நட்சத்திர பக்கம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : May 17, 2012, 4:25 am
இந்த வார நட்சத்திரம் - ஓர் அறிமுகம்
Tamil Manam Star
தாரா
நான் தாரா. கணவர் சிவா மற்றும் இரண்டரை வயது மகள் புகழ்மதியுடன் வட அமெரிக்காவில் வாசிங்டன் டிசி பகுதியில் வசிக்கிறேன். 2004 ஆ ம் ஆண்டு ... அது என் எழுத்துலகில் ஒரு பெரிய திருப்புமுனை என்று சொல்லலாம். மனதில் அதிவேகமாகப் பெருகி மலை போல் குவிந்து கிடந்த என் எண்ணங்களை வடித்துக் கொட்ட, எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் பத்திரிக்கை வாய்ப்புகள் போதவேயில்லை. அப்போது தான் வலைப்பதிவுகள் பற்றி கேள்விப்பட்டேன். \"சிறகுகள் நீண்டன\" என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கி தமிழ்மணத்தில் இணைந்தேன். உண்மையிலேயே என் எண்ணச் சிறகுகள் நீண்டு பறப்பதற்கு ஒரு திறந்த வான வெளி கிடைத்தது. நினைத்த போதெல்லாம் எழுதமுடிந்தது. அதனை உடனே படிக்கவும் பலர் இருந்தார்கள். என்னுடைய அனுபவங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அவற்றை மற்றவர்களுடன் என் வலைப்பதிவில் பகிர்ந்துகொள்வது எனக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு! கடந்த இரண்டு வருடங்களாக குழந்தையின் வரவினால் அதிகம் எழுத முடியவில்லை. இந்த ஆண்டு அன்னையர் தினத்தை ஒட்டி எனக்கு நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பின் குதூகலத்துடன் மீண்டும் வலை பதியத் தொடங்குகிறேன்.

இந்த வார நட்சத்திர இடுகைகள்
எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான்.  ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை.  பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன்.   அப்பா தான் ...மேலும் வாசிக்க
எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான்.  ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை.  பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன்.   அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார்.  அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  புகழ்மதி வியக்கும்படி அவளே எதிர்பார்க்காத வண்ணம் அவளிடம் அந்தச் சொத்தை ஒப்படைக்கப் போகிறேன் சில வருடங்கள் கழித்து!

மீண்டும் தாய்மையின் சிறப்பைப் பற்றி தொடங்கிவிட்டீர்களா என்றும், ஏன் இந்த "பில்ட் அப்"?  அப்படி என்ன சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் பலர் கேட்பது புரிகிறது.

என் பென்சில் சேகரிப்பில் ஒரு பகுதி
என் "பென்சில் சேகரிப்பு" பற்றித் தான் நான் குறிப்பிடுகிறேன்!  மூன்று நாட்களாக தாய்மை, புத்தகங்கள், தொழிநுட்பம் என்று எழுதி சற்று அலுத்துவிட்டது.  ஒரு மாற்றத்திற்காக என்னுடைய பள்ளி கால "hobby" ஆன பென்சில் சேகரிப்பை பற்றி எழுதலாமென்று தோன்றியது. "Hobby" என்பதற்கு தமிழில் வார்த்தை தேடியபோது, "மகிழ் பணி", "விருப்பக் கலை" என்ற இரு வார்த்தைகள் கிடைத்தன.  இதில் "விருப்பக் கலை" எனக்குப் பிடித்திருக்கிறது.  அதே போல் பென்சில் என்பதற்கு "கரிக்கோல்" என்ற தமிழ் வார்த்தையையும் கண்டறிந்தேன்.

