். அணியும் போது அது இடுப்பின் பின்பகுதியில் வந்துநிற்கும். Just imagine. அப்படி இழுத்து கட்டும்போது, ப்ளவுஸ் சிக்கென்று உடலின் வடிவத்தோடு ஒட்டி நிற்க, கீழே குடைவெட்டு பாவாடைகள் காற்றில் பறக்க … அவளுக்கும் பதினெட்டு. பாக்கிற பாவிக்கும் பதினெட்டு. காந்திமதி கூட ஹன்சிகா மாதிரி இருக்கும் பருவம் அது. கமறும்.
இவ்வளவு இண்டரஸ்டிங்கான கரக்டர்ஸ் எல்லாம் கூடும் இடம் தான் கொட்டில். அதிலும் நாங்கள் போனது சயன்ஸ் ஹோல். அது விஞ்ஞான மாணவர்களின் மெக்கா. யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதியில் இருந்தது. கஸ்தூரியார் வீதியையும் பெருமாள் கோயில் வீதியையும் இணைக்கும் ஓரளவுக்கு நீண்ட வீதி அது. அந்த வீதி நெடுகவும் இரண்டு புறங்களிலும் சனி ஞாயிறு என்றால் சைக்கிள்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். கிளாஸுக்கு போகும்போது அவசரத்தில் அங்கே இங்கே சைக்கிளை நிறுத்தமுடியாது. செக்கி என்று ஒன்றிரண்டு பேர் நிற்பார்கள். இயக்கப்பிளான் காட்டுவார்கள். சைக்கிளை சரியாக நிறுத்தாவிட்டால் திட்டுவிழும். ஸ்டாண்ட் வேறு ஒழுங்காக நிற்காமல் விழும். அவசரத்தில் சைக்கிளை சரித்துவிட்டால், அப்படியே சீட்டுக்கட்டு போல சைக்கிள்கள் சரியும். பூட்டினால், பூட்டு ஓட்டைக்குள் போகாமல் விலகிப்போகும். பெல் மூடியை கழட்டிக்கொண்டு போகவென்றே ஒரு கூட்டம் அலையும். சில பேர் தன்னோட “சரக்கின்ற” சைக்கிளுக்கு பக்கத்திலேயே தானும் சைக்கிள் விடோணும் என்று அடம் பிடிப்பான். இந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்காது.
இந்த சிக்கல் எல்லாவற்றையும் தாண்டி டியூஷன் வாசலுக்கு போனால் அங்கே விஸா செக் பண்ணுவார்கள். அதான் டியூஷன் கார்ட். அதுவும் மாச தொடக்கம் என்றால் மோப்பநாய் ரேஞ்சுக்கு நிற்பார்கள். கார்ட் கொண்டுவரவில்லை என்றால் கதை கந்தல். அருள் அண்ணை, கிட்டத்தட்ட கலாநிதி மாறன் போன்று பிஹேவ் பண்ணுவார். இவர்களை தாண்டி வகுப்புக்கு போனால், ஐநூறு பேர் கொள்ளகூடிய கொட்டில் நிறைந்து வழியும். இடம் இருக்காது. ஒரு பக்கம் பத்திருபது கொங்கிரீட் கல்லை அடுக்கி, அதை மேடை என்று சொல்லியபடி வாத்தியார் நிற்பார். வரிசைக்கு வாங்குகள், மனிதத்தலைகள். ஒரு நீண்ட கரும்பலகை, டஸ்டர், சோக்கட்டிகள், நிறைய சுண்ணாம்பு என வகுப்பு ஏற்கனவே ஆரம்பித்திருக்கும். அரக்க பரக்க பின் வாங்கிலே போய் நெருக்கி இருந்து, ஏதோ குத்துதே என்று எழுந்தால் … சர்க்க்க்..
பனஞ்சிராய் வாங்கில் இழுபட்டு ஜீன்ஸ் கிழிந்து போயிருக்கும்.