பொதுவாக அஞ்சல் தலைகள், நாணயங்கள் போன்ற சேகரிப்பே பிரபலமான விருப்பக் கலையாக இருந்தது.  நான் ஏன் பென்சில்களை சேகரித்தேன் என்பதற்கு என்னிடம் சரியான காரணம் இல்லை.
ஆறாவது, ஏழாவது படிக்கும்போதெல்லாம், அந்த மஞ்சல் நிற "நடராஜ்" பென்சில்களையே உபயோகித்து அலுத்துவிட்டது.  அப்பா நிறைய பயணங்கள் செல்வார்.  போகும் இடத்தில் எல்லாம் ஏதாவது வித்தியாசமான பென்சில்களைப் பார்த்தால் எனக்காக வாங்கி வருவார்.  அப்படியே சேகரிக்கத் தொடங்கினேன்.   சும்மா பென்சில்களை வாங்கி வாங்கி பெட்டியில் குவித்து வைத்திருந்த எனக்கு, அப்பா தான் அவற்றை எப்படி   பென்சில்களின் அளவு, பயன், வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி, பிரித்து அடுக்கி வைப்பது என்று கற்றுக்கொடுத்தார்.  எப்படி இதைச் செய்தோம் என்பதக் காட்டுவதற்கு சில புகைப்படங்களை இங்கே செருகியிருக்கிறேன்.

தடிமனான பென்சில்கள்
மெல்லிய பென்சில்கள்





வளையும் பென்சில்கள் 




வளையும் பென்சில்கள்


















வட்டம், முக்கோணம், சதுரம், ஆறுகோணம், முட்டை வடிவ பென்சில்கள் 


கல்வி சார்ந்த பென்சில்கள் - (மேலிருந்து கீழ் வரிசையாக) ABCD பென்சில், வாய்பாட்டு பென்சில், யோகா பென்சில், இராமாயணம் படக் கதை பென்சில், பன்னாட்டு தேசியக் கொடிகள் பென்சில்






















பயன்/உபயோகத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பென்சில்கள் - கணக்கர்கள் பயன்படுத்தும் பென்சில்,  சுறுக்கெழுத்து பென்சில்கள், வரை கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், ஸ்டெனோ பென்சில்கள்

 சில சமையம் நான் பள்ளிக்கு உபயோகிக்கும் பென்சில்கள் தொலைந்துவிட்டால் என் சேகரிப்பில் இருந்து ஒரு பென்சிலை எடுத்து சீவிக்கொண்டுச் செல்வேன்.  அதனால் அவ்வப்போது என் சேகரிப்பில் பென்சில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்தும் இருக்கிறது!  அக்கா திருமணமாகி அமெரிக்கா சென்றபின் என் பென்சில் சேகரிப்பு, பன்னாட்டுச் சேகரிப்பாக மாறியது.

சிறு வயதில் தொடங்கிய என் பென்சில் சேகரிப்பு, கல்லூரி இறுதி ஆண்டு வரை ஆர்வமாகத் தொடர்ந்தது.  அதன் பின் நான் சேகரித்த எல்லா பென்சில்களையும் ஒரு பெட்டியில் போட்டு அலமாரியில் வைத்துவிட்டேன்.  கடைசியாக எண்ணிய போது கிட்டத்தட்ட 300 பென்சில்கள் இருந்தன.

கல்லூரி இறுதுயாண்டிற்கு பின், மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று வாழ்க்கை ஓடியதால், பெட்டியில் போட்டு மூடிவைத்த பென்சில் சேகரிப்பு அப்படியே இருந்தது.  இப்பொழுது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவை எழுதுவதற்காக அந்தப் பெட்டியை தூசி தட்டி திறந்தபோது, அப்பாவின் நினைவால் கண்கள் கசிந்தன... எத்தனை நாட்கள் அந்தப் பென்சில்களை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும் சுவாரசியமாகப் பொழுது போக்கியிருக்கிறோம்?!