*************
சயன்ஸ் ஹோலில் யாரிடம் படிப்பது என்பது தான் பெரும் ரிசெர்ச். ஆளாளுக்கு குழப்புவார்கள். சோதியர் சுத்துவார் என்பார்கள். குமரன் பம்மாத்து என்பார்கள். மகாதேவாவிடம் டீப் காணாது என்பார்கள். மணியம் சிம்பிள் அண்ட் ஸ்வீட் என்பார்கள். எண்டர் பண்ணுறவன் எல்லாம் வெக்டரிடம் தான் படிப்பார்கள் என்பார்கள். இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு, மாஸ்டர்மாரை தெரிவு செய்யவேண்டும். சிலவேளைகளில் ஒரே மாஸ்டரிடம் வேறு வேறு டியூஷனில் வேறு வேறு செக்ஷனும் படிப்பதுண்டும். வேறு வேறு பட்சிலும் படிப்பதுண்டு.
முதல் நாள் சோதியரின் வகுப்பு. பிஸிக்ஸ் மண்டைக்காய்களுக்கான பாடம் என்றார். பக்கத்தில் இருந்த கீர்த்தி என்னை பாவமாய் பார்த்தான். திடீரென்று மிக்ஸரை எடுத்து மூடியில போட்டு சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கோணும் என்று ஒரு கணக்கை எடுத்துவிடுவார். நித்தியானந்தர் சபைல ரெடியா ஒருத்தன் எழுந்து போய் பாய்ஞ்சு பாய்ஞ்சு யோகா செய்யிறது போல, இங்கேயும் ஒரு யாழ் இந்து காரன், ஸ்டைலாக எழுந்து போய் போர்டிலே கணக்கை செய்வான். செய்துவிட்டு ரெண்டு கோடு வேறு கீழே போட்டு கடுப்பேத்துவான். பெட்டைகள் வேறு அவன் பெரும் மண்டை என்று நினைத்திருக்குமோ என்னவோ? எனக்கு செம கடுப்பு. கணக்கு வேற சரி வரேல்ல. ஸோ அன்றையோட சோதியருக்கு ஜூட்.
மகாதேவா மாஸ்டரின் தமிழே மிரட்டியது. தூய தமிழில் அறுத்துறுத்து தான் பேசுவார். நோட்ஸ் கூட அப்பிடித்தான் இருக்கும். அதிகம் டீப்பாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒரு முறை ஓர்கானிக் கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டிருக்கிறார். அன்றைக்கு. பென்சீன் பாடம். அதுக்கு ஒரு அறுகோணம் கீறி உள்ளே ஒரு வட்டம் போடவேண்டும். இவர் நோட்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போது முன்னே இருந்த பெண் அறுகோணத்தை கீறிவிட்டு வட்டத்தை மறந்துவிட்டாள். இதைப்பார்த்த மகாதேவா சேர் சொன்னார்.
“ஐசே … நீர் உள்ளே ஒன்றும் போடவில்லை!”
வெக்டரிடம் போனால், எல்லாமே கயிலை காட்சி போன்றே இருக்கும். கணக்கு நிறுவுகிறார் என்று தெரிகிறது. சமப்படுகிறது. ஆனா எப்பிடி நடக்குது என்று மட்டுமே விளங்கேல்ல. இது ஏன் எதற்கு எப்படி என்ற டவுட்டிலேயே ரெண்டு மூன்று கிளாஸ் போயிருக்கும். ஒரு நாள் வெக்டரின் மகனே என்னிடம் வந்தான்.
“ஏதாவது விளங்குதா?”
“கணக்கு மட்டும் சாடையா விளங்குது .. நிறுவல் ஒரு மண்ணுக்கும் விளங்குது இல்ல.. உனக்கெப்பிடி?”
“கணக்கே விளங்குதில்ல .. அப்பர் ஆக மோசம்”
“ஓ .. அப்ப என்ன செய்யுறது?”
“பேசாமா கிளாசை கட் பண்ணி சந்திரன் மாஸ்டரிட்ட போவம் .. ”
“அவரிட்ட விளங்குமா மச்சான்?”