விருப்பக் கலைக்கெல்லாம் நேரமில்லை என்று பலர் அதைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை.  ஆனால் விருப்பக் கலையில் ஈடுபடுவது  குடும்பத்துடன் தரமான நேரம் செலவிட ஒரு நல்ல வழி.  எனக்கும் அப்பாவுக்கு உள்ள பாசப் பிணைப்பிற்கு இந்த பென்சில் சேகரிப்புக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 

ஒரு முறை என் அலுவலகத்தில் ஒரு விருந்து கூட்டத்தின் போது எல்லோரும் தங்களைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசியமான செய்தியை பறிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டோம்.  நான் என்னுடைய முறை வந்த போது, "நான் பென்சில்கள் சேகரிக்கிறேன்" என்று சொன்னேன்.  சிலர் "அப்படியா" என்று ஆச்சரியப்பட்டார்கள். இது முடிந்து பல நாட்கள் சென்றுவிட்டது.  ஒரு நாள் காலை என் அலுவலக மேசையில் இரண்டு அழகான பென்சில்களும், அதனுடன் ஒரு சிறு குறிப்பில், "நீங்கள் பென்சில்கள் சேகரிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.  உங்கள் சேகரிப்பில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று எழுதியிருந்தது.  இன்று வரை அது யார் என்றே எனக்குத் தெரியாது!

நானும் அப்பாவும் உருவாக்கிய இந்த பென்சில் சேகரிப்பை மேலும் விரிவாக்கி, அதற்கு அடுத்த வாரிசாக புகழ்மதியை நியமிக்க வேண்டும்.  என் விருப்பக் கலையின் மீது நான் மறந்திந்த ஆர்வத்தை மீட்டெடுக்க உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி!















show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis ...மேலும் வாசிக்க

"I have always imagined that paradise will be a kind of library" - Jorge Luis Borges

  சொர்க்கம்(Paradise/Heaven) என்பது இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அழகான மகிழ்ச்சிகரமான ஒரு பிரதேசம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இவர் எந்த அளவு புத்தகங்களை நேசித்திருந்தால் அந்த மிக மகிழ்ச்சிகரமான பிரதேசம் ஒரு நூலகம் போல் இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார்?!  இதைப் படித்ததும் என் தலையில் நானே ஒரு குட்டுப் போட்டுக்கொண்டேன்!  இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக சொர்க்கம் என்றால் அழகிய சோலைவனம், நீர்வீழ்ச்சி, பறவைகள், தேவதைகள், அருசுவை உணவு - இவை தான் நினைவுக்கு வருகிறது!  ஒவ்வொருவருக்கும் எது அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்து தான் சொர்க்கத்தைப் பற்றியதான அவர்களுடைய கற்பனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என் கைகளுக்காகவே படைக்கப்பட்ட ஒரு பொருள் புத்தகம் என்பது போல் எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனே திரிந்துகொண்டிருப்பேன். அம்மா போடும் சூடான பக்கோடாவை சுவைத்துக்கொண்டு புத்தகங்களை மேய்வது, இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே சில நிமிடங்கள் புத்தகம் படித்துவிட்டு அப்படியே தூங்கிப்போவது, இரயிலில் செல்லும்போது சன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு புத்தகம் படிப்பது, படித்து முடித்த புத்தகத்தை தோழிகளிடம் கொடுத்து அவர்களிடம் வேறு புத்தகம் வாங்கிப் படிப்பது என்று சுகமான புத்தக அனுபவங்கள் நிறைய இருந்தது. எங்கள் வீட்டில் அப்பாவின் அறையிலும், முன்னறையிலும் பெரிய அலமாரிகளில் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆனால் கடந்த பல வருடங்களாக எனது புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்து விட்டது.

இப்பொழுதெல்லாம் எனக்கு வேண்டியதை இணையத்திலேயே படித்துவிடுகிறேன். பற்றாததற்கு, இப்போது மின் புத்தகங்கள், amazon kindle, Apple ipad போன்ற நவீன வாசிப்பு வசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சு புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது.  சமீபத்தில் ஒரு கிருத்துவத் திருமணத்தில், திருமணம் நடத்தி வைத்தப் பாதிரியாரின் கையில் பைபிளுக்குப் பதிலாக "ஐ பாட்" இருந்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்!  ஒரு புனித நூலுக்கே இப்படி ஒரு நிலமையிருக்கும் போது, எதிர்காலத்தில் அச்சு புத்தகங்களே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் தோன்றுகிறது.