“சும்மா தண்ணி மாதிரி இருக்கும்”
அப்போதும் கூட இந்த டியூப்லைட்டுக்கு விளங்கவில்லை. சந்திரன் மாஸ்டரும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கணித ஆசிரியர் என்றே முதலில் நினைத்தேன். அதன் பிறகு அவர் வகுப்புக்கு போன பின்னர் தான் எல்லா விஷயமும் விளங்கியது. அது வேண்டாம் இங்கே.
நான் எந்த கிளாஸ் கட் பண்ணினாலும் குமரன் மாஸ்டரின் பிஸிக்ஸ் மாத்திரம் கட் பண்ணுவதில்லை. அதற்கொன்றும் பௌதீகத்தின் மீதிருந்த அளப்பரிய காதல் அல்ல காரணம். குமரன் மாஸ்டரிடம் தான் ஊருலகத்தில் உள்ள அத்தனை பெட்டைகளும் படிக்க வரும். அதுவும் கணிதப்பிரிவில் காய்ந்து கிடந்த எங்களுக்கு பயோ பிரிவில் இருந்த தேவதைகள் வந்துசேரும் ஒரே வகுப்பு குமரன் மாஸ்டரின் வகுப்பு தான். நாங்கள் தேவதைகள் இருக்கும் செகஷனுக்கு நேர் பின்னே போய் இருப்போம்.
அதிலும் ஒருத்தி! வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணான மேனகை. நடந்து போனால் என்றால் தூர நின்று பார்க்கும் எங்களுக்கு ஏதோ செய்யும். இடம்பெயர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு நாவற்குழியால் நடக்கும்போதும் அவளும் பக்கத்தில் உங்களோடே சேர்ந்து சைக்கிள் உருட்டிக்கொண்டு பேசிக்கொண்டு வருகிறாள் என்று நினைத்துப்பாருங்கள். நடக்கும்போது பசியோ பயமோ எதுவுமே தெரியாது. she was like … பார்த்தீர்களா.. ஆ ஊ என்றால் பக்கம் பக்கமாக எழுதும் ஆள் நான். அவள் என்றவுடன் ஸ்டக்காகி நிக்கிறனே. That’s her.. A refreshing beauty. எங்கள் பாட்சில் இருந்த அத்தனை பெடியளும் அவளோடு தான் “தென் மேற்கு பருவக்காற்று” டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனா பாடின எல்லாருக்குமே கடைசில மாட்டினது என்னவோ கருத்தம்மா தான்! அந்த மேனகை எங்கள் எவருக்கும் சிக்கவே இல்லை. வழமை போல கடைசியில் ஒரு பொன்ஸ் அந்த தேவதையை லவட்டிவிட்டான். நாமளும் வழமை போல தேவதாசுக்கு பக்கத்து வார்டில கொஞ்ச நாளைக்கு அட்மிட் ஆகியிருந்தோ என்று வையுங்களேன்!
இந்த காதல் விஷயத்தில் நாங்கள் வீக்கு என்றாலும், நம்ம வாத்திமார் எம காதகர்கள். சயன்ஸ்ஹோலில் இப்படி திருவிழா போல வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போது, யூனிவேர்சல் என்று ஒரு சப்பாணி டியூட்டரியும் நடந்தது. அங்கே ஒரு கெமிஸ்ட்ரி வகுப்பு. ஒரு நாற்பது மாணவிகள் சேர்ந்து ஒருவரிடம் படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாமே கொஞ்ச நாள் நல்லாவே போனது. ஆனால் சில மாதத்தில் ஒருத்தன், அந்த வகுப்பில் தானும் படிக்கப்போகிறேன் என்று அடம்பிடித்துக்கொண்டு போய் சேர்ந்துவிட்டான். நாற்பது மாணவிகள், அதிலே ஒரு இருபது தேவதைகள், பத்து ரம்பை, ஒரு மேனகை கூட தேறும். அந்த செட்டில் இவன் தனியே படிக்கிறான் என்பதில் எங்கள் எல்லோருக்கும் செம கடுப்பு. ஷேர்ட்டை வேறு பெண்டருக்குள் இன் பண்ணும் குரூப்பை சேர்ந்தவன் அவன். நாற்பதில் ஒருத்தியையாவது இவன் மாட்டுவான் என்று நம்பியிருந்தோம். ஆனால் நடந்தது வேறு. இவன் கடைசி வரை ஒரு ஆணியை கூட அசைக்கவில்லை. ஆனால் அந்த வாத்தியார் ஒரு மாணவியை காதலித்து திருமணமும் செய்துவிட்டார். இதே ட்ரெண்டில் இவரை பின்பற்றி இன்னும் இரண்டு வாத்திமார் காதலித்து திருமணம் முடிக்க, லூசு கேசுகளான நாங்கள் படிச்சு எண்டர் பண்ணீட்டு போய் கேட்டுப்பார்ப்பம் என்று ப்ளான் பண்ணிகொண்டிருந்தோம்.
கொட்டிலில் படிப்பு, காதல், கொசப்பு சம்பவங்களுக்கு மத்தியில் பாட்டு கச்சேரியும் இடம்பெறும். ஒரு முறை அதே மேனகையை இம்பரஸ் பண்ணவென்று நானே “பொன் வானில் மீனுறங்க” பாட ஆரம்பித்து, “கார்கால மின்னல் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா” என்று பாடும்போது மூமேல் நோட்டில் மூக்கு பிய்ந்து இரண்டாகிவிட்டது! மேனகை அதுக்கு பிறகு சான்ஸே இல்லை என்று நினைத்தேன். ஆனால் குமரன் வாத்தியார் தானும் பாடுவேன் என்று அடம்பிடித்தார். அவருடைய ரெடிமேட் பாட்டு “என்னவளே”, அடுத்தது “நிலா காய்கிறது”. இரண்டையும் மூக்கு புடைக்க பாடுவார். இந்த வீடியோவில் மூக்கு புடைக்கிறது. பாருங்கள்.
&&&&&&&&&
எங்களுக்கு முன்னர், எங்கள் காலத்தில், ஏன் இப்போதும் கூட கொட்டில்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். கொட்டில்களில் வெறும் வியாபாரம் தான் என்பார்கள். “இந்த பாலும் புளிக்கும்” ரக விமர்சனங்கள் அவை. கொட்டில்கள் என்னைக்கேட்டால் யாழ்ப்பாண கலாச்சாரத்தின் இன்றைய இன்றியமையாத விஷயம் ஆகிவிட்டன.
கொட்டில்களில் முதன்மையான விஷயம், யாழ் மாவட்டத்தின் முக்கிய திறமைசாலிகளின் பெரும்பான்மையானோர் அங்கே வருவார்கள். எந்த பாடசாலை என்றில்லை. யாழ் இந்து, கொக்குவில் இந்து, வேம்படி, இந்து மகளிர், சென்றல், சென்ஜோன்ஸ், சுண்டுக்குளி தொடங்கி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி, மகாஜனா மாணவர்கள் கூட வந்து படிப்பார்கள். சாவகச்சேரி, நெல்லியடியில் இருந்து கூட வருபவர்கள் உண்டு. இதனால் படிக்கும்போதே ஓரளவுக்கு எங்கள் நிலைமை என்னவென்று தெரிந்துவிடும். தங்கள் தங்கள் பள்ளிக்கூடங்களில் கடும் “மண்டைக்காய்களாக” இருந்திருப்போம். ஆனால் கொட்டிலுக்கு வந்து ஏனைய மாணவர்களை பார்க்க தான் நம்ம சோகம் நல்லா தெரியும். இந்த ஐநூறு ஆட்களில் இருபது தானே எண்டர் பண்ணும்? எப்பிடி கூட்டிக்கழிச்சாலும் நாம நூறுக்குள்ளே கூட வரமாட்டமோ? என்று அடி வயிற்றில் அலாரம் அடிக்கும். அந்த அலார்மில் தூக்கம் வராமல் இரவு முழுதும் புரள்வீர்கள். நிஜத்தை கொட்டில்கள் ரிசல்ட் வரும் முன்னமேயே முகத்தில் அடித்துவிடும்.