என் இரண்டரை வயது மகள் புகழ்மதிக்கு புத்தகத்தின் கடைசி பக்கத்தைத் திருப்பினால் அது புத்தகத்தின் முடிவு என்று புரியவில்லை!  கடைசி பக்கத்தைத் திருப்பிய பிறகும் "அடுத்த பக்கம் திருப்பு" என்று அடம் பிடிக்கும் அவளிடம், இன்னும் சில வருடங்களில், புத்தகப் பக்கங்களைத் திருப்பும் இந்தப் பிரச்சினையே உனக்கு இருக்காது என்று எப்படிச் சொல்வேன்?!


புதிய தொழில் நுட்பங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கும் போது, அதனுடன் மல்லுக்கு நிற்க முடியவில்லை.  முன்பெல்லாம் எங்கேயாவது சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தால், ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது வழக்கம்.  இப்போது கைகள் தானாக ஐபேடை(ipad) தேடுகின்றது மின் அஞ்சல், முகப்புத்தகம் அல்லது மின் நூல்கள் படிக்க!  புத்தகப் பக்கங்களைத் திருப்பும் அந்த உணர்வை கூட இழக்கவேண்டியதில்லை ஐபேடில்! அந்த மின் புத்தகப் பக்கங்களின் முனையை விரலால் தள்ளி பக்கங்களைத் திருப்பும் உணர்வை முடிகிறது, திருப்பும் போது "சரக்" என்ற அந்த காகிதச் சத்தம் கூட வருகிறது.  எப்படி இதற்கெல்லாம் அடிமை ஆகாமல் இருக்க முடியும்?!

நாம தான் இப்படி ஆகிவிட்டோமென்றால் குழந்தைகளின் நிலை என்ன?  சிறு வயதிலிருந்தே எனக்கும் புத்தகங்களுக்கும் இருந்த ஒரு பந்தம் என் மகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று ஒரு கேள்வி இருக்கிறது.  அப்படி என்ன அவள் புத்தகங்கள் இல்லையென்றால் இழந்துவிடப் போகிறாள்?  பெரிதாக ஒன்றும் இல்லை.  அவள் அறிவு எந்த விதத்திலும் குறைந்துபோய்விடப்போவதில்லை.  ஆனால் சில பாரம்பரியமான அனுபவங்களை இழப்பாள். அந்த ரோட்டோர பழைய புத்தகக் கடைகளை அவள் பார்க்கவே முடியாது...மடங்கிப் போன ஒரு காகிதத்தை நேர் படுத்த கணமான புத்தகங்களை அதன் மேல் வைத்து "வெயிட் போட" தெரியாது...புத்தகப் பக்கங்களின் நடுவே மயில் இறகையும், பூக்களையும் வைத்து மூடி வைக்கத் தெரியாது...அவள் வீட்டு முன்னறையை அலங்கரிக்க புத்தக அலமாரிகள் இருக்காது...ஒரு புத்தகத்தில் அவளுடைய கையெழுத்திட்டு பரிசு கொடுக்க முடியாது...

இங்கே அமெரிக்காவில் நான் பார்க்கும், படிக்கும் விசயங்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.  இங்கே வீட்டிலும் பள்ளியிலும், குழந்தைகளுக்கு அச்சு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் என்னேரமும் ஐ பாட், ஐ போன் சகிதம் திரிந்துகொண்டிருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு தினம் இரவு நேரங்களில் நல்ல கதை புத்தகங்கள் படிக்கிறார்கள். அந்த அச்சு புத்தகங்களை தம் குழந்தைகள் தொட்டு, பக்கங்களைத் திருப்பும் போது, ஒரு புது உலகத்தைத் தொடும் உணர்வு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் என்று நம்புகிறார்கள். வண்ணங்கள், வடிவங்கள், மிருங்கங்கள் போன்றவற்றை அச்சு புத்தகங்களை பார்த்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நான் படித்த ஒரு கட்டுரையில், "படங்கள் நிறைந்த ஒரு அச்சுப் புத்தகத்தை மின் வடிவமாக மாற்றுவதில் என்ன இழப்பு இருக்க முடியும்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த Junko Yokota என்கிற சிகாகோவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொன்ன பதில் - "புத்தகத்தின் அளவும் வடிவமும் கூட அதனைப் படிக்கும் பொது உண்டாகும் உணர்வுபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான அனுபவத்தின் ஒரு பகுதியாகிறது. உதாரணத்திற்கு, அகலமான பக்கங்களை பரந்த நிலப் பரப்புகளை வர்ணிக்க பயன்படுத்தலாம். நீல வாக்கில் இருக்கும் பக்கங்களை உயரமான கட்டிடங்களைப் பற்றிய கதைகளுக்கு பயன்படுத்தலாம்.  எல்லாவற்றையும் சுருக்கி ஒரு மின் வடிவத்திற்குள் சட்டென்று அடைத்துவிட்டால் அது அர்த்தமற்றதாகப் போய்விடும்"




அச்சு புத்தகங்கள், மின் புத்தகங்கள் இரண்டுமே குழந்தைகளுக்கு முக்கியம் என்றும் பல நிபுணர்கள் கருதுகிறார்கள். "Raising a Reader" என்கிற நிறுவனத்தின் இயக்குனர் Gabrielle E.Miller என்கிற பெண்மணி, "ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சு புத்தகத்தை படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது.  உதாரணத்திற்கு, 15 அச்சு புத்தகங்களை ஒரு விடுமுறைக்கு செல்லும் போது பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது, ஆனால் Kindle ஒன்றை எடுத்துச் செல்லலாம்.  அதே சமையம், தண்ணீர் தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் kindle ஐ தூக்கிக் கொடுக்க முடியாது.  ஆனால் வினைல்(vinyl) புத்தகத்தைக் கொடுக்கலாம். இப்படி இரண்டு புத்தக வடிவங்களுக்கும் பயன்பாடு இருக்கிறது" என்கிறார். 

புத்தகங்களை இழக்க மனம் இல்லை, அதே சமையம் நவீன வாசிப்பு வசதிகளையும் புறக்கணிக்க முடியாது. பொறுமையாக யோசித்துப் பார்க்கையில், இரு தரப்பு கருத்துக்களுமே சரி என்று எனக்குப் படுகிறது. மறைந்து வரும் அச்சு புத்தக வாசிப்பின் பக்கம் மனம் சாய்ந்தாலும், தொழில் நுட்ப ரீதியாக அதி வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் வாழ்ந்துகொண்டு, ஒரு நவீன வசதியை குழந்தைகளிடமிருந்து மறைப்பது சரியல்ல. குழந்தைகள் வாசிக்கிறார்கள் என்பதே முக்கியம்.  அச்சு புத்தகமா, மின் புத்தகமா என்று நாம் கட்சி பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை. கற்றலில் புதிய வழி முறைகள் இருப்பதும், அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து பரிசோதனை செய்வதும்கூட ஒரு உற்சாகமான அனுபவம் தான்! மேலும், ஒரு புத்தகத்தின் உண்மையான மதிப்பு, அதன் உள்ளடக்கத்தில் இருக்கிறது.

மனம் சமாதானமாகிவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு வருத்தம் எஞ்சியிருக்கிறது.  இன்னும் 50 வருடங்கள் சென்ற பின்னர், Jorge Luis Borges போல சொர்க்கம் என்பது நூலகம் பொல் இருக்கும் என்று சொல்லும் அளவு  புத்தகங்களை நேசிப்பவர்கள் யாரேனும் இருப்பார்களா?! 




















show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?! ...மேலும் வாசிக்க
அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!



எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள்.  "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்" என்று எல்லோரும் சொன்னார்கள்.  அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டேன். உலகம் மாறிவிடும் என்று அவர்கள் சொன்னதற்கு நான் செய்து கொண்ட அர்த்தம்...பல இரவுகள் தூக்கம் தொலைக்க நேரிடும், எனக்கென்று நேரம் இருக்காது, முன்பு போல் ஜாலியாக வெளியே சுற்ற முடியாது, எந்த நேரமும் குழந்தையைப் பற்றியே சிந்தனை இருக்கும்....போன்றவைதான்.  ஆனால் எவ்வளவு சுலபமாகத் தாய்மையை எடைபோட்டுவிட்டேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை...உலகம் மாறும் என்று சொன்னவர்கள், எப்படியெல்லாம் மாறும் என்பதைச் சொல்லவில்லை. என் மூலமாக உலகத்திற்கு வரும் ஒரு குழந்தை, என் உலகத்தை எப்படி மாற்றமுடியும் என்று பார்த்துவிடுகிறேன் என்று பிறக்காத குழந்தையிடம் சவால் விட்டேன்.