கொட்டில்களில் இருக்கும் இன்னொரு விஷயம், ஆசிரியர்களை நாங்கள் தெரிவு செய்யலாம். அங்கே ஒருவித competition இருக்கிறது. ஆசிரியர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் மாணவர்கள் இன்னொரு ஆசிரியரை தேடி போய்விடுவார்கள். அதனால் கற்பித்தலில் ஒரு தரம் எப்போதுமே இருக்கும். பாடசாலைகளில் இது முடியாது என்றில்லை. ஆனால் யாழ்ப்பாண சூழலில் எல்லா பாடசாலைகளிலும் இது முடியாத காரியம். அண்மையில் சயன்ஸ் ஹோல் உடைந்து விட்டதாகவும், குமரன் மாஸ்டரும் இன்னும் சிலரும் பிரிந்து புதிதாக ஒரு கொட்டில் ஆரம்பித்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். போட்டி இருக்கும்போது தான் தரமும் அதிகரிக்கும்.
ஒரு வகுப்பு அனேகமாக ஒரு மணிநேரம் நடக்கும். வாத்தியார் அதுக்கு பத்து நிமிஷம் பிந்தி வருவார். ஐம்பதாவது நிமிஷத்திலேயே பின் வரிசைக்காரன் கொப்பியை அடித்து மூட தொடங்குவான். வாத்தியார் “எழுதுங்கடா .. இன்னும் கொஞ்சம் தான்” என்று தொடருவார்
“வெப்பக்கடத்தாறு என்பது அலகு குறுக்குவெட்டுப்பரப்புள்ள கோலிற்குக் குறுக்கே அலகு ….”
“சேர் … ப்ளீஸ்..”
சொல்வதையும் கேட்காமல் பெடியங்கள் சட சட வென கொப்பிகளை மூடி சத்தம் எழுப்புவார்கள். இதிலே பெண்கள் கூட இணைந்துகொள்வார்கள். சத்தம் பின் வரிசையில் இருந்து ஆரம்பித்து சட சடவென முன்னே கொஞ்சம் கொஞ்சமாக வரும். இந்த இடைவெளியில், வேளைக்கே ஓடினால் சைக்கிளை நெரிசல் இல்லாமல் எடுக்கலாம் என்று பத்து பதினைஞ்சு பேரு பாய்ஞ்சுடுவாங்கள். நம்ம பொன்ஸ்காரன் இன்னமும் புட்ரூலர் வைச்சு தலையங்கத்துக்கு சிவத்த லைன் அடிச்சு நோட்ஸ் எழுதிக்கொண்டிருப்பான். பெட்டைகள் நடராஜா கொம்பாஸ் பெட்டிக்குள் பேனை பென்சில்களை வைத்து மூட தொடங்குவார்கள். “செக்கி” ஒருத்தன் சிதறி அடிச்சு ஓடுறவனை சரிப்படுத்த ரெடியா பின்னாலே நிற்பான். இதுக்கு மேலே வச்சிருக்கேலாது எண்டு வாத்தியார் திரும்பிப்பார்த்து சொல்லுவார்.
“… வெப்பநிலை படித்திறன் என்பதை … “
“சேர் …
“அடுத்த வகுப்பிலே பார்ப்பம் .. ஓடுங்கடா .. ஒடுங்க!”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மறதிக்கு மருந்து மாஸ்தரிண்ட பிரம்புசந்திரன் மாஸ்டர்ஏனைய கொல்லைப்புறத்து காதலிகள்


கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக ...











.jpg)

icon near each post or send an email to