 ஆனால் பிரசவத்தின் போது அந்த மருத்துவமனை கட்டிலில் வேறு ஏதோ ஒரு மர்மம் ஒவ்வொரு தாய்க்கும் நடக்கிறது என்று நினைக்கிறேன்.   திருமணம் ஆனபின் கூட ஒரு பெண் வலுகட்டாயமாக தன்னை மாற்றிக்கொள்கிறாள் அந்த புதிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல.  ஆனால் தாயாகும் போது அவள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை! தன்னை அறியாமலேயே தானாக மாறிவிடுகிறாள்.  சில மாதங்கள் சென்றபின் தான் அந்த மாற்றத்தையே உணரமுடிகிறது.  நல்லவிதமான மாற்றங்களைப் பற்றி எழுத வேண்டியதில்லை.  அது எல்லா தாய்மார்களுக்கும் தெரிந்ததே.  ஆனால் நான் எதிர்பாராத  எதிர்மறையான மாற்றங்கள் சில என்னுள் ஏற்பட்டது.  எனக்கு பட்டியல் போடுவது மிகவும் பிடிக்கும்.

அப்படி நான் உணர்ந்த சில விசித்திர/எதிர்மறை மாற்றங்கள் இதோ:
  • முதலில் நான் உணர்ந்த மாற்றம் - எனது சிந்தனைகளில்.  தாய்மை என் சிந்தனைகளை முடமாக்கவில்லை, ஆனால் அதன் திசையை மாற்றிவிட்டது.  இப்பொழுதெல்லாம், குழந்தைகள், அவர்களின் சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் - இவற்றைப் பற்றியே நான் அதிகம் சிந்திக்கிறேன். இந்த வார நட்சத்திர பதிவுகளை எழுத உட்கார்ந்தபோது கூட, எனக்கு தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்ற தலைப்புகளில் எழுதுவதற்குத் தான் சரளமாக கருத்துக்கள் வந்து விழுந்தன.
  • என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் எங்கே ஓடிப் போய் ஒளிந்துகொண்டன என்றே தெரியவில்லை!  எனக்குப் பிடித்த உணவுவகைகள், என்னுடைய சுகமான எழுதும் அனுபவம், நிதானமாக காப்பி குடித்துக்கொண்டே இணையத்தில் மேயும் நேரம், என் அலங்கார கைப்பை...என்று இவை எல்லாமே பின் தள்ளப்பட்டுவிட்டன...என் இலக்குகளும், முன்னுரிமைகளும் என்னை கேட்காமலேயே தானாக மாற்றி  வரிசைபடுத்தப்பட்டன...ஆனால் என்ன ஆச்சரியம்...இதனால் எனக்கு துளி அளவும் வருத்தம் ஏற்படவில்லை! 
  • சற்று சுயநலக்காரியாகவும் மாறினேன்.  பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் சற்றே மறந்திருந்த உறவுகளின் பால் மீண்டும் கவனம் திரும்பியது.  என் மகளுக்கு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணன் என்று எல்லா உறவுகளின் அன்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேன்.
  •  என் மொழி உணர்வைத் தாண்டி மகள் "mommy" என்று என்னை அழைப்பதைக் கேட்டு இரசித்தேன்!   அவள் ஆசையாக அப்படி அழைக்கும் பொழுது, அம்மா என்று அழைக்கச் சொல்லி திருத்த மனம் வரவிட்டாலும், அதன் அவசியத்தை மறக்கவில்லை. 
  • என்னுள் இருந்த பெண்ணியமும் இறந்தது.  குழந்தைப் பிறப்பைப் போல் வேறு ஒரு அற்புதம் ஒரு பெண்ணிற்கு நிகழவே முடியாது என்று ஆழமாக நம்புகிறேன்.  தினம் மகளுக்காக பிசைந்த சாதத்தை ஒரு பருக்கை விடாமல் அவளுக்கு ஊட்டி முடிப்பதையும், அவளுடைய உடைகளை துவைத்து, மடித்து அழகாக வரிசைப் படுத்துவதையுமே எனது மிகப் பெரிய சாதனைகளாக நினைக்கிறேன்!
  • கூடுதலாக ஒரு தாய்-தந்தை அற்ற குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற என் பல வருடக் கொள்கை இடிந்தது.  என் மகளை நேசிப்பது போல மற்றொரு குழந்தையை என்னால் நேசிக்க முடியுமா என்கிற ஐயம் மனதில் வந்துவிட்டது.  இதை மிகுந்த குற்ற உணர்வோடுச் சொல்கிறேன்.
  •  சில தோல்விகள் என்னை பயமுறுத்துகின்றன...என் மகள் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது,  அவளை என் கணவரிடம் விட்டுவிட்டு நான் வெளியில் செல்லும் நேரங்களில், "அம்மா எங்கே?" என்று அவள் கேட்காதபோது, என் சொல் பேச்சை மதிக்காதபோது, ஒரு தாயாக நான் தோல்வியடைகிறேன்...
  • எப்பொழுதுமே அன்றைய தினத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நான், இப்பொழுது என் வயோதிகத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன்.  எனக்கு எழுபது வயதாகி , உடல் நொடிந்து போகும்போது, மகளுக்கு  அப்போது திருமணம் ஆகி, கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள் என்ற யதார்தத்தைத் தாண்டி, அவளை என்னால் பார்த்துக்கொள்ள முடியாதே என்று அர்த்தமற்று கவலைப்படுகிறேன்.  

எத்தனை தோல்விகள், பயங்கள், வருத்தங்கள் இருந்தால் என்ன?   முப்பது பேருக்கு மத்தியில், அவள் என்னைத் தேடி, ஒவ்வொருவராக அன்னாந்துப் பார்த்து, அது நான் இல்லை என்று தெரிந்ததும் முகம் வாடி, கடைசியாக என்னைப் பார்ததும் முகம் பளிச்சிட ஓடி வந்து கட்டிக்கொள்கையில், வாழ்க்கையில் அத்தனை வெற்றிகளும் எனக்குக் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்.

தாய்மை வெல்க!

பி.கு:

எனது பிரசவ அனுபவத்தைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இதோ:
என் பிரசவ அறையில் - 1
என் பிரசவ அறையில் - 2















  












show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்திற்கு "முகப்புத்தகம்"(facebook) என்று பெயரிட்டது சற்று விந்தையாக ...மேலும் வாசிக்க


முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகத்திற்கு "முகப்புத்தகம்"(facebook) என்று பெயரிட்டது சற்று விந்தையாக இருக்கிறது.  ஆனால் இந்த ஊடகம் எந்த அளவு நம்மிடையே பிரபலாமாகிவிட்டது!   முகப்புத்தகத்திற்கு எவ்வளவோ ஆக்கபூர்வமான பயன்கள் இருக்கின்றன.  வியாபாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கும் பலர் இந்த ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் நான் உட்பட, நம்ம ஊர் பெண்கள் முகப்புத்தகத்தை ஒரு பொழுது போக்குத் தளமாகவே பயன்படுத்துகிறோம். எனது முகப்புத்தகத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர்.  குடும்பத் தலைவிகள், அல்லது வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்.  இவர்களுடன் தினமும் முகப்புத்தகத்தில் தொடர்பில் இருப்பது ஒரு சுவையான அனுபவமாக இருக்கிறது.

வீட்டு வேலையெல்லாம் முடித்த பிறகு, குழந்தைகள் தூங்கிய பிறகு ஒரு ஐந்து நிமிடம் முகப்புத்தகத்தினுள் நுழைந்து,  யார் என்ன புதிதாக செய்தி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு "likes" போட்டுவிட்டு பின் தூங்கப் போவது பல பெண்களின் வழக்கமாக இருக்கிறது.  சிலர் காலை எழுந்தவுடன் சட்டென்று ஒரு எட்டு பார்த்துவிடுகிறார்கள்.  கொஞ்சம் "tech savvy" ஆன பெண்கள், வெளியில் இருக்கும்போதே, தன் செல்பேசி மூலமாகவே முகப்புத்தகத்தைப் பார்த்து செய்திகளையும் போட்டுவிடுகிறார்கள்.  நீண்ட நாட்கள் சந்திக்காதவர்கள் சந்தித்துக்கொண்டால் கூட முகப்புத்தகத்தில் அவர்கள் இட்ட செய்தியைக் குறிப்பிட்டு "நீங்க வீடு வாங்கிட்டதா முகப்புத்தகத்தில் போட்டிருந்தீங்க, வாழ்த்துக்கள்" என்கிற ரீதியில் அவர்களின் உரையாடலுக்கு உந்துகோலாக முகப்புத்தகம் இருக்கிறது.

இவர்கள்(நான் உட்பட) முகப் புத்தகத்தில் என்னதான் செய்கிறார்கள்?  இதோ ஒரு "டாப் டென்" பட்டியல்!
  1. நிறைய பெண்கள் தம் குழந்தைகளின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் இடுவதை விரும்புகிறார்கள்.  அடிக்கடி பார்த்துக்கொள்ளாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் வளர்ச்சியை நாம் தெரிந்துகொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது.  
  2. 80 களிலும் 90 களிலும் வந்த திரைப்படப் பாடல்களின் யூ ட்யூப் வீடியோக்களைப் போட்டு பழைய கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறார்கள்.
  3. எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.
  4. பிறந்தநாட்கள், வருடப்பிறப்பு போன்ற விசேசங்களுக்கு முகப்புத்தகத்திலேயே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு தொலைபேசாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்.
  5. அன்று வீட்டில் செய்த ஒரு உணவு வகையை புகைப்படம் எடுத்துப் போட்டு,  வீட்டில் கணவர் பாராட்டாவிட்டாலும், முகப்புத்தக நண்பர்களெல்லாம் "ஆகா பார்க்கவே அருமையாக இருக்கிறதே" என்றும் "எச்சில் ஊறுகிறதே" என்றும் பின்னூட்டம் இடுகையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.  
  6. வீட்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால், அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்து,  நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளிலும், பிரார்த்தனைகளிலும் சற்று மனம் சமாதானமடைகிறார்கள். 
  7. மின் அஞ்சல்களை விட முகப்புத்தகத்தில் பிரைவெட் மெசேஜ் அனுப்புவதையே அதிகம் விரும்புகிறார்கள்.
  8. பழைய கல்லூரி நண்பர்களின் முதிர்ந்த தோற்றத்தைப் பார்த்து "ஐயோ இப்படி வயசாகி போய்விட்டதே" என்று மனதிற்குள் வருத்தப்படுகிறார்கள்.  நமது புகைப்படத்தைப் பார்த்து அந்த பக்கத்திலும் அப்படியே நினைப்பார்கள் என்பது மறந்து போயிருக்கும்.  
  9. ஒரு பாட்டுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் கலந்துகொண்ட சிறு சாதனைகளை பெருமிதத்துடன் அறிவித்து, நண்பர்களின் பாராட்டுக்களை சேகரித்து மகிழ்கிறார்கள்.
  10.  பள்ளியின் முதல் நாள்,  சைக்கிள் ஓட்டிய முதல் நாள், காது குத்திய நாள் என்று குழந்தைகள் கடந்த மைல்கற்களை பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள். 
இதில் எதையுமே செய்யாமல், முகப்புத்தக கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு.  நான் இந்தப் பட்டியலில் இருப்பவற்றை ஒன்று விடாமல் செய்துகொண்டு தான் இருக்கிறேன்.  இந்த வாரம் எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்!  200 மில்லியன் நபர்கள் கொண்ட இந்த ஊடகத்தில் பிரபலமாக இருப்பது முக்கியம், இல்லையா?





show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க